வெளிச்சக்கீற்று

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
யசோதினியை அந்தப் பார்வை பாதிக்காமல் இல்லை. ஆனால், பெரிதாகப் பழக்கம் இல்லாதவர்களோடு பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று தெரியாதா அவனுக்கு? அவன் அனுப்புவானா, தன் அக்கா மகளை?

அதன்பிறகு, பள்ளிக்கூட வாசலில் கண்டாலும் அவளைத் திரும்பியும் பார்ப்பதில்லை அகத்தியன். அவள் அவனைக் கவனிப்பதேயில்லை. சின்னவர்கள் பள்ளிக்கூடத்தில் காண்கிற பொழுதுகளில் கதைத்து, விளையாடி என்று நல்ல நண்பர்களாகியிருந்தனர்.

இப்படிக் கடந்த நாள்களில் அகத்தியனுக்கு ஒரு குறிப்புப் பொருந்தி வந்தது. அந்தப் பெண்ணும் விவாகரத்தானவள்; நல்ல குடும்பம்; வசதியும் இவர்களைப் போன்றுதான். இந்தமுறை, அனுபவம் கற்றுத் தந்த பாடமாக, கஜேந்திரனைக் கொண்டு பெண் எப்படியானவள், ஏன் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது என்று அனைத்தையும் விசாரித்துத் தெளிந்தாள் இந்திரா. பொருத்தமும் பொருந்தி இருந்தது.

அவளுக்கு மிகுந்த சந்தோசம். இது சரியாக அமைந்துவிட்டால் சவீதாவின் வரவுக்கும் சேர்த்தே முடிவு கட்டிவிடுவாளே! ஆவலும் எதிர்பார்ப்புமாக அகத்தியனிடம் ஃபோட்டோவைக் காட்டினாள்.

அவன் கையில் கூட வாங்க மறுத்தான்.

“அக்கா, எனக்கு இதெல்லாம் வேண்டாம் எண்டு உங்களுக்கு எத்தின தரம் சொல்லுறது?”

“என்ன வேண்டாம்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்பிடித் தனியாவே இருக்கப் போறாய்?” என்றுகொண்டு வந்தார் சிந்தாமணி. இத்தனை நாள்களாக எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் முடிவிலேயே நிற்கிறானே என்கிற கோபம் அவருக்கு.

“என்னம்மா கதைக்கிறீங்க? நான் எங்க தனி? நீங்க, அக்கா, அத்தான், பிள்ளைகள் எல்லாரும் எங்க போய்ட்டீங்க?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“ஆக, காலத்துக்கும் நீ எங்களை நிம்மதியா இருக்கவிடப் போறேல்ல.” என்றவர், “உனக்கு விளங்கேல்லையாம்மா? அவன் மறைமுகமா எங்களுக்குத் தண்டனை தாறான். நீங்க பாத்துத் தந்த பொம்பிளையத்தான் கட்டினான், என்ர வாழ்க்கை எப்பிடி நாசமாப் போச்சுது பாத்தீங்களா எண்டு கேக்காமக் கேக்கிறான்!” என்று சொன்னார் மகளிடம்.

இந்திராவின் மனம் கலங்கிப் போயிற்று. அப்படித்தானா என்று அவள் பார்க்க, “அம்மா!” என்று அதட்டினான் அகத்தியன்.

“என்ன விசர்க் கதையெல்லாம் கதைக்கிறீங்க? என்ர தாய் சகோதரத்தைப் பற்றி அப்பிடி நினைப்பனா நான்?” என்றவன் குரலில் ஆத்திரத்தோடு சேர்ந்து ஆதங்கமும் நிறைந்திருந்தது.

சிந்தாமணி எதற்கும் அசைவதாக இல்லை. “சும்மா நடிக்காத தம்பி! நான் உண்மையாத்தான் சொல்லுறன். உனக்கு எங்களில கோபம்தான். அதுதான் இவ்வளவு பிடிவாதமா இருக்கிறாய். இல்லாம, வயித்தில பிள்ளையோட இருக்கிறவள், அலஞ்சு திரிஞ்சு உனக்கு எண்டு ஒருத்தியத் தேடிக்கொண்டு வந்தா, கொஞ்சம் கூட யோசிக்காம வேண்டாம் எண்டு சொல்லுவியா?” என்றார் அவர்.

“நான்தான் வேண்டாம் எண்டு சொல்லுறனே. பிறகு என்னத்துக்கு அக்கா தேவை இல்லாம அலையிறா?” என்றவனை இடைமறித்து, “உண்மையாவாடா தம்பி? அதுதான் இவ்வளவு பிடிவாதமா நிக்கிறியா? என்னாலதான் உன்ர வாழ்க்கை இப்பிடி ஆயிற்றுது எண்டு நினைக்கிறியா?” என்று கண்ணீர் வழியக் கேட்ட தமக்கையைக் கண்டு, பதறியே போனான்.

“என்னக்கா நீங்க? அம்மாதான் யோசிக்காமக் கதைக்கிறா எண்டா நீங்களும் யோசிக்க மாட்டீங்களா? நான் அப்பிடி நினைப்பனா?”

அவன் சொல்வதை விளங்கிக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. அன்னையின் வார்த்தைகளிலேயே சிக்குண்டு நின்றாள்.

“அப்பிடி இல்லை எண்டா ஓம் எண்டு சொல்லனடா. உன்ன நினச்சு நினைச்சே எனக்கு ஏதும் ஆகிடுமோ எண்டு பயமா இருக்குத் தம்பி.” என்றதும் நடுங்கியே போனார் சிந்தாமணி.

“போதுமா உனக்கு? இப்பச் சந்தோசம்தானே? வாயும் வயிறுமா இருக்கிறவள் சொன்னதைக் காது குளிரக் கேட்டுட்டாய் எல்லோ! இனி நிம்மதியா இரு!” என்று அவர் கோபத்தில் குமுற, தலையைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.

சும்மாவே, காலம் கடந்து அவள் தாய்மையுற்றது எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருக்க, என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்?

அதற்குமேல் தன் பிடியில் நிற்கத் தைரியமற்று, அது கொடுத்த செயலற்ற கோபமும் சேர, “என்னவாவது செய்து துலைங்கோ! ஆனா, திரும்பவும் ஏதாவது நடக்கட்டும். அதுக்குப் பிறகு என்னக் கண்ணாலயும் பாக்க மாட்டீங்க!” என்றுவிட்டுப் போனான் அவன்.

அன்னை, மகள் இருவர் முகத்திலும் கண்ணீர் வழிந்தது. அவன் சம்மதித்துவிட்டதை எண்ணி மகிழ முடியவில்லை. அடுத்த கட்டத்துக்கு அந்தத் திருமணப் பேச்சு வார்த்தையை நகர்த்த அவர்கள் ஆயத்தமானபோது, அங்கிருந்து வேண்டாம் என்கிற பதில் வந்தது.

அப்படியே அமர்ந்துவிட்டாள் இந்திரா.

“ஏனாம்?” என்ற கேள்விக்கு, முதல் மனைவி இவனின் அத்தானின் தங்கை என்பது காரணமாம் என்றார் புரோக்கர்.

அவர்களின் பெண் முதல் திருமணத்தில் பட்டதே போதுமாம். முதல் மனைவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, நல்லது கெட்டதுகளில் அவளைச் சந்தித்துக்கொண்டு நிம்மதியான ஒரு வாழ்க்கை அமையாதாம் என்று சொன்னபோது, இதென்ன பேச்சு என்று திகைத்துப் போனாள்.

சிந்தாமணியுமே இப்படி ஒரு சிக்கல் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதையறிந்த அகத்தியனுக்கு அப்பாடி என்றுதான் இருந்தது.


*****

அந்த வாரம், வியாழனும் வெள்ளியும் போயா நாள்களாக வர இருந்ததில் புதன்கிழமையோடு பள்ளிக்கூடம் முடிந்து, நீண்ட வார இறுதி கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்தனர் பிள்ளைகள். அன்று திங்கட்கிழமை. தூரிகாவை அழைத்துச் செல்ல வந்த யசோதினியிடம் ஓடிவந்தாள் தாமினி.

அவள் வந்த வேகத்தில் முறுவல் அரும்ப, “என்னம்மா?” என்று வினவினாள் யசோ.

“அன்ட்ரி, பிறகு ஒரு நாளைக்குப் பாப்பம் எண்டு அண்டைக்குச் சொன்னனீங்க எல்லா. இப்ப நாலு நாள் லீவு வருது. தூரி அக்காக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுதாம். நான் கேட்டுட்டன். ஹோம் வேர்க் தந்தாலும் செய்ய நாலு நாள் டைம் இருக்கு. அதால புதன்கிழமை என்னோட விடுறீங்களா?” என்றாள் கொஞ்சும் குரலில்.

இப்படி, எந்தப் பக்கத்தாலும் மறுக்க வழியற்ற நிலையில் வைத்துக் கேட்பாள் என்று எதிர்பாராத யசோ, சட்டென்று பதில் சொல்ல வராமல் நின்றாள். என்ன சொல்ல என்கிற தடுமாற்றத்துடன் அகத்தியனைப் பார்த்தாள்.

அவனுக்கு அவள் திணறல் மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. தன் மருமகளின் புத்தி சாதுர்யத்தை மெச்சிக் கொண்டு, இப்போது என்ன சொல்வாய் என்பதுபோல் அவளைப் பார்த்தான்.

“மாட்டன் எண்டு சொல்லக் கூடாது அன்ட்ரி. நீங்கதான் பிறகு ஒருநாள் எண்டு சொன்னனீங்க. பேச்சு மாறக் கூடாது.” என்றதும் சிரிப்பரும்பிற்று.

இதற்குள் தூரிகாவும் வந்திருந்தாள். அவள் முகத்திலும் அம்மா மறுத்துவிடக் கூடாது என்கிற தவிப்பிருக்க, “என்னால இடைல வந்து கூட்டிக்கொண்டு வரேலாது. கூட்டிக்கொண்டு போனா உங்கட மாமாதான் கொண்டுவந்து விடவும் வேணும். அது அவருக்குச் சிரமம் எல்லா…” என்றவளை இடைமறித்து, “அத நான் சொல்லோணும்.” என்றான் அகத்தியன்.

“புதன்கிழமை உங்களைக் கூட்டிக்கொண்டு போக உங்கட அம்மா இங்க வர வேண்டாம். நீங்க பள்ளிக்கூடம் முடிய அப்பிடியே எங்களோடயே வாங்கோ. பிறகு ஒரு ஆறுமணி போல மாமா கொண்டுவந்து உங்கட அம்மாட்ட விட்டுவிடுவன்.” அன்றைக்கு அவள் செய்தது போன்று, வேண்டுமென்றே தூரிகாவிடம் சொன்னான்.

இதென்ன சிறுபிள்ளைத்தனம் என்று சிரிப்பும் சினமும் ஒருங்கே தோன்ற, “இல்ல, புதன்கிழமை நான் வந்தபிறகே நீங்க கூட்டிக்கொண்டு போங்கோ.” என்று, அவனை நேராகப் பார்த்துச் சொன்னாள் யசோ.

“என்னத்துக்குச் சும்மா தேவையில்லாம அலைய? ரெண்டு பேரையும் ஏத்தினதும் நான் சொல்லுறன், ஃபோன் நம்பர் தாங்க.” இப்போது அவனும் அவளிடம் நேராகவே பேசினான்.

இவனிடம் கொடுப்பதா என்று அவள் யோசிக்கையிலேயே, “077…” என்று ஆரம்பித்து, கடகடவென்று அன்னையின் இலக்கங்களைச் சொல்லி முடித்திருந்தாள் தூரிகா.

‘கடவுளே இந்தப் பிள்ளையோட…’ தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது யசோக்கு. அந்தரம் ஆபத்திற்கு உதவும் என்று பாடமாக்க வைத்தது இப்படியா அவளை மாட்டிவிட வேண்டும்?

அவள் முகத்தைப் பார்த்த அகத்தியனுக்கு உதட்டோரம் மெல்லிய சிரிப்பில் துடித்தது. எப்போதும் அழுத்தமாக மட்டுமே பார்த்துப் பழகியவளின் இந்தச் செய்வதறியாத தடுமாற்றம், பார்க்க நன்றாய் இருந்தது. பார்வையால் அவளைச் சீண்டிவிட்டு, அவள் நம்பரைப் பதிந்து, அங்கு வைத்தே அவளுக்கு அழைத்துச் சரி பார்த்துக்கொண்டு தாமினியோடு புறப்பட்டான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 10


அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமினிக்கு ஏழாவது பிறந்தநாள். அகத்தியன் குடும்பத்தில் அவனைத் தவிர்த்து, கஜேந்திரன் உட்பட மற்ற நால்வரும் யசோதினியைத் தனித்தனியாக அழைத்திருந்தனர்.

சிந்தாமணிக்கு முக்கியமான நேரத்தில் உதவிய அருமையான பெண் என்கிற காரணம். கூடவே, அன்றைய சறுக்கலை நேர் செய்ய விரும்பினார். இந்திராவுக்கு அன்னைக்கு உதவியவள். அதோடு, மகளின் நண்பி தூரிகா என்பது. தாமினிக்குத் தன் புதிய தோழி, தன் பிறந்தநாளுக்கு வந்தேயாகவேண்டும் என்கிற விருப்பம். நீங்களும் அழைத்தால்தான் வருவாள் என்று மனைவியும் மகளும் சொன்னதில் கஜேந்திரனும் இவர்களோடு சேர்ந்துகொண்டிருந்தான்.

இத்தனை பேர் விரும்பி அழைத்ததில் யசோதினியாலும் மறுக்க முடியாமல் போயிற்று.

அதுவும், அகத்தியனோடு பார்மசிக்கே வந்த தாமினி, “ப்ளீஸ் ப்ளீஸ், நீங்க தூரிகா அக்காவையும் சிந்தூரியையும் கூட்டிக்கொண்டு வரவேணும் அன்ட்ரி. இல்லாட்டி நான் கேக் வெட்டவே மாட்டேன்.” என்று உரிமையாய்ச் சொன்னது, அவள் மனத்தை நெகிழ்த்தியிருந்தது.

அது ஞாயிற்றுக்கிழமை என்பதும், தன் பிள்ளைகளும் எங்கேயும் செல்வதில்லை என்பதும் சேரச் சம்மதித்தாள். எல்லாவற்றையும் விட, தன் தமக்கை மகள் இந்த முறையும் கெஞ்சுகிறாள், இவள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்கிற பார்வையோடு நின்றிருந்த அகத்தியனின் முன்னால், மறுக்க முடியாமல் போயிற்று.

“சரி சொல்லுங்கோ, பிள்ளைக்கு என்ன கிஃப்ட் வேணும்?” என்று கேட்டபோது, “நீங்க வந்தாலே போதும் அன்ட்ரி.” என்று அவள் பதிலளித்தது, கண்களைப் பனிக்கச் செய்திருந்தது.

சின்ன பெண். சொன்னதன் உண்மைப் பொருள் தெரியாமல் கூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படி அவளையும் பிள்ளைகளையும் முக்கியமானவர்களாகக் கருதி, பிரத்தியேகமாக அழைப்பவர்கள் யாருமில்லாது இருந்தவள் தன்னைக் கட்டுப்படுத்த மிகவுமே போராடினாள்.

அதை, முன்னால் நிற்பவனிடம் காட்டாமல் மறைத்தபடி, “சரி, கட்டாயம் வருவம். சரியா?” என்றதும், “தேங்க்ஸ் அன்ட்ரி, தேங்க்ஸ் அன்ட்ரி, தேங்க்ஸ் அன்ட்ரி!” என்று துள்ளிக் குதித்தாள் சின்னவள்.

அவள் பார்வை, அவளையும் மீறி அகத்தியனிடம் தாவிற்று.

அதுவரை, அவளையே கவனித்துக்கொண்டு இருந்தவன், வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டு, “அதுதான் உங்கட அன்ட்ரி மனது வச்சு ஓம் எண்டு சொல்லிட்டாவே. இனியாவது போவமா? நேரமாகுது.” என்றபடி மருமகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

அதென்ன மனது வைத்து? குத்திக் காட்டுகிறானா? மறைமுகமாக அவளோடு தனகிக்கொண்டே இருக்கிறான். என்றைக்காவது ஒருநாள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவள் குறித்துக் கொள்கையில் அவன் மட்டும் திரும்பி வந்தான்.

