வெளிச்சக்கீற்று

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 14


அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இனி இப்பிடி லேட்டாக்காதீங்கோ!’ என்ற அன்னையைச் சமாளித்து, நாள் முழுக்கத் தன்னைக் காணாத ஏக்கத்தில் சிணுங்கிய சிந்தூரியைத் தேற்றி, காய்ச்சல் இல்லாதபோதும் சோர்ந்து தெரிந்த தூரிகாவைக் கவனித்து, அவர்களுக்கு உணவு கொடுத்து, நடுநடுவே தன்னையும் கவனித்து என்று எல்லா வேலைகளையும் முடித்தபோது, உண்மையில் அவள் முதுகு ஒடிந்தே போயிற்று.

பிள்ளைகளுக்கு நடுவே படுத்ததுதான் தெரியும். அவள் விழிகள் உறக்கத்தில் சொக்கிப்போயின. அகத்தியன் சொன்னவற்றைப் பற்றி யோசிக்கக் கூட நேரமிருக்கவில்லை.

ஆனால், அடுத்தநாள் காலை எழுந்ததில் இருந்து அந்த யோசனைதான். இன்னொரு வாழ்க்கையைத் தேடும்போது இருந்த துணிவு, முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபோது இல்லாது போயிற்று. பலவிதப் பயங்களும் குழப்பங்களும் நெஞ்சைக் கவ்வின.

சொன்னதுபோல பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பானா, அல்லது, இப்போது இனிக்க இனிக்கப் பேசிவிட்டு நாளைக்கு மாறிவிடுவானா? மாற்றாந்தகப்பனின் பிள்ளைகள் என்று தள்ளி வைத்துவிட்டான் என்றால் அதன்பிறகு பிள்ளைகளின் நிலை? அதை நினைக்கவே நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது.

இப்படியெல்லாம் அளவுக்கதிகமாக யோசித்து, கிடைக்கிற நல்ல வாழ்க்கையை உதறத்தான் வேண்டுமா என்றும் ஓடிற்று.

சுசீலாவின் கணவர், பெற்ற மகனையே திரும்பிப் பார்க்காமல்தானே இருக்கிறார். எத்தனையோ வீடுகளில் சொந்தத் தகப்பன் கூடவே இருந்தும் பிள்ளைகள் மீது அக்கறையற்று இருப்பதில்லையா? அந்த வீட்டுத் தாய், தன் பிள்ளைகளை வளர்க்காமலா விட்டுவிடுகிறார்? ஒன்றுக்கும் உதவாத அந்தக் கணவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குடும்பத்தைக் கொண்டுதானே போகிறார். குறைந்தபட்சமாக அந்த நிலைக்கு அகத்தியன் தன்னைக் கொண்டுவர மாட்டான் என்று நம்பினாள்.

ஆக, எதுவும் இரண்டாம் திருமணத்தில் மட்டுமேதான் என்றில்லை. அப்படி வந்தால், ‘இரண்டாம் திருமணம்’ என்பது சொல்வதற்கான ஒரு காரணமாகிறது. அவளுக்கு ஏனோ, ‘சாவுக்கும் சாட்டு வேணுமாம் ஆச்சி.’ என்று அன்னை அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போனது.

பார்மசிக்கு வந்து சுசீலாவுக்கு அழைத்துப் பேசினாள். அகத்தியன் தன்னோடு கதைத்ததைச் சொல்லி, தன் பயங்களையும் குழப்பங்களையும் பகிர்ந்துகொண்டாள். ஏனோ, கமலாம்பிகையிடம் கூடக் கிடைக்காத ஆறுதலும், மனம் விட்டுப் பேசும் தயக்கமற்ற நிலையும் சுசீலாவிடம் கிடைத்தது.

அவரோ அவள் சொன்னவற்றைக் கேட்டு அகமகிழ்ந்து போனார். “கடவுளே, எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா? உங்க ரெண்டுபேரைப் பற்றியும் நான் நினைக்காத நாள் இல்ல. இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுற பிள்ளைகளுக்கு ஒரு நல்லதச் செய்து வைக்காம இருக்கிறது எவ்வளவு பிழையோ, அவ்வளவு பிழை விருப்பமே இல்லாத பிள்ளைகளைச் சேர்த்து வைக்கிறதும் எண்டு யோசிச்சுப்போட்டுத்தானம்மா பேசாம இருந்தனான். இப்பதான் எனக்கு மனம் நிறைஞ்சு இருக்கு.” என்று அவர் சொன்னபோது அவளும் நெகிழ்ந்துபோனாள்.

“அர்த்தமே இல்லாததுகளை யோசிச்சுப் பயப்பிடாதீங்கோ யசோ. நான் குமர்ப்பிள்ளையா இருந்த