அவள் கேள்வியாய் நோக்க, “எத்தினையோ நாளா இதைச் சொல்லோணும் எண்டு நினைச்சிருக்கிறன். ஆனா, நான் எப்ப கதைக்க வந்தாலும் என்னவோ வில்லனைப் பாக்கிற மாதிரியே பாப்பீங்க. அதால எனக்கும் சொல்லேலாமப் போயிற்றுது. அண்டைக்கு அம்மா ஆஸ்பத்திரில வச்சுக் கதைச்சதைப் பெருசா எடுக்காதீங்கோ. வயதான மனுசி. வருத்தத்தில வேற இருந்தவா. யோசிக்காமக் கதைச்சிட்டா. நீங்க போனபிறகு, அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது எண்டு சொல்லிக் கவலைப்பட்டவா. இனி, அப்பிடி எதுவும் நடக்காது. அத மனதில வச்சு வராம இருந்திடாதீங்க.” என்றுவிட்டுப் போனான் அவன்.

போகிறவனையே பார்த்திருந்தாள் யசோ. வருகிறேன் என்று சொல்லிவிட்டபோதும், அன்றைய சிந்தாமணியின் பேச்சினால் போகத்தான் வேண்டுமா என்கிற கேள்வி, எழுந்துகொண்டேதான் இருந்தது. அவன் தந்த விளக்கம் அதை அகற்றிவிட்டிருந்தது.

வீட்டினரிடம் பெரிய விளக்கங்கள் எதுவும் சொல்லாமல், தூரிகாவின் பள்ளிக்கூடத் தோழி என்று மட்டும் முடித்துக்கொண்டாள் யசோ.

பிள்ளைகளை அழகாகத் தயார் செய்தாள். அவளும் நல்ல ஆடைகளையே அணிந்துகொண்டாள். இப்படி, விழாவுக்கென்று அவர்கள் மூவருமாகப் புறப்பட்டுப் போவது நன்றாகவே இருக்க, நிறைய நாள்களுக்குப் பிறகு உற்சாக மனநிலையில் இருந்தாள்.

சரியான நேரத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். ஒருசில குடும்பங்கள் ஏற்கனவே வந்திருந்தார்கள். வீட்டுக்குள் நுழைகையில் இருந்த தயக்கம், இந்திராவும் தாமினியும் வாசலுக்கே வந்து வரவேற்றதில் அகன்று போயிற்று. அவளுக்குத் தெரிந்த முகமாகச் சுசீலாவும் இருந்ததில் இன்னுமே இயல்பாகினாள்.

குழந்தைகள் உடனேயே சேர்ந்துகொண்டனர். இவள் அவர்களுக்கு உதவியாகச் சமையற்கட்டுக்கு நகர்ந்துகொண்டாள்.

கேக், கேக் வெட்டும் இடம் எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டது. தாமினி கூடத் தயாராகிவிட்டாள். ஆனாலும் விழா ஆரம்பமாகக் காணோம். இன்னும் ஏன் தாமதிக்கிறார்கள் என்று யோசித்தாள்.

“அவளே நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்து நிக்கிறாள். இவனுக்கு என்னவாம்?” கைப்பேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்கதவால் வெளியே நடந்த இந்திரா புறுபுறுத்தது, இவள் காதிலும் விழுந்தது.

அப்போதுதான் அகத்தியன் அங்கு இல்லை என்பதையே கவனித்தாள். ஏனோ? அக்கா மகளைச் சொந்தப் பெண்போல அப்படிப் பார்த்துக்கொள்வான். அவளின் பிறந்தநாளுக்கு நிற்காமல் எங்கே போனான்?

அவளுக்குத் தெரிந்தவர் அங்கு சுசீலாதானே. அவள் அவரைப் பார்க்க, “மெரூன் கலர் சுடிதார் போட்டுக்கொண்டு, என்னவோ சொந்த வீட்டில இருக்கிற மாதிரி இருக்கிறாள் பாருங்கோ ஒருத்தி. அவள்தான் அகத்தியன்ர முதல் மனுசி. இந்திரான்ர மனுசன்ர தங்கச்சி. அவள் வந்திருக்கிறாள் எண்டுதான் அவன் வரேல்ல.” என்று, காதுக்குள் ரகசியம் சொன்னார் அவர்.

‘ஓ!’ என்றவள் பார்வை, மற்றவர்களின் கவனத்தைக் கவராத அளவில் அவளை அளவிட்டது. குறை சொல்லும் அளவில் எதுவுமற்ற அழகான பெண். எதற்கு இருவரும் பிரிந்தார்கள்? அவள் சிந்தனையை அகத்தியனின் வரவு தடை செய்தது.

அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தைக் கண்டு இவளுக்கே இனம்புரியாத பயம் உண்டாயிற்று. ஏன் இப்படி இருக்கிறான்?

“ஆசையாக் கட்டிச் சந்தோசமா வாழ்ந்தவனம்மா. நம்ப வச்சுக் கழுத்தறுத்தா தாங்குவானா? அதுதான் அவனுக்கு அவளின்ர முகம் பாக்கவே விருப்பம் இல்ல.” மற்றவர்களின் காதில் விழாதவாறு, சுருக்கமாக அவனுக்கு நடந்ததைச் சொன்னார் சுசீலா.

அவளால் நம்பவே முடியவில்லை. இப்படியெல்லாமா ஏமாற்றுவார்கள்? எவ்வளவு பாவம் அவன்? உயிராய் வாழ்ந்த நபரை வெறுப்பதே கொடுமை. அப்படி வெறுத்து ஒதுக்கியவரைக் கண்முன்னால் வைத்துக்கொண்டு, சாதாரணமாக இருப்பது என்பது முடியவே முடியாத ஒன்று. அவன் மீது மெல்லிய இரக்கம் உண்டாயிற்று. தன்னையறியாது அவனையே கவனித்தாள்.

“அகத்தியன் அங்கிள்!” விளையாடிக்கொண்டிருந்த தூரிகா, அவனைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடிப்போனாள். “நாங்க வந்திட்டம் பாத்தீங்களா.” என்றாள் உற்சாகக் குரலில்.

அவன் முகம் அப்படியே மலர்ந்துபோயிற்று. அழகான சிவப்பு வண்ண ப்ரொக் அணிந்து, முகமெல்லாம் பூவாக மலர்ந்திருக்கச் சொன்னவளைக் கண்டு, பற்கள் தெரியச் சிரித்தான்.

“தூரிச் செல்லம் வருவா எண்டு எனக்கும் தெரியுமே!”

“ஆனா, நீங்கதான் லேட். நாங்க இன்னும் கேக் வெட்டாம உங்களைத்தான் பாத்துக்கொண்டு இருக்கிறம்.” அவனிடமே அவனை முறையிட்டாள்.

“சொறி செல்லம். வேலைய முடிச்சுப்போட்டு வாறதுக்கிடையில நேரம் போயிற்றுது. ஒரு அஞ்சு நிமிசம் பொறுங்கோ, மாமா ஓடி வாறன்.” விழாவுக்கு வந்திருந்தவர்களிடமும் அதையே சொல்லிவிட்டு, அவசரமாக அறைக்கு ஓடினான்.

அடுத்த பத்தாவது நிமிடம் வெளியே வந்தவன் குளித்து, வேறு உடையில் இருந்தான்.

தாமினி கேக் வெட்டினாள். எல்லோருக்கும் ஊட்டிவிட்டு வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டாள். அவர்கள் எல்லோரும் குடும்பமாக ஃபோட்டோவுக்கு நிற்க, அகத்தியனின் அருகில் வந்து நின்றாள் சவீதா. அடுத்த நொடியே, நெருப்புப் பட்டவன் போன்று விலகி, தமக்கையின் பக்கம் வந்து நின்றுகொண்டான் அகத்தியன்.

அங்கிருந்த அனைவருக்கும் ஒருநொடி என்ன செய்வது என்று தெரியாத திகைப்பு. எல்லோருக்கும் அவர்களுக்குள் நடந்தவை அனைத்தும் தெரியும். கஜேந்திரன் கூட முகச் சுளிப்புடன் அன்னையைப் பார்த்தான். சுசீலாதான் வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஃபோட்டோ எடுத்தாச்சு எண்டால் சாப்பாட்டக் குடுக்கலாம். சின்னாக்களுக்குப் பசிக்கப் போகுது.” என்று சொல்லிச் சூழ்நிலையையும் சமாளித்தார்.

அதன்பிறகும் சவீதா சளைக்கவில்லை. அகத்தியனின் கண்ணில் படுவதுபோல் அங்குமிங்கும் நடப்பதும், அவன் இருக்கும் இடத்திலேயே இருப்பதும், அவனிடம் பேச்சுக்கொடுக்க முயல்வதுமாக இருந்தாள்.

அவளையே கவனித்த சிந்தாமணிக்கும் இந்திராவுக்கும் அகத்தியன் எப்போது வெடிப்பானோ, என்னாகுமோ என்று உள்ளுக்குள் பெரும் பதற்றம். வந்தவர்களைக் கவனிக்கக்கூட முடியாமல் தடுமாறினர்.

எல்லாவற்றையும் மௌனமாகக் கவனித்துக்கொண்டிருந்த யசோவுக்கு அகத்தியன் மீது இரக்கம் சுரந்தது. வெளியே எதையும் காட்டிக்கொள்ளாத போதும், தனக்குள் எந்தளவுக்குக் கொந்தளித்துக்கொண்டு இருப்பான் என்று ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.

வந்தவர்கள் விருந்துண்டு, பலகாரப் பைகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டனர். யசோவும் நேரமாவதை உணர்ந்து புறப்பட ஆயத்தமானாள்.

“கேக்காமையே எப்பவும் உதவி செய்றதுக்கு நன்றியாச்சி.” விருந்தினராக வந்திருக்கிறேன் என்று அமர்ந்திருக்காமல், வீட்டுப்பெண்ணைப் போன்று அவள் செய்த உதவிகளைக் கவனித்திருந்த சிந்தாமணி உணர்ந்து சொன்னார்.

இந்திராவும் அதையே சொல்ல, “என்ன அக்கா இது, உதவி அது இது எண்டு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க. அதெல்லாம் ஒண்டும் இல்ல.” என்றவள், சுசீலா அன்று இரவுக்கு அங்கேயே தங்கிவிட்டு, அடுத்த நாள்தான் போகப்போகிறாராம் என்று அறிந்து, அவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

சிந்தூரியும் தாமினியோடு நன்றாகவே சேர்ந்துகொண்டிருந்தாள். சின்னவர்கள் இருவருக்கும் அங்கிருந்து புறப்படவே மனமில்லை. கவலையோடு விடைபெற்றனர். ஸ்கூட்டியைத் தள்ளிக்கொண்டு அவள் கேட்டுக்கு வெளியே வர, அங்கே எங்கோ வெறித்துக்கொண்டு நின்றிருந்தான் அகத்தியன். இவர்கள் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை.

“அகத்தியன் அங்கிள், பாய்!” என்று குரல் கொடுத்தாள் தூரிகா.

திரும்பிப் பார்த்தான் அகத்தியன். அவர்கள் புறப்படுவது கண்டு, “வெளிக்கிட்டாச்சா?” என்று கேட்டுக்கொண்டு, அவர்கள் அருகில் வந்தான்.

தூரிகா யசோவுக்குப் பின்னால் அமர்ந்திருக்க, சின்னவள் யசோவின் கைகளுக்குள் நிற்பதைக் கண்டவனின் பார்வை, ஒருமுறை யசோவிடம் சென்று வந்தது.

“கிஃப்ட் கிடைச்சதா?”

“ஓ! சிந்தாமணி அம்மம்மா ரெண்டு ரெண்டு தந்தவா.” என்றாள் தூரிகா.

அவன் சிந்தூரியைப் பார்க்க, வெட்கத்துடன் அன்னையோடு ஒண்டினாள் அவள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதைக்கண்டு சின்ன முறுவல் ஒன்று அவனிடத்தில் அரும்பிற்று. “ஒரு நிமிசம்.” என்றுவிட்டு ஓடிப்போய், பலகாரம் அடங்கிய பை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.

“ஏற்கனவே இந்திரா அக்கா சாப்பாடும் பலகாரமும் கட்டித் தந்திட்டா.” மெல்லிய சங்கடத்துடன் சொன்னாள் யசோ. என்னவோ, அவளே எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போவது போலிருந்தது.

“அத உங்கட அக்கா வீட்டுக்குக் குடுங்கோ. இது நான் தாறது. பிள்ளைகளுக்கு.” என்று அவளிடம் சொன்னவன், “மாமாட்ட வாங்க மாட்டீங்களா?” என்றான் சிந்தூரியிடம். அவள் சிரிப்புடன் கையை நீட்டி வாங்கிக்கொள்ள, அவன் முகம் மலர்ந்தது.

அதற்குமேல் தாமதிக்காமல் ஸ்கூட்டியை உருட்டினாள் யசோ.

“இப்பிடிக் கூட்டிக்கொண்டு போறது பயமில்லையா?” அவள் கைகளுக்குள் நின்றிருந்த சிந்தூரியைக் கண்களால் காட்டி வினவினான்.

“இல்ல, பழக்கம்தான்.”

“அண்டைக்கே பாத்தனான்தான். எண்டாலும் கவனம். இருட்டப்போகுது.”

“அதுக்கு முதலே போயிடுவம்.” அதற்குமேல் தாமதிக்காமல் ஒற்றைத் தலையசைப்புடன் புறப்பட்டாள்.

போகிறவர்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவனின் பின்னிருந்து, “ஒண்டுக்கு ரெண்டு கண்டா(கன்று) இருக்கிற மாட்டப் பிடிச்சாச்சுப் போல!” என்ற சவீதாவின் குரல் கேட்டது.

இவள் இன்னும் மாறவில்லை. முகத்தைச் சுளித்தபடி திரும்பிய அகத்தியனின் பார்வை, அவளை அற்பமாய் நோக்கிற்று. “ரெண்டு பிள்ளைகளின்ர தாய் அவா. அவாவை இப்பிடிக் கதைக்க மனம் கூசேல்லையோ உனக்கு?” என்றான் எரிச்சலுடன்.

“கூசுற அளவுக்கு நான் என்ன சொல்லீட்டன்? என்னவோ அவாதான் வீட்டுப்பொம்பிளை மாதிரி எல்லாம் செய்றா. நீங்க மினக்கெட்டுச் சாப்பாடெல்லாம் கொண்டுவந்து குடுக்கிறீங்க. வாசல்ல நிண்டு கதை வேற நடக்குது. அதைத்தான் என்ன எண்டு கேக்கிறன்.”

“அதெல்லாம் உனக்கு விளங்காது. மனுசன் இல்லாட்டியும் பொய் புரட்டு இல்லாம, தானே உழைச்சு, தானே பிள்ளைகளை வளத்து, கௌரவமா வாழுறா அவா. அவாவைப் பற்றி நீ கதைப்பியா? முதல், இதையெல்லாம் கேக்க நீ ஆரு? அத்தானாலதான் உன்னை எல்லாம் வீட்டுக்க எடுக்கவேண்டி இருக்கு. அதுக்காக என்ன வேணுமெண்டாலும் கதைக்கலாம் எண்டு நினைக்காத. வந்தமா போனமா எண்டு இருக்கப் பார்.” என்று எச்சரித்துவிட்டுப் போனான் அவன்.

சவீதாவுக்கு எரிச்சல்தான் மண்டியது. தன் மீது உயிராக இருந்த கணவன், குழந்தை பிறக்காது என்ற ஒன்றுக்காக மொத்தமாக விலகிப்போவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. போலீஸ் வரை போனதுகூட அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணித்தான். என்ன செய்தாலும் தமக்கையின் வாழ்க்கைக்காக அடங்கிப்போவான் என்றுதான் கணக்குப் போட்டிருந்தாள்.

ஆனால், அவளின் அத்தனை கணக்குகளையும் பொய்யாக்கிக்கொண்டு விவாகரத்தையே வாங்கியிருந்தான் அவன். அது பெரும் அடி என்றால், இன்னொரு திருமணத்திற்கு அன்னை அலையோ அலையென்று அலைந்தும் ஒன்றுகூடச் சரிவராமல் போனது அடுத்த அடி.

இப்படி இருக்கையில்தான் இந்திரா கருவுற்றதும், அதையொட்டி அவள் இங்கு வந்துபோக ஆரம்பித்ததும். அப்படி வந்து அவனைப் பார்த்தது அவளுக்குள் பெரும் பாதிப்பை உண்டாக்கிற்று. அவனோடான திருமணம், வாழ்ந்த வாழ்க்கை, அவன் தன்னைக் கொண்டாடியது என்று அனைத்தும் நினைவில் வந்து, இழந்த சொர்க்கத்தின் அளவை உணர்த்தின.

இந்திரா திருமணத்திற்குப் பார்த்தும் அவன் சம்மதிக்கவில்லை என்கிற செய்தி இனிப்பாக இறங்க, மீண்டும் அவனோடு சேர்ந்துவிட முடியாதா என்கிற ஆசை அவளுக்குள் வளர ஆரம்பித்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் இடையில் வந்து நிற்கிறாள், இரண்டு பிள்ளைகளோடு ஒருத்தி. அவளைப் பற்றிச் சொன்னாலே அவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே!

மீண்டும் அவனை இழந்துவிடாதே என்று மனம் அறிவுறுத்த, என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வீட்டுக்கு நடந்தாள்.

*****

இங்கே, உறக்கத்துக்குச் சிணுங்கிய மகளைத் தூக்கிக்கொண்டு கஜேந்திரன் அறைக்குள் சென்ற பிறகு, “அகத்தியன் இப்பிடியே இருக்கப் போறாரோமா?” என்று, மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் தவமலர்.

“அவன் இன்னொரு கலியாணம் எண்டாலே ஓடுறான் மாமி.” அதற்குக் காரணமே நீங்கள்தான் என்று சொல்வதுபோல் இருந்தது இந்திரா சொன்ன விதம்.

அவர் முகம் மெலிதாகக் கன்றிற்று. “ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. அவளின்ர வாழ்க்கை அப்பிடியே போயிடுமோ எண்டுற பயத்தில செய்ததம்மா. அது இப்பிடி வந்து நிக்கும் எண்டு யோசிச்சுக்கூடப் பாக்கேல்லை.” என்றவர் பேச்சில் எரிச்சல் உண்டாயிற்று இந்திராவுக்கு.

அப்போ, அவளின் தம்பி பாவமில்லையா? அவன் வாழ்க்கையோடு இவர் விளையாடுவாரா? சுடுவதுபோல் கேட்டுவிடலாமா என்று மனம் உந்தினாலும் வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.

முதல் விசயம், எப்போதோ நடந்தவற்றைத் திரும்ப திரும்பப் பேசுவது கஜேந்திரனுக்குப் பிடிக்காது. அடுத்தது, ஏற்கனவே கோபத்தில் இருக்கும் அகத்தியனின் காதில் இந்தப் பேச்செல்லாம் விழுந்து, பிரச்சனை பெருசாகுவதில் உடன்பாடில்லை. எல்லாவற்றையும் விட, இதைப் பற்றி அவரோடு பேச அவளுக்கு விருப்பமில்லை.

அதில், “விடுங்க மாமி. எல்லாமே முடிஞ்சுது. ஒற்றையாவே நிக்கவேணும் எண்டு அவன்ர தலைல எழுதியிருக்குப் போல.” என்று முடிக்க நினைத்தாள்.

அதற்கு விடாமல், “அப்பிடித் தனியா இருக்கிறதுக்குச் சவீதாவோடயே வாழ்ந்திருக்கலாமேம்மா. இப்ப பாருங்கோ, ரெண்டு பேரின்ர வாழ்க்கையும் அநியாயமாப் போகுது.” என்றார் அவர்.

என்னது? மீண்டும் அவளோடா? அன்னை, மகள் இருவர் பார்வையும் திகைப்புடன் சந்தித்து மீண்டன. உள்ளே, ஆபத்து மணி உரத்து அடித்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “மனம் ஒப்பாம வாழவும் ஏலாதெல்லோ.” என்ற சிந்தாமணி, “நடந்து முடிஞ்சதுகளைப் பற்றிக் கதைக்கிறதில என்ன கிடக்குச் சொல்லுங்கோ. இனி அவேயவேன்ர தலைல என்ன எழுதி இருக்கோ அதுப்படிதான் நடக்கும்.” என்று அந்தப் பேச்சை முடிக்க நினைத்தார்.

தவமலர் இதைப் பேச என்றே அன்று முழுக்கக் காத்திருந்தவராயிற்றே!

“பேசாம ரெண்டு பேருக்கும் திரும்பவும் ஒரு கலியாணத்தைச் செய்து வைப்பமா?” என்றார்.

அன்னை, மகள் இருவருக்குமே சுறுசுறு என்று கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. இந்திரா சவீதாவைத் திரும்பிப் பார்த்தாள். ஒன்றுமே அறியாத அப்பாவி போன்று அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள். அப்போதுதான், இதைக் கதைப்பதற்காகவே கதிரேசனை முதலே அனுப்பிவிட்டு, கஜேந்திரன் உறங்கச் செல்லும் வரை காத்திருந்து இந்தப் பேச்சை எடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிற்று.

இவ்வளவு பட்டும் திட்டமிட்டு ஏமாற்றி, மற்றவர்களைத் தம் வலைக்குள் விழுத்தும் இந்தக் குணம் இவர்களுக்குப் போகவே இல்லையே என்று மனம் கசந்தது அவளுக்கு.

அவள் ஏதும் கோபமாகச் சொல்லி, அதுவே அவள் வாழ்க்கையிலும் பிரச்சனையைக் கொண்டுவந்து விடுமோ என்று பயந்த சிந்தாமணி, “சொல்லுறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. இதுக்கு நாங்க பதில் சொல்லேலாது. தம்பியைத்தான் கேக்கவேணும். அவன்ர முடிவு தெரியாம எங்களால ஒண்டுமே கதைக்கேலாது.” என்றார் அவசரமாக.

இன்றைக்கு அவர்களிடம் இந்தப் பேச்சை எடுத்துவிட்டதே போதும் என்று நினைத்த தவமலரும், “சரி, அப்ப அகத்தியனோட கதைங்கோ. கதைச்சுப்போட்டுச் சொல்லுங்கோவன்.” என்றுவிட்டுச் சவீதாவோடு புறப்பட்டார்.

அதன்பிறகும் கூட, அவர் பேச்சினால் உண்டான பாதிப்பிலிருந்து, அவர்களால் வெளிவர முடியவில்லை.

அங்கேயே ஒரு பக்கமாகப் பாயை விரித்துச் சரிந்திருந்த சுசீலா, அவர்களின் குடும்ப விசயத்துக்குள் தலையிடவில்லையே தவிர, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

அதில், “விடுங்க அக்கா. சிலபேர் இப்பிடித்தான். தங்கட காரியத்தில மட்டுமே கண்ணா இருப்பினம். மற்றவையப் பற்றி யோசிக்கிறதே இல்ல. என்ன செய்றது?” என்றவர், “ஏதோ குறிப்பு வந்தது, பொருந்தி இருக்கு எண்டு சொன்னீங்க. பிறகு என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.

அவர்களும் நடந்ததைச் சொல்ல, ஒன்றும் சொல்லாமல் அவர்களைப் பார்த்தார் சுசீலா.

“என்ன பிள்ளை?” அவர் பார்வையின் பொருள் விளங்காமல் வினவினார் சிந்தாமணி.

“அக்கா, கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. உண்மையாவே யசோ வேண்டாமா உங்களுக்கு?”

பதில் சொல்லாமல் மகளைப் பார்த்தார் சிந்தாமணி.

“உண்மையாவே அவாவை வேண்டாம் எண்டு சொல்லுறது எங்களுக்குத்தான் இழப்பு. ஆனா, ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கே அக்கா. அவே ரெண்டு பேரையும் வளக்க வேணும், படிப்பிக்க வேணும், நல்ல இடமாப் பாத்துக் கட்டிவைக்க வேணும். சீதனம், அது இது எண்டு எவ்வளவு இருக்குச் சொல்லுங்கோ? காலம் முழுக்கப் பொதி மூட்டையைச் சுமக்கிற மாதிரிச் சுமக்கச் சொல்லுறீங்களா?” என்றாள் இந்திரா.

“என்னம்மா இது? நாளைக்கு என்ன நடக்கும் எண்டே தெரியாது. இதில நீங்க, வாழ்க்கை முழுதுக்கும் யோசிக்கிறீங்க. நீங்க சொல்லுறதெல்லாம் இன்னும் பத்துப் பதினைஞ்சு வருசம் கழிச்சு நடக்கப்போறது. அந்த நேரம் அந்தப் பிள்ளைகளே ஆளுக்கொரு உத்தியோகத்தைக் கைல வச்சிருக்கப் போயினம். தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே தேடிக்கொள்ளுவினம். அதைவிட, அகத்தியனுக்கு 35 ஆகப்போகுது. இன்னும் ஒண்டு ரெண்டு வருசம் போச்சுதோ, பிறகு அவனைக் கட்ட ஒருத்தரும் வராயினம். அடுத்தது, புரோக்கர் சொன்ன மாதிரி சவீதா பக்கத்திலேயே இருக்கிற விசயத்த எல்லாரும்தான் யோசிப்பீனம்.”

அது என்னவோ உண்மைதான் என்று ஓடிற்று மற்ற இருவருக்கும்.

“அவள் இருந்தா இருக்கட்டும், எனக்குத் தெரியும் என்ர வாழ்க்கையைப் பாக்க எண்டு நினைக்க ஒரு பக்குவம் வேணும். அது யசோக்கு இருக்கு. நான் அவவைப் பற்றியே திரும்ப திரும்பக் கதைக்கிறன் எண்டு நினைக்காதீங்க. இனி வாறவளும் எப்பிடி இருப்பாளோ எண்டு பயப்பிடாம, துணிஞ்சு கட்டி வைக்கிற அளவுக்கு அவாவை எனக்குத் தெரியும். அதாலதான் இவ்வளவு சொல்லுறன். அண்ணா வீடு எண்டு நினைச்சுக்கூடச் சவீதா ஒரு துரும்பையும் கிள்ளிப் போடேல்ல. ஆனா யசோ, எவ்வளவு பொறுப்பா எல்லாரையும் கவனிச்சவா எண்டு பாத்தனீங்க தானே? பொறுப்பு, பக்குவம், நாலு பேருக்கு முன்னால எப்பிடி நடக்கோணும் எண்டுறது எல்லாம் இயல்பா அமைய வேண்டியதுகள். அதெல்லாம் யசோட்ட இருக்கு.” என்றவரின் பேச்சில் இருந்த உண்மையில் இருவருமே அமைதியாகக் கேட்டுக்கொண்டனர்.

“இப்ப அவாவே ஓம் எண்டு சொல்லுவாவா எண்டுறது சந்தேகம்தான். அண்டைக்கே சொல்லிட்டா, பிள்ளைகள் வளந்துகொண்டு வருகினம், இனி அந்த எண்ணம் எனக்கு இல்லை எண்டு.” என்றவருக்கும் அகத்தியனை எண்ணிக் கவலையே!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 11



சுசீலா அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கூட அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்தது. அகத்தியனுக்கு வேறு பெண்ணைத்தான் தேடினார்கள். அவன் வயதும் ஒரு காரணமாகி, பெண் அமையவே மாட்டேன் என்றது.

தவமலரும் அவர்களை விடுவதாக இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நெருக்கினார். அடிக்கடி அதைப்பற்றிச் சிந்தாமணியோடு கதைத்தார்.

இவர்கள் பிடிகொடுக்க மறுக்கவும் மகனோடு பேசினார்.

அவனும் ஒருநாள், “அம்மா சொல்லுறதும் சரி மாதிரித்தான் இருக்கு இந்திரா. ரெண்டுபேரும் தனித்தனியா இருக்கிறதுக்குத் திரும்பவும் சேர்ந்து வாழ்ந்தா என்ன? ஒரு பிள்ளை வேணுமெண்டால் தத்தெடுக்கிறதுதானே.” என்றதும் இந்திரா திகைத்தாள்.

தன் நெஞ்சின் தடதடப்பை அடக்கி, “இதில நான் சொல்ல என்ன இருக்குக் கஜன். முடிவெடுக்க வேண்டியது அவன்.” என்றாள்.

“உண்மையா எனக்கு இன்னும் அம்மாவிலயும் சவீதாவிலயும் சரியான கோவம் இருக்கு இந்திரா. அதாலேயே அவன் நல்ல மாதிரி வாழுறதைப் பாக்கவேணும் எண்டுற ஆசையும் இருக்கு. நடந்ததையே பிடிச்சுத் தொங்கி ஆகப்போறது என்ன சொல்லு? அவளுக்கும் ஒண்டும் சரிவருது இல்ல. இவனுக்கும் அப்பிடித்தான். அதுதான் ரெண்டு பேரையுமே திரும்பவும் சேர்த்துவைச்சா என்ன எண்டு யோசிச்சன். ஏற்கனவே பிடிச்சு வாழ்ந்த ஆக்கள்தானே. அவனோட ஒருக்காக் கதைச்சுப்பார். இல்லாட்டிச் சொல்லு, நான் கதைக்கிறன்.” என்றான் அவன்.

இது அத்தனையும் தவமலரின் வார்த்தைகள் என்று புரிந்துவிட, உள்ளுக்குள் விழித்துக்கொண்டாள் இந்திரா. “முதல் எதுக்கும் அவனோட நான் கதைக்கிறன் கஜன். அதுக்குப் பிறகு வேணுமெண்டால் சொல்லுறன், நீங்க கதைங்க.” என்று அவனை அகத்தியனோடு கதைக்கவிடாமல் தடுத்துவிட்டு, அடுத்த நாளே அன்னையிடம் இதைப் பகிர்ந்தாள்.

“அம்மா, இது சரி வராதம்மா. அந்த மனுசி இதைச் செய்து முடிக்காம விடாதுபோல. சவீதாவுக்கு யசோ எவ்வளவோ பரவாயில்ல. ரெண்டு பிள்ளை இருக்கிறதுதானே பிரச்சினை? எதிர்காலத்தில அவனுக்கு ஒரு தேவை வந்தா நான் குடுக்கிறன். இவரும் அவனை அப்பிடியே விடமாட்டார். இப்ப முதல் வேலையா அந்தச் சவீதாட்ட இருந்து அவனைக் காப்பாத்த வேணும். யசோவையே கேப்பம்.” என்றாள் முடிவாக.

இதற்கிடையில், ஒரு குழந்தையோடு இருக்கும் ஒரு பெண்ணின் சம்மந்தம் வந்தது. அவள் கொழும்பில் வேலையாம், இவனும் அங்கே நிரந்தரமாக வந்துவிட வேண்டுமாம், இன்னொரு பிள்ளை பெறமாட்டாளாம் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்க அன்னைக்கும் மகளுக்கும் மனம் விட்டே போயிற்று.

சுசீலாவிடம் தம் சம்மதத்தைச் சொல்லிக் குறிப்பைக் கேட்டனர்.

பெரும் சந்தோசத்துடன் அடுத்த நாளே யசோதினியிடம் ஓடிவந்தார் சுசீலா. விசயம் அறிந்தவள் முகம் மாறிப்போயிற்று. “அக்கா ப்ளீஸ், குறை நினைக்காதீங்கோ. அண்டைக்கே சொன்னேனே, எனக்கு இப்ப அந்த ஐடியா இல்லை எண்டு.” என்றாள்.

இதை அவரும் எதிர்பார்த்ததில் சோர்ந்துவிடவில்லை. “அம்மாச்சி யசோ, எல்லாம் பொருந்தி வரேக்க ஏனம்மா வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? அவன் நல்லவனம்மா. உங்கட வாழ்க்கை நல்லாருக்கும். தானாத் தேடி வாற வாழ்க்கையைத் தள்ளிவிடாதீங்கோம்மா.” என்றவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

“சவீதாவைப் பற்றி யோசிக்கிறீங்களா?”

“அவாவைப்பற்றி நான் ஏன் யோசிக்க? எனக்குத்தான் விருப்பம் இல்ல.”

“ஏனம்மா? பிள்ளைகளுக்கும் அருமையான தகப்பனா இருப்பான். நல்ல உழைப்பாளி. கெட்ட பழக்கம் ஒண்டும் இல்ல. நல்ல குடும்பம். உங்களுக்கும் ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்கும். இதத்தானேம்மா இவ்வளவு நாளும் தேடினனீங்க. இப்ப கிடைக்கேக்க வேண்டாம் எண்டு சொன்னா என்ன அர்த்தம்?” கையில் கிட்டும் அருமையான வாழ்க்கையைத் தூக்கி எறிகிறாளே என்கிற கவலை அவருக்கு.

உண்மைதான். அவர் சொல்வது எல்லாமே உண்மைதான். ஆனால்…

“ஓம் எண்டு சொல்லுங்கோம்மா.”

இப்படி அவர், அவளுக்காக அவளிடமே கெஞ்சுவது சங்கடமாக இருக்க, “ப்ளீஸ் அக்கா.” என்றாள் அவளும் கெஞ்சலாக.

“என்னம்மா நீங்க? இப்பிடி, முன்னுக்கு நிண்டு செய்து வைக்க ஒரு ஆள் இல்லாமப் போனதாலதான் நான் இண்டைக்குத் தனியா நிக்கிறன். என்னைப் பாத்துமா வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? இது உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டாவது கலியாணம் யசோ. இப்பிடி நல்ல இடம் ஈஸியா அமையாது. தவறவிட்டாலும் திரும்பக் கிடைக்காது. கொஞ்சம் யோசிங்கோம்மா.” என்று கெஞ்சினார்.

அவள் விழிகளில் கண்ணீர் அரும்பிற்று. வேகமாகத் துடைத்துக்கொண்டாள். எல்லா நேரமும் மனத்தில் இருப்பதைப் பகிரும் வரம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லையே!

அவளின் அந்தக் கண்ணீரே வெளியே சொல்ல முடியாத அல்லது, சொல்ல விரும்பாத எதையோ மனத்துக்குள் வைத்து மருகுகிறாள் என்று சொல்ல, “அகத்தியனைப் பிடிக்கேல்லையா?” என்றார்.

“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்ல.” அவசரமாகச் சொன்னாள்.

“பின்ன என்னம்மா?”

அப்போதும், அவள் தன் கை விரல்களை ஆராய்ந்தாளே தவிர எதையும் பகிர்ந்தாள் இல்லை.

சுசீலாவுக்கு ஒற்றை நாளில் எதுவும் மாறிவிடாது என்று தெரிந்துதான் இருந்தது. “எனக்காகக் கொஞ்சம் யோசிங்கோம்மா.” என்றுவிட்டுப் போனார்.

விடயம் அறிந்த இந்திராவுக்கும் சிந்தாமணிக்கும் மனமுடைந்தே போயிற்று. கையில் கிடைத்தபோது தவற விட்டுவிட்டுத் தவிக்கிறார்களே!

சிந்தாமணி நேராக அழைத்துக் கேட்டுப் பார்த்தார்.

நயமாகவே மறுத்தாள் யசோ.

“நான் அண்டைக்கு அப்பிடிச் சொன்னதாலயாம்மா?”

“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்லை அன்ட்ரி. இந்த வாழ்க்கையே நிம்மதியா இருக்கு. அதுதான். உங்கட மகனுக்குக் கட்டாயம் வேற நல்ல வாழ்க்கை அமையும். கவலைப்படாதீங்கோ.” என்றுவிட்டு வைத்தாள் அவள்.

செய்தி அகத்தியனின் காதுக்கும் வந்தது. “என்னம்மா நீங்க, இன்னுமா இத விடேல்ல?” அலுப்புடன் கேட்டான் அவன்.

இந்திரா இருந்த மனநிலைக்குக் கோபம்தான் வந்தது. “என்னத்த விடச் சொல்லுறாய்? அப்பிடியெல்லாம் விடேலாது. உன்ர பழைய மாமியார் திரும்பவும் உன்ன மருமகனாக்க ஆசைப்படுறா. போறியா?” என்றாள் சினத்துடன்.

“என்ன சொல்லுறீங்க?” என்று முதலில் அதிர்ந்தாலும், “அவா கேட்டா நான் ஓம் எண்டு சொல்லிடுவனா? இதுக்கா உங்கட உடம்பப் பாக்கிறத விட்டுட்டு, இந்த வேலை பாத்துக்கொண்டு திரியிறீங்க?” என்றான் சாதாரணமாக.

“அவா கேட்டா ஓம் எண்டு சொல்ல மாட்டாய், சரி. இவர் கேட்டா?”

புருவங்கள் சுருங்க தமக்கையைப் பார்த்தான் அகத்தியன்.

“நீ வேற கட்டாட்டி அவளையே கட்டலாமே எண்டு கேட்டவர். இதைப் பற்றி என்னை உன்னோட கதைக்கட்டாம். இல்லாட்டித் தான் கதைக்கிறாராம்.” என்றதும் இது என்ன அடுத்த பிரச்சனை என்று நெற்றியைத் தேய்த்துவிட்டான் அகத்தியன். ஒருவித எரிச்சலும் உள்ளூரப் பொங்கிற்று.

“தம்பி, சொல்லுறதைக் கேளடா. ஒரு அளவு தாண்டி முகத்தில அடிச்சமாதிரி எங்களால அவேட்ட மறுக்கேலாது. உன்னால ஏலுமெண்டா யசோவோட கதை. முதல், ரெண்டாவது கலியாணத்துக்கு ரெடியா இருந்த பிள்ளைதான் அவா. இப்ப ஏனோ விருப்பமில்லை எண்டு சொல்லுறா. கொஞ்சம் கதைச்சா மனம் மாறுவா. இல்ல, ரெண்டு பிள்ளைகள் எண்டுறது உனக்கும் பிடிக்கேல்லையா?”

“ப்ச்! கலியாணத்தைப் பற்றியே நான் யோசிக்கேல்ல. இதில பிள்ளைகளைப் பற்றி எங்க?” அலுத்த குரலில் சொன்னவனுக்கு, அன்றைக்கு அவளின் ஸ்கூட்டியில் முன்னும் பின்னும் அமர்ந்திருந்த இருவரும் நினைவில் வந்து போயினர். சிந்தூரியின் வெட்கத்தையும், தூரிகாவின் அகத்தியன் மாமாவையும் பிடிக்காமல் இருக்குமா? அருமையான குழந்தைகள். அதற்கென்று…
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“கொஞ்சம் யோசி தம்பி. சின்ன பிள்ளை மாதிரிப் பிடிவாதம் பிடிக்காத. உனக்கும் வயசு போகுது. எங்களால உன்ன இப்பிடியே விட்டுட்டுப் பாத்துக்கொண்டு இருக்கேலாதடா.” என்றாள் இந்திரா கண்ணீரும் கவலையுமாக.

அப்போதும் எதுவும் சொல்லாத அகத்தியனுக்கு அவளுக்குத் திருமணத்தைப் பிடிக்கவில்லையா, அல்லது, தன்னைப் பிடிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாமல் போயிற்று.

*****

அன்று, ஒரு வேலையாக வெளியே சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான் அகத்தியன். எதிர்த்திசையில் மகளோடு வந்துகொண்டிருந்தாள் யசோதினி.

அவளும் இவனைப் பார்த்துவிட்டாள். இருவர் பார்வையும் சந்தித்துக்கொண்டன. சிறு தலையசைப்பைக் கொடுப்பதா வேண்டாமா என்று யசோவுக்கு மெல்லிய சங்கடம். இன்னுமே சந்தர்ப்பம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவளைக் கரைக்க முயன்றுகொண்டிருந்த சுசீலாவின் பேச்சுகள், அவனைச் சாதாரணமாக எதிர்கொள்ள விடாமல் தடுத்தன.

அவளைப் போன்ற
எந்தத் தயக்கங்களும் தூரிகாவுக்கு இல்லை. அவனைக் கண்டுவிட்டு, “அகத்தியன் மாமா!” என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடி, முகம் முழுக்க நிறைந்த சிரிப்புடன் கையை ஆட்டினாள்.

அவன் முகமும் தானாக மலர்ந்தது. பதிலுக்குத் தானும் கையை அசைத்தான். பிறந்தநாள் அன்று, அவள் தன் பொம்மையை வீட்டில் விட்டுவிட்டுப் போனதும், அது அவன் கடையில் இருப்பதும் நினைவு வந்தது.

பைக்கை திருப்பிக்கொண்டு வந்தான். இந்தமுறை, தன்னைப் பின்தொடரும் அவனைக் கண்ட யசோதினிக்குள் மெல்லிய பதற்றம். இவன் ஏன் வருகிறான், திருமணத்தைப் பற்றி ஏதும் கதைக்கப் போகிறானோ என்று தடுமாறினாள்.

அவனோ அவள் புறம் திரும்பக்கூட இல்லை. “உங்கட பொம்மை கடைலதான் இருக்கு. வாறீங்களா, எடுத்துத் தாறன்.” என்று தூரிகாவிடம் கேட்டான்.

“பிறகு நீங்களே கொண்டுவந்து விடுவீங்களா மாமா? அம்மாவால வரேலாது, வேல இருக்கும்.” என்று அவள் சொன்னதும் பெரியவர்கள் இருவர் முகத்திலும் தவிர்க்க முடியாமல் சின்னதாய்ச் சிரிப்பு அரும்பிற்று.

“சரி, இந்தப் பெரிய மனுசிய நானே கொண்டுவந்து விடுறன். வாங்கோ!” என்று பைக்கை திருப்ப, அவளும் ஓடிச் சென்று அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள்.

யசோதினிக்கு மகள் இன்னும் சாப்பிடவில்லையே என்று ஓடியது.

பசியோடு இருப்பாளே. அதைச் சொன்னால், மறைமுகமாக உணவு வாங்கிக்கொடு என்று சொல்வது போலாகாதா? என்ன செய்ய என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள்.

கேள்வியாகப் புருவங்களைச் சுருக்கினான் அவன்.

“அது… தூரி இன்னும் சாப்பிடேல்லை. கொஞ்சம் கெதியாக் கொண்டுவந்து…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள், அவன் முகம் கடுப்பதைக் கண்டு, “இல்ல, சாப்பாடு இங்க இருக்கு. நீங்க கொஞ்சம் கெதியாக் கொண்டுவந்து விட்டீங்க எண்டாலே போதும்.” என்றாள் அவசரமாக.

அதாவது, தூரிகாவுக்குச் சாப்பாடு கொடுப்பான் என்கிற நம்பிக்கை அவளுக்கில்லை. பதில் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பைக்கை உசுப்பிக் கிளப்பிக்கொண்டு போனான் அவன்.

அவளுக்கு நெஞ்சு ஒரு முறை சில்லிட்டது. அப்படி என்ன தவறாகச் சொன்னாளாம்? முதல், அதென்ன அப்படி ஒரு மிரட்டும் பார்வை?

*****

கடைக்கு வந்ததுமே அன்னை கொடுத்துவிட்டிருந்த சாப்பாட்டை இருவருக்கும் போட்டுக்கொண்டு வந்தான் அகத்தியன்.

மறக்காமல் கை கழுவி, மேசையில் அவன் முன்னே அமர்ந்து, சிந்தாமல், விளையாடாமல் நேர்த்தியாக உண்டவளைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

“தாமினியைக் கூட்டிக்கொண்டு வரேல்லையா மாமா?” உணவுக்கிடையில் வினவினாள் தூரிகா.

“இண்டைக்கு அவாவை அவான்ர அப்பா கூட்டிக்கொண்டு போய்ட்டார். ஏன், அவா இல்லாட்டி நீங்க மாமாவைப் பாக்க வரமாட்டீங்களா?”

“வருவனே. இண்டைக்கு வந்திருக்கிறனே.”

அவள் தட்டில் இறைச்சி குறைந்துவிட்டதைக் கவனித்து, பாத்திரத்துக்குள் இருந்து குழம்பை வடித்து இறைச்சியை மட்டும் எடுத்துப்போட்டான். ஒரு முறுவலை அவனுக்குப் பரிசளித்துவிட்டு எடுத்து உண்டாள் அவள்.

அவள் அணிந்திருந்த வெள்ளைச் சீருடையின் மார்பில் குத்தியிருந்த கைக்குட்டையில், ‘கே’ மற்றும் ‘டீ’ ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கவனித்து, “அதென்ன கே, டீ?” என்றான் தெரியாதவன் போன்று.

“கே ஃபோர் கிசோர். அப்பான்ர பெயர். டீ ஃபோர் தூரிகா. என்ர பெயர்.” அழகாகப் பதில் சொன்னாள் தூரிகா.

“உங்கட அப்பான்ர பெயர் கிசோரா? பிள்ளைக்கு அப்பாவைப் பிடிக்குமா?” ஏன் என்று தெரியவில்லை. அந்தக் கேள்வி அவன் வாயில் வந்திருந்தது.

“பிடிக்குமே? எனக்கு என்ர அப்பாவத் தெரியும், தெரியுமா உங்களுக்கு? சிந்தூரிதான் அப்பாவைப் பாக்கவே இல்ல. அம்மா ஃபோட்டோலதான் காட்டினவா.”

அரிதாகப் பார்க்கக் கிடைக்கும் ஒருவரைப் பார்த்த குதூகலக் குரலில் அவள் பகிர, கேட்டிருந்த அவன்தான் எப்படி உணர்கிறோம் என்று தெரியாமல் அமர்ந்திருந்தான்.

வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஏதாவது பிழை செய்தா அம்மா அடிப்பாவா?” என்று பேச்சை மாற்றினான்.

“இல்லையே. ஆனா பேசுவா. இப்பிடிக் கண்ண உருட்டி உருட்டிப் படிக்க மாட்டியா, ஹோம்வேக் செய்ய மாட்டியா எண்டு கேட்டு வெருட்டுவா.” என்றவள், அன்னையைப் போலவே தலையை ஆட்டி, கண்களை உருட்டிக் காட்டியதில் புரையேறச் சிரித்தான் அகத்தியன்.

தன் தலையில் தானே அவன் தட்ட, வேகமாகத் தண்ணீரை எடுத்துவந்து கொடுத்தாள் தூரிகா. அவன் அருந்த, அவள் அவன் தலையைத் தடவிவிட்டாள். தடுக்கவே முடியாமல் அவன் விழிகளினோரம் கோடாய்க் கண்ணீர் அரும்பியே போயிற்று. ஒற்றைக் கையால் அவளை அணைத்து நெற்றியோடு நெற்றியை முட்டினான்.

“தேங்க்ஸ் செல்லம்.”

“என்னத்துக்கு?”

“தண்ணி தந்ததுக்கு.”

“தண்ணி தந்ததுக்கா?” ஒற்றைக் கையால் வாயைப் பொத்திக்கொண்டு கிளுக் என்று சிரித்தாள் தூரிகா.

அவன் உதட்டோரமும் முறுவல் அரும்பிற்று.

இன்னும் கொஞ்ச நேரம் தன்னுடனேயே வைத்திருந்துவிட்டு, அவள் பொம்மையோடு அவளைக் கொண்டுபோய் விட்டான்.

அவள் கையில் இருந்த சிறிய பையைப் பார்த்துவிட்டுக் கண்ணாலேயே அதட்டினாள் யசோ.

உடனேயே, “அது எனக்கில்லை அம்மா. அகத்தியன் மாமா சிந்தூரிக்குக் கட்டித் தந்தவர். கடையில வாங்கேல்ல. சிந்தாமணி அம்மம்மா செய்த பலகாரமாம். நான் கேட்டுத்தான் வாங்கினான்.” என்று அவசரமாகப் பதில் சொன்னாள் சின்னவள்.

இதுதானா அந்த உருட்டுக் கண் என்று நினைத்ததுமே அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. அதைக் கவனித்துவிட்டவள் அவனை நோக்கிப் புருவங்களைச் சுருக்கினாள்.

சின்னவள் அன்னையின் பார்வையிலிருந்து தப்பியதே போதும் என்று, “பாய் மாமா!” என்றுவிட்டு உள்ளே ஓடிவிட, “எப்பிடியும் என்னட்ட வந்த கதையைப் பெரியவா போய்ச் சின்னவாட்டச் சொல்லுவா. அது அவாக்குக் கவலையா இருக்கும் எல்லா. அதுதான்… மற்றது நானும் பிள்ளைகளைப் பட்டினி போடுற அளவுக்கு மோசமானவன் இல்ல.” என்றுவிட்டுப் போனவனை மலைப்புடன் பார்த்திருந்தாள் அவள்.

அவள் அன்னையாய்ச் சொன்ன ஒன்றை எப்படி எடுத்துக்கொண்டிருக்கிறான்?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 12


கடையை மூடி, கணக்குவழக்குகள் அனைத்தும் பார்த்து முடித்து, வீடு வந்து, சாப்பிட்டுக் கட்டிலில் சரிந்த அகத்தியனின் நினைவை விட்டு, தூரிகா அகலமாட்டேன் என்று நின்றாள். தனக்குத் தந்தையைத் தெரியும், தான் அவரைப் பார்த்திருக்கிறோம் என்பதை எவ்வளவு பெரிய செய்தியாகச் சொன்னாள்? அவள் விழிகளில் மின்னிய சந்தோசம்தான் எத்தனை?

மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியே அவன் கண்களுக்குள் மின்னிற்று.

அவன் தந்தை இறந்தபோது அவனொரு முழுமையான ஆண்மகன். அப்போதே என்ன பாடுபட்டான்? சிலநேரங்களில் இன்னுமே அவரைத் தேடுவான். சில விசயங்களைச் செய்ய விருப்பமே இல்லாதபோதும், குடும்பத்துக்காக என்று சமாளித்துப் போகவேண்டி வரும்போதும் அப்பா இருந்திருந்தால் உறுதியாக முடிவெடுத்துச் செயல்படுத்தியிருக்க முடியுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறான்.

அப்படியிருக்க அவள்? தந்தை முகமே காணாத சிந்தூரி? அன்று, அன்னையின் இரு கைகளுக்குள்ளும் நின்றுகொண்டு வெட்கப்பட்டுச் சிரித்தது கண்ணில் வந்து போனது. சூழ்நிலைகளும் குடும்ப நிலையும்தான் மனிதர்களை வடிவமைக்கிறது போலும். இல்லாமல், அவளைவிடவும் பெரியவளான தாமினி இன்னுமே செல்லக் குழந்தையாக வளர, சின்னவள் பொறுப்பாக அன்னையின் கைகளுக்குள் நிற்பாளா?

*****

இப்போதெல்லாம் சிந்தாமணியின் பிரஷர் கீழே இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு உச்சியிலேயே நின்றது. காரணம், மகன் வாழ்க்கை. அதற்கு ஒரு விடிவு வரமாட்டேன் என்கிறதே எனும் வேதனை, அவர் மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. மாத்திரைகள் வேறு கவனிக்காமல் விட்டுத் தீர்ந்து போயிருந்தன. இந்திரா உசாராக இருந்திருந்தால் முடிய முதலே வாங்கி வைத்திருப்பாள். அவள் ஒரு பக்கமாகப் படுத்து படுத்துக் கிடப்பதில் அவர்தான் இன்னுமே அல்லாடினார்.

என்ன நினைப்பாளோ என்கிற மெல்லிய தயக்கம் இருந்தாலும் யசோக்கு அழைத்து, பிரஷர் மாத்திரைகள் கொண்டுவந்து தரமுடியுமா என்று வினவினார். மகன் கடையில் கொடுக்கச் சொல்லலாம்தான். அவருக்கு அவளிடம் திருமணம் பற்றி நேரில் கேட்டுப்பார்க்கும் ஆசை வந்திருந்தது. முகத்துக்கு நேரே மறுப்பது இலகுவன்றே! அதில், இந்தச் சந்தர்ப்பத்தை நல்லபடியாகப் பயன்படுத்த நினைத்தார்.

யசோவுக்கும் அவனிடம் போவதற்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று கொடுப்பதே இலகுபோல் இருந்ததில் மறுக்கவில்லை. மாலை கொண்டுவந்து தருவதாகச் சொல்லிவிட்டு வைத்தாள்.

சிந்தாமணியின் அத்தனை திட்டங்களையும் கவிழ்த்துப்போடும் விதமாக, அன்று மாலை தன் முழுக் குடும்பத்தோடும் வந்து அமர்ந்தார் தவமலர். கஜேந்திரனும் வீட்டில் இருந்தான்.

அன்னை, மகள் இருவரும் கலக்கத்துடன் தமக்குள் பார்வையைப் பரிமாறிக்கொண்டு உபசரித்தனர்.

இந்திரா பற்றிய நலவிசாரிப்பு, குழந்தை எப்படி இருக்கிறது, வைத்தியர் என்ன சொன்னார் என்று கேட்டு நகர்த்திய பேச்சை, “என்ன முடிவு எடுத்தனீங்க? சும்மா நாளை வீணாக்கிறதில அர்த்தம் இல்லையெல்லோ.” என்று நயமாகவே அவர் திசைக்குத் திருப்பினார் தவமலர்.

“அண்டைக்குச் சொன்னதுதான். இன்னொரு கலியாணப் பேச்சை எடுத்தாலே கத்துறான்.” என்றார் சிந்தாமணி.

“அதுக்கெண்டு அப்பிடியே விடுறதா? பிறகு என்னத்துக்கு வீட்டில பெரிய மனுசர் எண்டு நாங்க இருக்க? அந்தநேரம் அதையெல்லாம் மறைச்சது பிழைதான். ஒரே மகள், எல்லாரையும் மாதிரி அவளும் நல்லா வாழ்ந்துடோணும் எண்டுற ஆசை. வேணுமெண்டால் நான் உங்கள் எல்லாரிட்டையும் மன்னிப்புக் கேக்கிறன்.” உண்மையில் வாழ்க்கை கொடுத்த அடியில் உணர்ந்தே சொன்னார் தவமலர்.

“அம்மா!” என்று அதட்டினான் கஜேந்திரன்.

என்ன நடந்திருந்தபோதிலும் தன் முன்னே அவர் அப்படிச் சொன்னதை அவனால் தாங்க முடியவில்லை. என்ன செய்ய? எல்லோரும் எல்லா நேரமும் சரியாகவும் நியாயமாகவும் நடப்பதில்லையே! சில சந்தர்ப்பங்களில் நமக்கு நல்லது எனும்போது மற்றவரை யோசிக்காமல் விட்டுவிடுவதும் உண்டே!

“எப்பவோ நடந்து முடிஞ்சதுகளை இப்ப ஏன் கதைக்கிறீங்க தவம்?” என்றார் கதிரேசன்.

“வேற என்ன செய்யச் சொல்லுறீங்க? இது என்ர பிள்ளையின்ர வாழ்க்கை எல்லோ. அவள் முதலே மறைக்க வேண்டாம் அம்மா, இதெல்லாம் மறைக்கிற விசயம் இல்லை எண்டுதான் சொன்னவள். நான்தான் நீ சொல்லவே கூடாது எண்டு என்ர தலைல சத்தியம் வாங்கினான். கடைசில எல்லாம் இப்பிடியாகிப் போச்சுது.” என்றதும் அன்னை மீது பரிதாபம் உண்டாகிப் போனது கஜேந்திரனுக்கு.

“சரியம்மா, இப்ப என்னத்துக்கு அதையெல்லாம் கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்க, விடுங்க.” என்றான்.

இந்திராவுக்கு நடப்பவை எதுவும் சரியாகப் படவில்லை. தன் கணவனை உணர்வு ரீதியாகத் தாக்கி, தங்கை மீதான பாசத்தைத் தூண்டிவிட்டு, அவனைக்கொண்டே காய் நகர்த்தப் பார்க்கிறார் என்று புரிந்துபோயிற்று. என்னாகப் போகிறதோ என்கிற கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.

அந்த நேரம் பார்த்து அகத்தியனின் பைக் வந்து நின்றது.

கடவுளே! இன்றைக்கு என்று பாத்து இவன் ஏன் இந்த நேரம் வருகிறான்? எதுவும் செய்ய வழியற்று நின்றாள் இந்திரா. இத்தனை நாள்களாகப் பேசியும் பேசாமலும் இழுபட்டுக்கொண்டிருந்த விடயம், இன்றைக்கு ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதை மட்டும் நன்றாகப் புரிந்துகொண்டாள். அதற்கு முதல் என்னென்ன அனர்த்தங்கள் நிகழுமோ என்கிற பயம், அவள் நெஞ்சைக் கவ்விற்று.

அந்த நிமிடத்தில் தன் கணவரின் இல்லாமையை வெகுவாகவே உணர்ந்தார் சிந்தாமணி. அவர் இருந்திருக்க இத்தனை கலக்கம் இருந்திராதே. வீட்டின் தலைமகனாக நின்று இது எல்லாவற்றுக்கும் முடிவு கண்டிருப்பாரே. இப்போது, அத்தனை பாரமும் மகன் தோள்களில்.

பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்த அகத்தியன் கண்டது, தவிப்புடன் அமர்ந்திருந்த தமக்கையைத்தான்.

அங்கிருந்த கஜேந்திரனின் பெற்றவர்களைச் சம்பிரதாயத்துக்கு வரவேற்றுவிட்டு, சவீதாவைத் திரும்பியும் பாராமல், நேராக அவளின் முன்னே வந்து நின்றான்.

“என்னக்கா? ஏன் உங்கட முகம் ஒருமாதிரி இருக்கு?”

கணவனே கவனிக்கவில்லை. அவள் தம்பி வந்த நொடியே கண்டுகொண்டானே! உள்ளம் நெகிழ, ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள்.

அன்னையின் பேச்சில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த கஜேந்திரனும் அப்போதுதான் கவனித்தான். “உண்மைதான். உன்ர முகம் ஒரு மாதிரித்தான் இருக்கு. உடம்புக்கு ஏதும் செய்யுதா?” என்று எழுந்து வந்தான்.

எது எப்படியானாலும் கணவன் மற்றும் தம்பியின் அக்கறை மனத்துக்கு இதம் சேர்க்க, “இவன்தான் சும்மா பதறுறான் எண்டா நீங்களுமா? ஒண்டுமில்லை கஜன். கொஞ்சம் சோர்வா இருக்கு. அவ்வளவுதான்.” என்றாள் இதமான குரலில்.

“என்ன ஒண்டும் இல்ல? பத்துநாள் சாப்பிடாத ஆள்மாதிரி இருக்கிறீங்க.” என்று கடிந்துவிட்டு, “அம்மா, அக்காக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க.” என்றவன் அவள் அருகிலேயே அமர்ந்துகொண்டான்.

இந்திராவுக்கு யானை பலம் வந்த உணர்வு.

யாரும் எதுவும் சொல்லாதபோதும், மொத்தக் குடும்பமும் வந்திருக்கிறார்கள் என்றால் எதற்கென்று தெரியாதா? உள்ளே ஒருவித அழுத்தம் உருவெடுத்தாலும், என்னவென்றுதான் பார்ப்போமே என்கிற முடிவுக்கு வந்திருந்தான் அகத்தியன்.

எப்போதும் சிறு தலையசைப்பும் சம்பிரதாய நலன் விசாரிப்புடனும் விலகிப் போய்விடுகிற அகத்தியன், இன்றைக்கு என்று பார்த்து அங்கேயே அமர்ந்துவிட, இடையில் நின்றுவிட்ட பேச்சை மீண்டும் ஆரம்பிக்க முடியாமல் நின்றார் தவமலர்.

ஆனால், ஒரு முடிவுக்கு வந்திருந்த அகத்தியன் ஆரம்பித்து வைத்தான்.

“என்ன அத்தான்?” என்றான் நேராக.

தவமலருக்கு அது போதுமாயிற்று. “ஒண்டும் இல்ல தம்பி. நீங்களும் சவீதாவும் இப்பிடியே எவ்வளவு காலத்துக்குத் தனியாவே இருப்பீங்க சொல்லுங்கோ? இப்ப, முதல் இருந்த கோபதாபங்களும் கரைஞ்சு போயிருக்கும். அதுதான், திரும்பவும் உங்கள் ரெண்டு பேருக்குமே ஒரு கலியாணத்தைச் செய்து வச்சா ரெண்டு பேரும் சந்தோசமா வாழுவீங்க எண்டு பாக்கிறம்.” என்றவர் மகன் புறம் திரும்பி, “என்ன தம்பி பேசாம இருக்கிறாய். உன்ர மச்சானுக்கு எடுத்துச் சொல்லன். நீ சொல்லி அவர் கேக்காம இருப்பாரா? இல்ல, நீதான் அவருக்குக் கெடுதிக்கு ஒண்டைச் செய்வியா?” என்று, அவனையும் இலாவகமாக இதற்குள் இழுத்துவிட்டார்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனும், “அம்மா சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு அகத்தியன். நீங்க கொஞ்சம் யோசிக்கலாமே?” என்று வினவினான்.

“இதில யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு அத்தான்? திரும்பவும் கட்டுறதுக்கா மூண்டு வருசமா நாயாப் பேயா அலஞ்சு, தரமாட்டன் எண்டு நிண்ட உங்கட தங்கச்சிட்ட இருந்து விவாகரத்து வாங்கினனான்? அதுக்கெண்டு நான் சிலவழிச்ச காசும் கொஞ்ச நஞ்சமில்ல.”

முகம் மாற, “காச வேணுமெண்டா நான் தாறன் அகத்தியன்.” என்றான் கஜேந்திரன்.

“இங்க காசு விசயமே இல்ல அத்தான்.” என்றான் அவனும் இறுகிய குரலில்.

“சரி அகத்தியன். நடந்த விசயங்களில எனக்கும் உடன்பாடு இல்லதான். அதால, அதையெல்லாம் விட்டுப்போட்டு இப்ப என்ன செய்யலாம் எண்டு யோசிங்கோ.”

“முதல் சொன்னதுதான் அத்தான். உங்கட தங்கச்சி எனக்குப் படிப்பிச்சது, வாழ்க்கை முழுதுக்கும் போதுமான பாடம். அதால இன்னொரு கலியாணமே எனக்கு வேண்டாம். அதுவும் உங்கட தங்கச்சியோட… நினைச்சே பாக்கேலாது.”

கஜேந்திரனின் முகம் அப்பட்டமாகக் கறுத்துப் போனது.

இந்திராவுக்கும் சிந்தாமணிக்கும் இனி என்னாகுமோ என்று நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. மற்றவர்கள் அறியாமல், அமைதியாகப் பேசு என்பது போன்று அகத்தியனின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தாள் இந்திரா.

இப்படி, மகனிடமே நேரடியாக மறுப்பான் என்று எதிர்பாராத தவமலர், அடுத்து என்னவிதமாக இந்தப் பேச்சைத் தொடர்வது என்று தெரியாமல் திணறிப்போனார். வேறு வழியில்லை. பேசித்தான் ஆக வேண்டும். வெளிநாடு, உள்நாடு, சீதனம் அதிகமாகத் தருகிறோம் என்று என்ன முயன்றும் குழந்தை பிறக்காது என்கிற ஒற்றை விடயத்தில் எல்லாமே தட்டிப் போயிருந்தது.

அதில், “நீங்க இப்பிடிச் சொல்லக் கூடாது தம்பி. முதலே வேண்டாம் எண்டு சொல்லியிருக்க, நான் வேற நல்ல இடமாப் பாத்துக் கட்டிக் குடுத்திருப்பன். இப்ப வேற எங்க பாத்தாலும் அவாக்கு அது ரெண்டாவது கலியாணம் எண்டுதான் சொல்லுறீனம்(சொல்கிறார்கள்). வாற சம்மந்தங்களும் ஒண்டுக்கும் உதவாததாத்தான் இருக்கு. எங்கட பிள்ளைக்கு இந்த நிலைமை உங்களாலதான் வந்தது. அதத் தீர்க்கிற பொறுப்பு உங்களுக்கும் இருக்கு.” என்றதும் வெகுண்டுபோனான் அகத்தியன்.

“நீங்க முதலே உள்ளதைச் சொல்லியிருந்தா வேண்டாம் எண்டுதான் மாமி சொல்லியிருப்பம். மறைச்சுக் கட்டி வச்சுப்போட்டு உங்கட மகளின்ர இந்த நிலைமைக்கு நான் காரணம் எண்டு சொல்லுறீங்க. அப்ப, என்ர நிலைமைக்கு ஆரு காரணம்? நான் என்ன பிழை செய்தனான் எண்டு இப்பிடி இருக்கிறன்?”

அவன் விழிகளில் தெறித்த கோபத்தைக் கண்டு திகைத்துப் போனார் தவமலர்.

“ஏன் தம்பி, திரும்ப திரும்பப் பழசையே கதைப்பான்…” என்று அவர் சொல்லும்போதே, “அதையேதான் நானும் சொல்லுறன். பழைய விசயங்களை நான் மறக்க விரும்புறன். அதால இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம்.” என்று முடித்துவைத்தான்.

“இப்பிடிச் சொன்னா என்ர பிள்ளையின்ர நிலைமை என்னப்பு? காலம் முழுக்க அவள் இப்பிடியேதான் இருக்கோணுமா? இதே நிலைமை உங்கட அக்காக்கு வந்திருந்தா என்ன செய்திருப்பீங்க?” என்றதும், “மாமி!” என்றவனின் குரல் உயர்ந்து, மேலே பேசாதே என்பதுபோல் அவரை எச்சரித்தது.

அவள் கருவுற்றிருக்கும் இந்த நேரத்தில் என்ன வார்த்தைகளைச் சொல்கிறார்? அவன் நெஞ்சு பதறியே போயிற்று. வேகமாகத் திரும்பித் தமக்கையைப் பார்த்தான். கண்ணீரை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

சிந்தாமணியால் தாங்கவே முடியவில்லை. வயது பிந்திய காலத்தில் உண்டான தாய்மையை எண்ணிப் பயந்து, அவள் நல்லபடியாகப் பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோயில் கோயிலாகத் திரிகிறார். இதில், இப்படி ஒரு பேச்சா? நெஞ்சுக்குள் அடைப்பது போலிருக்க சுவரோடு சுவராக ஒடுங்கினார்.

கஜேந்திரனும் அன்னையின் பேச்சில் ஒரு கணம் ஆடித்தான் போனான். அவசரமாகப் பார்வை இந்திராவிடம் சென்றது. ஒரு கை வயிற்றைப் பற்றியிருக்க, முகமெல்லாம் சிவந்து, கண்ணீரை அடக்கியபடி இருந்தவள் தோற்றம் அவன் நெஞ்சைத் தாக்க, “என்னம்மா கதைக்கிறீங்க? அதுவும் எந்த நேரத்தில? நீங்க கதைச்சவரைக்கும் போதும். நடவுங்க. அப்பா, அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடுங்க.” என்றான் வேறு பேச விரும்பாமல்.

தவமலர் பொலபொலவென்று கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார். “நான் வேணுமெண்டு சொல்லேல்ல தம்பி. என்ர நிலைமையை விளங்கப்படுத்தத்தான் அப்பிடிச் சொன்னனான். மற்றும்படி என்ர மகனுக்கு ஒரு கெட்டது நடக்கோணும் எண்டு நினைப்பனா?” என்று கேட்டார்.

கஜேந்திரனுக்கு அவர் கண்ணீரையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதில், “இப்ப என்னத்துக்குத் தேவையில்லாம அழுறீங்க? அகத்தியனுக்கு விருப்பமில்லாட்டி விடுங்க. வேற இடம் நான் பாக்கிறன்.” என்றான் முடிவாக.

“அமையோணுமே தம்பி. இந்த மூண்டு வருசமாத் தேடிக்கொண்டுதானே இருக்கிறம். ஒண்டு கூடச் சரிவரேல்லையே! இதாலதானே மறைச்சனான். கடைசில ஏன் மறைச்சேனோ அதுதான் நடந்திருக்கு. உன்ர மச்சானே அவளோட வாழமாட்டன் எண்டு சொன்னா வேற ஆர் ஓம் எண்டு வருவீனம்?”

கதைத்துச் சரிவரவில்லை என்றதும் அவர் கண்ணீரைக் கையில் எடுத்துவிட்டது அகத்தியனுக்குப் புரிந்தது. இதற்குமேலும் இதை விடக் கூடாது என்று முடிவு கட்டி, “ஆரம்பத்தில ஒரு நல்லது நடக்கோணும் எண்டுறதுக்காக மறைச்சிருக்கலாம். அது, சரி பிழை எண்டுறதைத் தாண்டி ஒரு அம்மாவா அவாவை எனக்கு விளங்குது. அதெல்லாம் கலியாணத்துக்கு முதல். அதுக்குப் பிறகு உங்கட தங்கச்சி எனக்கு மனுசி. எனக்கு உண்மையா இருந்திருக்க வேணும். கிட்டத்தட்ட என்னோட ரெண்டு வருசம் வாழ்ந்தும் உண்மை சொல்லேல்ல. இதில, என்ர அம்மா அப்பிடிச் சொல்லிப்போட்டா, அக்கா இப்பிடிச் சொல்லிப்போட்டா எண்டு ஆயிரம் சண்டை. எல்லாம் தெரிய வந்த பிறகும் அமைதியா இருக்கேல்ல. என்னவோ நான்தான் பிழை செய்தவன் மாதிரி என்னைப் போட்டுப் படுத்தின பாட்டில எனக்கு எல்லாமே வெறுத்துப் போச்சுது. அப்பிடி அடிமனதில இருந்து வெறுக்கிற ஒருத்தியோட என்னால வாழ ஏலாது!” என்று கஜேந்திரனின் முகம் பார்த்து நேராகச் சொன்னவன், மனத்தின் புழுக்கம் தாளமாட்டாமல் விருட்டென்று எழுந்து வெளியே நடந்தான்.

சரியாக அந்த நேரம் பார்த்து வந்து நின்றாள் யசோதினி. கடைசியாக அவன் பேசியது அவள் காதிலும் விழுந்திருந்தது. அதுவே, அவள் வந்த நேரம் சரியில்லை என்று சொல்லிற்று.

ஒரு தயக்கத்ததுடன் உள்ள வந்தாள். வா என்று சொல்லக்கூட முடியாமல் அமர்ந்திருந்தாள் இந்திரா.

தவமலருக்கு அவள் வருகை பிடிக்கவில்லை. அன்றைக்கும் வீட்டுப் பெண்ணைப் போன்று எல்லா வேலைகளையும் பார்த்தாளே. சவீதாவுக்கு அவளைக் கண்டு முகம் கடுத்தது. தமையனின் முன் எதையும் காட்ட முடியாமல் அமர்ந்திருந்தாள்.

எல்லோருக்கும் சிறு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, “இந்தாங்கோ அன்ட்ரி, நீங்க கேட்ட மருந்து.” என்று மாத்திரைகள் அடங்கிய பையை எடுத்து நீட்டினாள் யசோ.

“காசம்மா…” சிந்தாமணிக்கு உள்ளே சென்று பணத்தை எடுத்துக்கொடுக்க முடியும் போலில்லை.

உதடுகள் வறண்டு, கண்களில் கலக்கத்தைச் சுமந்திருந்தவரைப் பார்க்க, அவர் நன்றாக இல்லை என்று அவளுக்கும் புரிந்துபோனது. அதில், “அதப் பிறகு பாப்பம். நீங்க முதல் வந்து ஒரு குளிசையைப்(மாத்திரை) போடுங்கோ.” என்று அவரைக் குசினிக்குள் அழைத்துச் சென்று, ஒரு நாற்காலியில் அமரவைத்தாள். அப்படியே, கொண்டுவந்த மாத்திரைகளில் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்து, அருந்தத் தண்ணீரும் கொடுத்தாள்.

அவள் செய்வதையெல்லாம் பார்த்திருந்தவருக்கு விழிகள் கரித்துக்கொண்டு வந்தன. மாத்திரையை விழுங்கிவிட்டு நெஞ்சை நீவிவிட்டார்.

“எதையும் யோசிக்காதீங்கோ அன்ட்ரி. கொஞ்சம் அமைதியா இருங்கோ.” என்றாள் இதமான குரலில்.

அவளை நிமிர்ந்து பார்த்தவரின் விழிகளில் பெரும் கலக்கம். “எப்பிடியம்மா அப்பிடி இருக்கிறது, சொல்லுங்கோ? இவளைக் கட்டி அவன் பட்ட பாடெல்லாம் வாயால சொல்லேலாது ஆச்சி. ஒரு இரவு முழுக்க விசரன் மாதிரி ரோட்டுல நிண்டுபோட்டு வந்து, அக்காக்காரின்ர கையப் பிடிச்சு அழுதவனம்மா. அந்த நிமிசமே நான் செத்திட்டானாச்சி. இப்ப வந்து திரும்பவும் அவனுக்கே அவளைக் கட்டி வைப்போமாம். என்ர பிள்ளை என்ன செய்யப் போறானோ தெரியேல்ல. என்னதான் விருப்பம் இல்லாட்டியும் அக்கான்ர வாழ்க்கையா, அவன்ர சந்தோசமா எண்டு வந்தா என்ர பிள்ளை எங்கட நிம்மதியத்தானம்மா பாப்பான்.”

அவர் அழுவதைப் பார்க்க முடியாமல், “எனக்கு விளங்குது அன்ட்ரி. ஆனா, இப்பிடி நீங்க அழுது, உடம்பைக் கெடுகிறதால ஒண்டும் நடக்காது. நிதானமா இருங்கோ.” என்றவள் பார்வையில், மாமரத்தின் கீழே நின்றிருந்தவனின் முதுகுப்புறம் தெரிந்தது.

நொடியில் முடிவு செய்தவளாக, “ஒரு நிமிசம் அன்ட்ரி.” என்றுவிட்டு அவனை நோக்கி நடந்தாள்.

காலடிச் சத்தம் கேட்டுத் தமக்கையாக்கும் என்று திரும்பிப் பார்த்தான் அகத்தியன். இவளைக் கண்டு, இவள் எங்கே இங்கே என்று புருவம் சுருக்கினான். அவனுக்கு அவள் வந்தது கருத்திலேயே இல்லை.

“ஏன் இப்பிடிக் கோவப்படுறீங்கள்? அங்க, உங்கட அம்மாவையும் அக்காவையும் பாருங்கோ. பயந்துபோய் இருக்கினம். அவேக்கு ஏதும் நடந்தா என்ன செய்வீங்க?” மெல்லிய கோபம் தொனிக்கும் குரலில் கேட்டாள் யசோ.

சுளித்திருந்த புருவங்களோடு பார்வையை எங்கோ பதித்திருந்தானே தவிர பதில் தரவில்லை.

“முதல் ஏன் இவ்வளவு டென்சன்? உங்கட வாயில இருந்து ஓம் எண்டுற வார்த்த வெளில வராம, இங்க எதுவும் மாறாதெல்லா? பிறகென்ன? நிதானமா இருங்க.”

‘அதுதானே…’ ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்து தன்னை நிதானப்படுத்தினான் அகத்தியன். அவன் புருவங்களின் சுளிப்பு எடுபட்டிருந்தது.

“நீங்க நிதானமாவும் தெளிவாவும் இருந்தாத்தானே உங்கட அக்காவும் அம்மாவும் தைரியமா இருப்பினம்.” என்றவளை நேராக நோக்கி, “என்னை நீங்க கட்டுறீங்களா?” என்றான் நிதானமாக.

அவள் முகத்தில் அப்பட்டமான திகைப்பு. “என்ன விசர்க் கதை கதைக்கிறீங்க? நான் என்ன சொல்லுறன், நீங்க என்ன கேக்கிறீங்க?” என்றுவிட்டு வந்ததை விடவும் வேகமாகத் திரும்பி நடந்தாள்.

“நான் சும்மா கேக்கேல்ல. உண்மையாத்தான் கேக்கிறன். எனக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை வேணும். அமைதியான நித்திரை வேணும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு சந்தோசம் வேணும். முக்கியமா எனக்கொரு குடும்பம் வேணும். அது உங்களிட்டக் கிடைக்கும் எண்டு நம்புறன். என்னைக் கட்டுறீங்களா?” போகிறவளைப் பார்த்துத் திரும்பவும் கேட்டான்.

இதற்குள் அவள் தன்னைச் சமாளித்திருந்தாள்.

திரும்பி வந்து, “இப்ப நடந்த பிரச்சினைகளால நீங்க இப்பிடிக் கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். கொஞ்சம் நிதானமாகுங்கோ. அதுக்குப் பிறகு, இப்ப நீங்க கதைச்சது எல்லாமே அர்த்தம் இல்லாதது எண்டு உங்களுக்கே விளங்கும்.” என்றாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இப்போது, அவனும் நிதானத்துக்கு வந்திருந்தான். ஒரு முடிவுக்கு வருகிற வரையில்தானே போராட்டம் எல்லாம்.

“உண்மையா இல்ல. ஒரு நிமிசத்துக்கு முதல் வரைக்கும் உங்களோட என்ர வாழ்க்கையை இணைச்சு நான் யோசிக்க இல்லதான். ஆனா, ரெண்டு பிள்ளைகளோட இவ்வளவு அமைதியாவும் நிம்மதியாவும் நீங்க உங்கட வாழ்க்கையைக் கொண்டுபோறதைப் பாத்து நிறைய நாள் வியந்திருக்கிறன். என்னால ஏன் இப்பிடி இருக்கேலாம இருக்கு எண்டு யோசிச்சிருக்கிறன். உங்களிட்ட வந்திட்டா அந்த அமைதியும் நிம்மதியும் எனக்கும் கிடைக்கும் எண்டு நம்புறன்.” என்றான் அமைதியான குரலில்.

அது, அவன் சும்மா சொல்லவில்லை என்று சொல்ல, “முதல், இப்ப நடக்கிற பிரச்சினையைத் தீர்க்கிறது எப்பிடி எண்டு பாருங்கோ.” என்றாள் அவள், அவன் முகம் பாராமல்.

“அதுக்கான தீர்வாத்தான் இந்தக் கலியாணத்தைக் கேக்கிறன்.”

அவனே இப்படிக் கேட்பது அவளைச் சங்கடப்படுத்தியது. “ப்ளீஸ்… இப்பிடி எல்லாம் கதைக்க வேண்டாமே.” எனும்போதே சிந்தாமணி அங்கு வந்தார். அவர்கள் பேச்சு அதோடு நின்றுபோயிற்று.

“அன்ட்ரி, எனக்கு நேரமாகுது. நான் வெளிக்கிடப்போறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ!” என்றுவிட்டு, கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடினாள்.

வீதியில் ஸ்கூட்டியை ஏற்றியவளின் தேகம் எங்கும் நடுக்கம். கொஞ்சத் தூரம் ஓட்டிச் சென்றுவிட்டு அதற்குமேல் முடியாமல் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டாள்.

இங்கே, அழுத முகத்தோடு நின்ற அன்னையைக் கண்டவனுக்கு அப்போதுதான் யசோதினி சொன்னது நினைவு வந்தது.

“என்னம்மா?” என்றான் இதமாக.

அவருக்கு அதற்கே விழிகள் மீண்டும் உடைப்பெடுக்க ஆரம்பித்தன. “கொஞ்சம் பொறுமையாக் கதையப்பு. உன்ர வாழ்க்கைய நாசமாக்கினது காணாது எண்டு உன்ர அக்கான்ர வாழ்க்கையையும் கெடுக்கப் பாக்கினம். அதுக்கு நீயே வழி செய்து குடுத்திடாத.”

அவனுக்கும் புரிந்தது. ஆனால், இப்போது ஒரு முடிவை எடுத்துவிட்டவனுக்குப் பதற்றமில்லை. அதில், “இனி அப்பிடி ஒண்டும் நடக்காது. நீங்க வாங்கம்மா.” என்று நடந்தவன் மீண்டும் நின்று, “அம்மா, நான் அவாவை… அதான் யசோதினியைக் கட்டுறது உங்களுக்கு ஓகேயா?” என்று கேட்டான்.

அவர் முகம் பூவாக மலர்ந்துபோயிற்று. “தம்பி, விளையாட இல்லையே. உண்மையாத்தானே கேக்கிறாய்?” என்றார் நம்பப் பயந்து.

“இதில எல்லாம் விளையாடுற நிலைமைலயா அம்மா நான் இருக்கிறன்?”

“உண்மையாப்பு முதல் என்னென்னவோ நினைச்சு வேண்டாம் எண்டுதான் இருந்தனான். ஆனா இப்ப, அந்தப் பிள்ளை ஓம் எண்டு சொல்லமாட்டாவா எண்டு இருக்கு.” என்றார் ஆர்வமும் ஆசையுமாக.

“அத நான் பாக்கிறன். நீங்க இனி நிம்மதியா இருங்க.” என்றுவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

மீண்டும் தமக்கையின் அருகில் அமர்ந்துகொண்டு, “சொறி அத்தான் கோவப்பட்டதுக்கு. ஆனா, நான் சொன்னதில மாற்றமில்லை.” என்றான் தெளிவாய்.

“இனி மாறாதுதான். அதுதான் அவள் வந்து மாய மந்திரம் போட்டுட்டாளே.” யசோதினி அவனைத் தேடிச் சென்றதையும், இருவரும் பேசியதையும் பார்த்துவிட்ட சவீதா, தமையன் இருப்பதையும் மறந்து கொதித்தாள்.

இப்படியான பேச்சுகள் பிடிக்காத கஜேந்திரன் முகத்தைச் சுளித்தான். அவனைக் கவனித்துவிட்டு, “சும்மா இரு பிள்ளை!” என்று தவமலர் தடுத்ததைக்கூட உணரும் நிலையில் சவீதா இல்லை.

“என்னத்தை அம்மா சும்மா இருக்கச் சொல்லுறீங்க? அண்டைக்கும் இப்பிடித்தான், ரோட்டுல நிண்டு கொஞ்சினவே. இண்டைக்கும் இவர் முன்பக்கத்தால போவாராம், அவா வீட்டின்ர பின்பக்கத்தால வருவாவாம். ரெண்டுபேரும் கதைப்பீனமாம். பிறகு ஒண்டுமே நடக்காத மாதிரி அவா போவாவாம். இதையெல்லாம் பாக்கிற நாங்க என்ன லூசா?” என்று சீறினாள்.

ஒருகணம் நம்பமுடியாமல் திகைத்தாலும், “சீச்சீ! என்ன கதையெல்லாம் கதைக்கிறாய்?” என்றான் கஜேந்திரன்.

“நான் ஒண்டும் சும்மா சொல்லேல்ல அண்ணா…” என்று ஆரம்பித்தவளை இடைமறித்து, “இப்ப விளங்குதா அத்தான், உங்கட தங்கச்சியைப் பற்றி?” என்று கேட்டான் அகத்தியன்.

கஜேந்திரனின் முகம் கன்றியது.

“எல்லாருக்கும் முன்னால வச்சே இப்பிடிக் கதைக்கிற ஒருத்தி, தனிமைல என்ன எல்லாம் கதைச்சிருப்பா எண்டு யோசிங்க. அதையெல்லாம் திரும்பவும் அனுபவிக்க என்னால ஏலாது. இனியும் இதைப் பற்றி நீங்க என்னட்டக் கதைக்க மாட்டீங்க எண்டு நம்புறன் அத்தான்.” என்றுவிட்டு எழுந்தவன், “எனக்கு இப்ப யசோதினியக் கட்டத்தான் விருப்பமா இருக்கு. அதால இனி ஆரும் என்ர கலியாணத்தைப் பற்றிக் கதைச்சுக்கொண்டு வர வேண்டாம்.” என்று அறிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

மூச்சுவிட்டால் கூடக் கேட்குமோ என்னுமளவில் அந்த வீடே நிசப்தமாயிற்று. சந்தோசத்தில் வெடிக்கப் பார்த்த விம்மலை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் இந்திரா.

தவமலருக்குத் தன் அத்தனை முயற்சிகளும் வீணாகிப்போன ஏமாற்றம். கஜேந்திரனுக்கு இனி இந்தப் பேச்சைப் பேசுவதில் அர்த்தமே இல்லை என்று தெளிவாயிற்று.

அதில், “இனி இது சரி வராதம்மா. விடுங்க, சவீதாக்கு வேற இடத்தில பார்ப்பம்.” என்று முடித்துக்கொண்டான்.

*****
அடுத்தநாள் யசோதினிக்கு அழைத்தான் அகத்தியன். நேற்றில் இருந்தே தன் நிம்மதியைத் தொலைத்திருந்தவள் இப்போது இன்னுமே பயந்தாள்.

அதற்கென்று அழைப்பை ஏற்காமல் இருக்க முடியாதே. நேராக வந்து நின்றாலும் நிற்பான். அவள் ஏற்க, “நான் அகத்தியன்.” என்றது அவனுடைய அழுத்தமான குரல்.

“சொல்லுங்கோ.” தன்னைத் திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றபடி சொன்னாள்.

“எனக்கு உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும். தொந்தரவு இல்லாம. எங்க பாக்கலாம்?”

“அப்பிடி என்ன…” எனும்போதே இடைமறித்து, “நேற்றுக் கதைச்சதைப் பற்றித்தான். எனக்கு என்ர முடிவில மாற்றமில்லை. உங்கட எண்ணத்தை மாத்த எனக்கு டைமும் நீங்களும் வேணும்.” என்றான் அவன் உறுதியான குரலில்.

இது என்ன விதமான பிடிவாதம்? அதைவிட, அவன் கேட்கும் விதம்? அவளும் தானாக நிமிர்ந்தாள்.

“என்ர முடிவை நான் ஒண்டும் உங்களை மாதிரி நிமிசத்தில எடுக்கேல்ல. ஆற அமர யோசிச்சு, எனக்கும் பிள்ளைகளுக்கும் எது நல்லது எண்டு பாத்து எடுத்தது. அதில எனக்கு மாற்றமில்லை. அதால, நானும் நீங்களும் கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல.” என்றாள் தெளிவாக.

“ஆனா, எனக்கு உங்களோட கதைச்சே ஆகவேணும். எங்க எண்டு நீங்க சொல்லாட்டி நான் பார்மசிக்கே வாறன்.” பிடிவாதமாக அவன் சொல்ல, பெருஞ்சினம் மூண்டது அவளுக்கு.

“என்ன, வெருட்டிப் பாக்கிறீங்களா? உங்களிலயும் உங்கட குடும்பத்திலயும் நல்ல மதிப்பு வச்சிருக்கிறன். உங்களுக்குப் பொறுமையாப் பதில் சொல்லுறதும் அதாலதான். தயவுசெய்து அதைக் கெடுக்கிற மாதிரி எதுவும் செய்யாதீங்க. பிறகு வீண் பிரச்சினைகள்தான் வரும்.” என்றாள் அவளும் எதற்கும் அசராமல்.

“நான் ஏன் உங்களை வெருட்ட? எனக்கு உங்களோட கதைச்சே ஆகவேணும். அதைத்தான் கொஞ்சம் அழுத்திச் சொன்னனான். உங்கட முடிவில மாற்றம் இல்லை எண்டால் என்னத்துக்கு என்னைப் பாக்க யோசிக்கிறீங்க? கடைசியா எண்டு நினைச்சு வந்திட்டுப் போங்களன்.” என்று தணிந்து வந்தான் அவன்.

அவன் சொல்வதுபோல் செய்வோமோ என்று அவள் யோசிக்க, “ஒரு முறை பாத்துக் கதைக்கிறதில இவ்வளவு யோசிக்க என்ன இருக்கு?” என்று இடையிட்டது அவன் குரல்.

“எங்க பாக்கிறது? வெளில எங்கயும் எனக்கு விருப்பம் இல்ல. இங்க பார்மசிலயும் சரிவராது.” அவன் வீட்டுக்கே போவோமா என்கிற யோசனையுடன் சொன்னாள்.

“என்ர கடைக்கே வாறீங்களா?”

அவள் தயங்கினாள்.

“வேற எங்கயும் பாக்கிறதைவிட கடையில பாக்கிறதுதான் சரியா இருக்கும். இங்க நான் தனியாவும் இல்ல. இன்னும் ரெண்டுபேர் வேலைக்கு இருக்கினம்.” என்று அவன் சொன்ன பிறகுதான் சம்மதித்தாள்.

“தூரியும் வருவாவா?”

“இல்ல, அவா இண்டைக்கு வரேல்ல.”

“ஏன், பிள்ளைக்கு என்ன?”

“கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதால ஸ்கூல் விடேல்ல.”

“ஓ! ஆஸ்பத்திரில காட்டினதா?”

“இல்ல, லேசாத்தான் உடம்பு சுட்டது. நாளைக்கும் சுகமாகாட்டிக் காட்ட நினைச்சன்.”

“சரி, அப்ப பின்னேரம் வாங்க. நான் கடை அட்ரெஸ் மெசேஜ் பண்ணிவிடுறன்.”

“ம்…”

இன்னும் அவளுக்கு இருக்கும் தயக்கத்தை அந்த, ‘ம்’ சொல்ல, “பயப்பிடாதீங்க. நீங்க சங்கடப்படுற மாதிரி எதுவும் கதைக்கமாட்டன்.” என்றான் அவன்.

“இல்லயில்ல, அப்பிடி இல்ல.” இதுவரையில் பார்வை, செயல், பேச்சு என்று எதிலுமே அவன் தவறியது இல்லை என்பதில் அவசரமாகச் சொன்னாள்.

“ஓகே! அப்ப பின்னேரம் பாப்பம்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அகத்தியன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 13


அவனிடம் வருவதாகச் சொன்ன கணத்திலிருந்து, தன் முடிவு சரிதானா என்கிற கேள்வியை அவள் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதல் வேலையாகக் கமலாம்பிகைக்கு அழைத்து, வீட்டுக்கு வரக் கொஞ்சம் நேரம் செல்லும் என்று சொல்லிவிட்டு வைத்தாள்.

மாலையானது. போவதா என்கிற கேள்வி மீண்டும். வருகிறேன் என்றுவிட்டு இது என்ன அர்த்தமற்ற யோசனை என்று தன்னையே குட்டிக்கொண்டு, அவனுடைய பலசரக்குக் கடைக்குச் சென்றாள். அங்கே, நெற்றியில் திருநீறு சந்தனம் தீட்டி, சாந்தமான முகமும் கனிவான பார்வையுமாக ஒரேயொரு ஐயா மட்டுமே இருந்தார்.

அவரிடம் அவனை எப்படிக் கேட்பது என்று அவள் தயங்கி நிற்க, “நீங்கதானே தூரிக்குட்டின்ர அம்மா. பிள்ளைக்குக் காய்ச்சலாம் எண்டு தம்பி சொன்னார். இப்ப எப்பிடி இருக்கிறா?” என்று, நெடுநாள் பழகியவர் போன்று விசாரித்தார் அவர்.

உள்ளூர வியப்புப் பரவ, “பரவாயில்லையாம் எண்டு அம்மா சொன்னவா. இனிப் போய்ப் பாத்தாத்தான் தெரியும்.” என்றவள் பார்வை, அகத்தியன் எங்கே என்று தேடிற்று.

“தம்பி, நீங்க வருவீங்க எண்டு சொன்னவர். நேராப் போங்கோம்மா. உள்ளுக்கதான் நிக்கிறார்.” என்று அவர் சொல்லும்போதே, ஈரக்கையைத் துண்டு ஒன்றினால் துடைத்தபடி வந்தான் அகத்தியன்.

“வாங்க!” என்று அழைத்துப் போனான். முதலில் கடை, அதற்கு நேர் பின்னே ஸ்டோர் ரூம் போன்ற ஒன்று. அதற்கு நேர் பின்னேயும் ஒரு பகுதி இருந்தது. அது இருபக்கமும் இரண்டு அறைகளாகப் பிரிந்திருக்க, அந்தப்பாதை நேராகச் சென்று பின்பக்கக் கதவில் முடிந்தது.

அவன், வலப்பக்கம் இருக்கும் அறையின் கதவைத் திறந்து அழைத்துப் போனான்.

ஒற்றையடிப் பாதைக்கு மட்டுமே இடம் விட்டது போன்று, பொருட்களால் நிறைந்திருந்த கடை, அங்கு மட்டும் அப்படி இல்லாமல் வெகு நேர்த்தியாக, ஒரு அலுவலக அறையாகக் காட்சி தந்தது.

அவன், தன் மேசையின் முன்னே இருந்த இருக்கையைக் காட்டிவிட்டு, “தேத்தண்ணி ஊத்தவா?” என்று வினவினான்.

“இல்ல, நான்…”

“நான் நல்லாவே ஊத்துவன்.” அவளை மறுக்கவிடாமல் இடையிட்டுச் சொன்னவன் தண்ணீரைக் கொதிக்கவிட்டான். பிஸ்கட் பக்கட் ஒன்றை உடைத்து, ஒரு தட்டில் போட்டு அவள் முன்னே வைத்தான்.

பேச வேண்டியதைப் பேசிவிட்டு அவளை அனுப்புவதை விட்டுவிட்டு இதென்ன உபசரிப்பு என்று இருந்தது அவளுக்கு.

“எனக்கு நிறைய நேரம் மினக்கெடேலாது.”

“எனக்கும் தெரியும். ஆனா, முழுநாளும் வேலை செய்து களைச்சுத் தெரியிற உங்களுக்கு, ஒண்டும் தராம கதைக்கச் சொல்லுறீங்களா? ரெண்டு நிமிசம்தான்.” என்றவன், தேநீரை இலாவகமாக ஊற்றி, அருந்தும் பதத்திற்கு ஆற்றி, அதை இரண்டு கோப்பைகளில் வார்த்து, ஒன்றை அவள் முன்னே வைத்தான். மற்றையதைத் தனக்கு எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

ஒரு வாய் பருகிப் பார்த்துவிட்டு, “நல்லாத்தான் இருக்கு. குடிச்சுப் பாருங்க.” என்றான்.

அதற்குமேல் அப்படியே இருக்க முடியாமல் எடுத்து அருந்தினாள். உண்மையில் அவள் இருந்த மனநிலைக்கு இதமாக இருந்தது.

தன் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, “உங்களுக்கு என்னைப் பற்றி எவ்வளவு தூரத்துக்குத் தெரியும் எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா, முதல் கலியாணத்தில நான் பட்டது நிறைய. இப்ப கூட அந்தக் காலமும், அப்ப அனுபவிச்ச கேவலங்களும் நினைவில வந்தா என்னால நித்திரை கொள்ளேலாது. அப்பிடி ஒரு நரகம் அது. ஒரு நாள் முழுக்க என்னை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க வச்சவள். அண்டைக்கு அங்க இருந்த போலீஸ்காரர் எல்லாரும் என்னைக் கேட்ட கேள்விகள் இருக்கே… அதுக்குப் பேசாம என்னை மண்ணுக்க புதைச்சிருக்கலாம்.” என்று அவன் சொல்ல, அவனையே பார்த்தாள் யசோ.

“இதுவரைக்கும் அதைப் பற்றியெல்லாம் அம்மா அக்காட்டக் கூடச் சொன்னதே இல்ல. ஆனா, அண்டைக்குப் பிறகு மொத்தமா வெறுத்தே போச்சு. அதாலதான் இனியும் ஒரு கலியாணம் வேண்டாம் எண்டு இருந்தனான். உண்மையைச் சொல்லப்போனா இன்னொரு பொம்பிளையை நம்பிற அளவுக்குத் தைரியம் இல்ல. அதைச் சாட்டா வச்சு அத்தான் வீட்டாக்கள் திரும்பவும் சவீதாவை என்னோட சேர்த்துவிடப் பாக்கினம்.” என்றவனை இடைமறித்து,

“இதுக்காக ஒரு கலியாணம் சரி எண்டு நினைக்கிறீங்களா?” என்று வினவினாள் அவள்.

“இதுக்காக எண்டு நானும் சொல்லேல்லையே!” என்றான் அவன் சின்ன முறுவலோடு.

“அப்பிடி, ஆரையும் நம்பவே மாட்டன் எண்டு இருந்த நான், உங்களை எப்பிடி நம்பினன் எண்டு எனக்கே தெரியேல்ல. இப்ப வரைக்கும் நான் கேட்ட கேள்வி பிழை எண்டோ, அவசரப்பட்டு வாயை விட்டுட்டனே எண்டோ நினைக்கவே இல்ல. எப்பிடியாவது உங்களை ஓம் எண்டு சொல்ல வச்சுக் கலியாணத்தைச் செய்திடோணும் எண்டுதான் விருப்பமா இருக்கு.” என்றதும் அவளுக்கு அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் போயிற்று.

“அம்மா, அக்கா எல்லாருக்குமே விருப்பம். உங்கட பதிலுக்காகத்தான் மொத்தக் குடும்பமும் எதிர்பாத்துக்கொண்டு இருக்கிறம்.” அவளைத்தான் மணப்பேன் என்று வீட்டில் சொன்னதைச் சொல்லி, அவளுக்குச் சங்கடத்தை உருவாக்க அவனுக்கு மனமில்லை.

உண்மையில் அவன் முகம் பார்த்துத் தன்னைப் பற்றிச் சொல்லச் சிரமப்பட்டாள் யசோ. ஆனால், பேச என்று வந்துவிட்டுப் பேசாமல் இருக்க முடியாதே.

“இவர்… கிசோர் இருக்கிற வரைக்கும் நல்ல சந்தோசமாத்தான் போனது வாழ்க்கை. பிறகும்… இவர் இல்லை எண்டுறதைத் தவிர்த்து, குறை எண்டு சொல்ல…” என்றவள் ஒன்றுமில்லை என்பது போன்று கைகளை விரித்தாள்.

“நாளாக நாளாக ஒரு மாதிரியான அழுத்தம். சில நேரங்களில தனி ஒருத்தியாச் சமாளிக்கவே ஏலாம இருக்கும். ஓய்வில்லாம ஓடிக்கொண்டே இருக்கோணும். இதில, ஆரும் ஒரு வார்த்த சொல்லாத அளவுக்கு நடை, உடை, பாவனை எல்லாத்திலயும் கவனமாவும் இருக்கோணும். அவே போட்டு வச்சிருக்கிற அந்தக் கோட்டை நான் தாண்டிட்டா எனக்கு வேற பெயர் வந்திடும். அந்த நேரமெல்லாம் எனக்கு ஒண்டு நடந்திட்டா என்ர பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டுற பயம் வரும். இப்பிடி வறட்சியாவே இருந்த வாழ்க்கை தந்த சலிப்பிலதான் என்னையும் பிள்ளைகளையும் ஏற்கிற நல்ல ஒருத்தர் கிடைச்சா, வாழ்க்கை திரும்பவும் நல்லாருக்குமே எண்டுற ஆசை வந்தது. அதுக்கான முயற்சிகள நானாவே எடுத்தனான். அந்த நேரம் ஒண்டும் அமையேல்ல. பிறகு பிறகு… எனக்கும் அந்த எண்ணம் இல்லாமப் போயிட்டுது.”

கடைசி வரியைச் சொல்கையில் அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டதிலேயே ஏதோ நடந்திருக்கிறது என்று விளங்க, “அது ஏன்?” என்றான் அவன் சுருக்கமாக.

“அது… ஏனோ விருப்பம் இல்லாமப் போயிற்றுது.”

இப்போதும் தன் பார்வையைத் தவிர்க்கிறாள் என்பதைக் குறித்துக்கொண்டு, “ஆரம்பத்தில இருந்தே உங்களுக்கு அந்த விருப்பம் இருந்திருக்காட்டி அது வேற. ஆனா இருந்திருக்கு. தெளிவா யோசிச்சுத்தான் அந்த முடிவை எடுத்தும் இருக்கிறீங்க. பிறகு வேணாம் எண்டு நினைச்சிருக்கிறீங்க எண்டா என்னவோ நடந்திருக்க வேணும். என்ன எண்டு சொல்லுங்கோ?” என்று, இதமாகவே அவளைப் பேசவைக்க முயன்றான் அவன்.

அவளுக்குச் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பம். அன்னையே அவளைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. அவன் எப்படி?

“யோசிக்காமச் சும்மா சொல்லுங்கோ. என்ன எண்டாலும் நான் பிழையா நினைக்க மாட்டன். அம்மா அக்காட்டக் கதைக்காத விசயங்களைக் கூட இப்ப உங்களிட்டச் சொல்லி இருக்கிறன். அதுக்குக் காரணம், அவேயே விட என்ர நிலைமைல இருக்கிற உங்களுக்குக் கூட விளங்கும் எண்டுறதுதான். அதேதான் உங்களுக்கும். நீங்க சொன்னா உங்களை எனக்கு இன்னும் கொஞ்சம் கூட விளங்கலாம். இல்ல, உங்கட மறுப்பில இருக்கிற நியாயம் விளங்கலாம்.” என்றதும் தன் தயக்கம் உதறினாள் அவள்.

“அது… நானாத்தான் ஆரம்பிச்சு, நானாத்தான் புரோக்கர் வரைக்கும் போனனான். அது… அம்மாக்குப் பிள்ளைகளில பாசம் இல்லாம நான் என்ர… சந்தோசத்துக்காகப் பாக்கிற மாதிரிப் பட்டிருக்குப் போல. அதுக்கு அம்மா… பிள்ளைகள் இருக்கிறதைச் சொல்லாம நீ ஒரு கலியாணத்தை கட்டு, நான் உயிரோட இருக்கிற வரைக்கும் ரெண்டு பிள்ளைகளையும் வச்சுப் பாக்கிறன், அதுக்குப் பிறகு கடவுள் விட்ட வழி எண்டு சொன்னவா…” என்றவளுக்கு மேலே பேச முடியாமல் முகம் சிவந்து, விழிகள் நிறைந்து போயின.

அவளைப் பார்க்கவே அவனுக்குப் பாவமாயிற்று. கிட்டத்தட்ட அவளைத் துணைக்கு அலைவதாக எண்ணியிருக்கிறார். இல்லாமல் அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அலைதலுக்கும் தேடுதலுக்கும் வித்தியாசம் உண்டே! அலைதல் கண்ணில் படுவதைப் பற்றிக்கொள்ளும். தேடுதல் பொருத்தமானதைக் கண்டடையும். அவள், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பொருத்தமான ஒருவனைத் தேடிக் கண்டடைய முதலே, வார்த்தைகளால் அடித்துத் தடுத்து நிறுத்தியாயிற்று.

பிள்ளைகள் மீது எவ்வளவு பாசமும் கவனமுமாக இருப்பாள் என்று அவனுக்கே தெரியும். அப்படியானவளிடம் போய் இப்படிச் சொன்னால் நொறுங்கித்தான் போவாள்.

மலை முட்டியும் அசையாதவன் மயிர் தடுக்கி மரணித்த கதைதான் அவளுக்கு நடந்திருக்கிறது. இரண்டாவது திருமணத்தைத் தானே முன்னெடுக்கும் அளவுக்கு மனத்திடம் நிறைந்தவளையே உடைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது பெற்ற அன்னையின் பேச்சு.

இதற்குள் அவள் தன்னைச் சமாளித்திருந்தாள். “அதுக்குப் பிறகு ஒரு வைராக்கியத்தில அதைப் பற்றி நான் யோசிக்க இல்ல. ஆனா இப்ப, உண்மையா எனக்கு விருப்பமில்ல. பிள்ளைகள் ரெண்டு பேருமே வளந்திட்டினம். இனி என்ன…” என்று முடிக்காமல் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

இனி அவளுக்கென்று ஒரு வாழ்க்கையை யோசிக்க என்ன இருக்கிறது என்று கேட்கிறாள். அந்தளவுக்கு இவள் வயதும் வாழ்க்கையும் போயிற்றா என்ன? இப்படித்தானே இத்தனை வருடங்களாக நீயும் இருந்தாய் என்று உள்மனம் குட்டியதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“உங்கட அம்மா அப்பிடிச் சொன்னது உங்களக் காயப்படுத்தி இருக்கும்தான். ஆனா, அது உண்மை இல்லை எண்டு உங்களுக்குத் தெரியும்தானே. பிறகும் ஏன் அதையெல்லாம் பெருசா எடுக்கிறீங்க?”

அவளாக எங்கே பெரிதாக எடுத்தாள்? அவள் மனதுதான் காயப்பட்டுப் போயிற்று. இன்றுவரையில் அதிலிருந்து மீள முடியவில்லையே!

“அல்லது… நான் உங்களுக்கும் உங்கட பிள்ளைகளுக்கும் நிம்மதியான ஒரு வாழ்க்கையைத் தரமாட்டன் எண்டு நினைக்கிறீங்களா?” மெல்லக் கேட்டுப்பார்த்தான்.

“இல்ல… நான் அந்தளவுக்கெல்லாம் யோசிச்சதே இல்ல.”

“நேற்று நான் கேட்டதுக்குப் பிறகுமா?” மெல்லிய ஏமாற்றத்துடன் வினவினான்.

கேட்டால் உடனே யோசித்துவிட வேண்டுமா? அவனை இனி எப்படித் தவிர்ப்பது என்றுதான் நேற்று முழுக்க யோசித்துக்கொண்டு இருந்தாள்.

“சரி, இப்ப யோசிச்சுச் சொல்லுங்க. அப்பிடி ஏதும் எண்ணம் வருதா என்னைப் பற்றி நினைக்க?” என்றான் மீண்டும்.

அவள் தன் கை விரல்களை ஆராய்ந்தாள்.

“சரி, என்னைப் பற்றி எனக்குத் தெரிஞ்சதச் சொல்லுறன். அதுக்குப் பிறகாவது ஏதாவது சொல்லேலுமா எண்டு பாருங்க. எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. டிவோர்ஸ் தராம அவள் இழுத்தடிச்ச நேரம், ரெண்டு மூண்டு தரம் குடிச்சிட்டு இந்தக் கடைக்கையே விழுந்து கிடந்திருக்கிறன். ஆனா, அடுத்த நாள் தலையை நிமித்தவே ஏலாம இருக்கும். அதுக்குப் பிறகு அந்தப் பக்கம் போனதே இல்ல.” என்றவனை விழிகள் விரியப் பார்த்தாள் யசோ.

அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு. “இது எனக்கும் உங்களுக்கையும் மட்டும்தான் இருக்கோணும், சரியா? அக்கா, அம்மாக்குத் தெரியாது. இனியும் தெரியக் கூடாது.” என்றான் எச்சரிப்பது போல்.

சொல்லாமல் கொள்ளாமல் அவன் களவுக்குள் அவளையும் கூட்டுச் சேர்த்துவிட்டவனை மலைப்புடன் பார்த்தாள் அவள்.

“எனக்குக் கோவம் கொஞ்சம் டக்கு டக்கெண்டு வரும்தான். ஆனா, கேவலமாக் கதைக்கிறது, கைய நீட்டுறது, ஒருத்தரின்ர மனம் நோகக் கதைக்கிறது எல்லாம் வராது. என்னை இவ்வளவு மோசமா ஏமாத்தி, கேவலப்படுத்தி, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்தவளைக் கூட நான் கை நீட்டி அடிச்சது இல்ல. உங்களை எல்லாம் சான்ஸே இல்ல. நீங்க எனக்கு அடிக்காம இருந்தா சரி.” என்றதும் சிரிப்பு வரும்போலிருந்தது அவளுக்கு.

“கடை சொந்தக் கடைதான். ஆனா லோன் இன்னும் இருக்கு. முதலே கட்டியிருக்கலாம். லோயர், கோர்ட், கேஸ் எண்டு அலஞ்சதில நிறையச் செலவு. அத்தான் ஹெல்ப் பண்ண வந்தவர்தான். எனக்குத்தான் வாங்க விருப்பமில்ல. அதால வேண்டாம் எண்டு சொல்லீட்டன். ஆனா, அதை நினைச்செல்லாம் பயப்பிடாதீங்க. இன்னும் ஒண்டரை வருசத்தில மொத்தமா முடிச்சிடுவன்.”

“நான் இதைப் பற்றி ஒண்டும் கேக்கேல்லையே.” கடனைப் பற்றியெல்லாம் அவன் சொன்னது அவளுக்கு ஒருமாதிரி இருந்ததில் இடையிட்டுச் சொன்னாள்.

“இல்ல, நீங்க என்னைப் பற்றி யோசிக்கிறதுக்கு இது எல்லாத்தையும் நான் சொல்லோணும் எல்லா.” என்றுவிட்டு, “இந்தக் கலியாணம் நடந்தா எனக்கு ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகளும் நீங்களும் கிடைப்பீங்க. உங்களுக்கு ஒரு துணையா நான் இருப்பன். பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவும் அப்பாவுமா நானும் நீங்களும் இருக்கலாம். நாங்க நாலுபேரும் சேர்ந்தா ஒரு முழுமையான குடும்பம் நாலுபேருக்கும் கிடைக்கும். உண்மையாவே உங்கட ரெண்டு பிள்ளைகளிலயும் எனக்கு நல்ல விருப்பமும் பாசமும் இருக்கு. அந்தளவுக்கு நீங்களும் அருமையாத்தான் வளத்து இருக்கிறீங்க. அது, ஒரு தகப்பன்ர பாசமா நிச்சயமா மாறும் எண்டு நம்புறன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தா, குறிப்பத் தாங்க. இதுகூட அம்மான்ர விருப்பத்துக்காகத்தான் கேக்கிறன். மற்றும்படி உங்களைக் கட்ட, அவே ரெண்டு பேருக்கும் ஒரு அப்பாவா இருக்க முழு மனதோட நான் தயார்!”

இவ்வளவு நேரமாக உறுதியாக இருந்த அவள் மனது, அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு மெலிதாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

“கலியாண வாழ்க்கை இப்பிடியாகிப் போச்சே எண்டுற கவலை இருந்தாலும், கழுத்த நெரிச்ச கயித்தில இருந்து வெளில வந்திட்டன் எண்டு ஆசுவாசமாத்தான் இருந்திருக்கு. ஆனா, ஒரு பிள்ளை இல்லாமப் போச்சே எண்டு நிறைய நாள் ஏங்கி இருக்கிறன். இந்தக் கலியாணம் நடந்தா உங்களிட்ட இருந்து நான் எதிர்பாக்கிறது ஒரே ஒரு விசயம் மட்டும்தான். உங்களால முடிஞ்சா அந்த ஆசைய நிறைவேற்றுங்க. எனக்கும் ஒரு பிள்ளை வேணும் எண்டுற ஆசை இருக்கு. திரும்பவும் சொல்லுறன் உங்களாலயும் உங்கட உடம்பாலயும் முடிஞ்சு, உங்களுக்கு என்னில நம்பிக்கை இருந்தா மட்டும்தான். இல்லாட்டி அவே ரெண்டு பேருமே எனக்குப் போதும்.” என்றதும் சங்கடத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

“ப்ளீஸ், என்னடா இப்பிடி எல்லாம் கதைக்கிறானே எண்டு நினைக்காதீங்க. உங்களுக்கு ஏற்கனவே ரெண்டு பிள்ளைகள். நாங்க ரெண்டு பேருமே முப்பதைத் தாண்டின ஆக்கள். உங்கட உடல் நிலை, மனநிலை, பிள்ளைகள் ரெண்டு பேரும் இதுக்கு என்ன சொல்லுவீனம் எண்டு நிறையச் சிக்கல் இருக்கு. அதையெல்லாம் யோசிக்காமல் கலியாணம் நடந்த பிறகு எனக்கு ஒரு பிள்ளையைப் பெத்துத் தாங்க எண்டு கேக்கிறதுதான் பிழை. அதான் இப்பவே எல்லாத்தையும் சொன்னனான். இவ்வளவுதான் நான், என்ர எதிர்பார்ப்பு, நிலைமை எல்லாம். இனி நீங்கதான் முடிவைச் சொல்லோணும்.” என்றான்.

உண்மையில் பதில் சொல்லத் திணறினாள் யசோ. இத்தனை நாள்களும் எப்படியான ஒருவனை எதிர்பார்த்தாளோ அப்படியான ஒருவன் அவள் முன்னால் அமர்ந்திருக்கையில் என்ன சொல்வாள்?

அவள் முகத்தில் எதைக் கண்டானோ, “என்ன, நாளைக்குக் குறிப்பக் கொண்டு வாறீங்களா?” என்றான்.

இன்னொரு பிள்ளை வரைக்கும் பேசிவிட்டுக் குறிப்பைக் கேட்பானா?

அது அவளைச் சீண்ட, “தப்பித்தவறிக் குறிப்புப் பொருந்தாட்டி என்ன செய்வீங்க?” என்றாள்.

அதுதானே? இப்படி ஒரு கோணத்தில் யோசித்திராதவன் பதில் தெரியாமல் விழித்துவிட்டு, “நல்ல கேள்வி!” என்று சமாளித்தான்.

அவள் உதட்டினில் சின்னதாக முறுவல் அரும்பிற்று.

பார்வை ஒரு கணம் அந்த முறுவலில் நிலைத்து மீள, “என்ன, நான் பதில் இல்லாம நிக்கிறதப் பாக்கச் சந்தோசமா இருக்குப் போல!” என்றான் அவன்.

அவள் முறுவல் விரிந்தது.

“அம்மா சொல்லி, சுசீலாக்கா கேட்டு நீங்க தர இல்லையாம் எண்டு அம்மா எனக்குப் பேச்சு. ரெண்டு பிள்ளைக்காரியே உன்ன வேண்டாம் எண்டு சொல்லுற நிலைக்கு நீ வந்திட்டாய் எண்டு.” என்றதும் என்ன முயன்றும் அவளால் சிரிப்பை மறைக்க முடியாமல் போய்விட, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவன் உதட்டிலும் விரிந்த சிரிப்பு. “அதில, குறிப்புப் பொருந்தினா என்ன செய்றது, பொருந்தாட்டி என்ன செய்றது எண்டெல்லாம் நான் யோசிக்கேல்ல. அந்தளவுக்கு அதுக்கு நான் முக்கியத்துவம் குடுக்கவும் இல்ல. இப்ப சொல்லுறன், நீங்க குறிப்புத் தர வேண்டாம். அதே மாதிரி நான் கட்டினா உங்களைத்தான் கட்டுவன்.” என்றான் உறுதியான குரலில்.

“சேச்சே! என்ன இது? இப்பிடியெல்லாம் சொல்லாதீங்கோ!” என்றவள் அப்போதுதான் நேரத்தைக் கவனித்துப் பதறி எழுந்தாள்.

“எனக்கு நேரமாயிற்றுது, நான் போகோணும்”

பதில் சொல்லாமல் புறப்படுகிறாளே என்று பார்த்தான் அகத்தியன். அவளை நிறுத்திவைக்கவும் முடியாது. தானும் எழுந்து அவளோடு கூடவே வாசல் வரை வந்தான்.

வெளியே இருட்ட ஆரம்பித்திருந்தது. “போயிடுவீங்களா? கொஞ்சம் இருட்டிட்டுதே.” என்றான் கவலையோடு.

“அதெல்லாம் பிரச்சினை இல்ல. இதைவிட லேட்டாவும் போயிருக்கிறன்.” என்றவளுக்குப் புறப்பட்டுவிடும் அவசரம்.

“அப்ப தூரியாவது இருப்பா. இப்ப தனியா எல்லா. நானும் வரவா?”

“ப்ளீஸ், கதைச்சு கதைச்சு இன்னும் லேட்டாக்காதீங்கோ. உண்மையாவே பயமில்லை. இல்லாட்டி நானே சொல்லுவன்.”

அவனுக்கும் அதற்குமேல் வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. திடீரென்று அளவுக்கதிகமாக அக்கறை காட்டுவதாக நினைத்துவிடுவாளோ என்றிருந்தது.

“எனக்கு உங்கட லொக்கேஷனை ஷேர் பண்ணிப்போட்டுப் போங்க. நீங்க லேட்டா போறது என்னால. என்னையும் வர வேண்டாம் எண்டு சொல்லுறீங்க. நான் பயமில்லாம இருக்கிறதுக்காவது தந்திட்டுப் போங்க.”

அதற்குமேல் கதைத்து நேரத்தை விரயமாக்க விரும்பாமல் அனுப்பிவிட்டுப் புறப்பட்டாள். அதன்பிறகு, அவன் கைப்பேசி இயங்கு நிலையிலேயே இருந்தது. அவள் நகர்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சரியாக முப்பது நிமிடங்கள் கடந்து, அவளிடம் அசைவைக் காணவில்லை எனவும், “போய்ட்டீங்களா?” என்று ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டான்.

“ஓம்.” என்று சுருக்கமாக வந்தது பதில்.

கொஞ்சம் தயங்கிவிட்டு, “தூரி எப்பிடி இருக்கிறா? காய்ச்சல் விட்டுட்டுதா?” என்று கேட்டு அனுப்பியிருந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பதில் வரவேயில்லை. அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. அதன் பிறகுதான், “ஓம் பரவாயில்லை.” என்று வந்தது.

‘பரவாயில்ல எண்டா என்ன அர்த்தம்?’ அதையும் கேட்போமா என்று யோசித்துவிட்டு விட்டுவிட்டான்.

மனத்தில் மட்டும் மெல்லிய அலைப்புறுதல். அவனைக் கண்டாலே அகத்தியன் மாமா என்று உற்சாகமாகக் கூவும் சின்ன பெண், கண்களுக்குள்ளேயே நின்றாள்.
 
Status
Not open for further replies.
Top Bottom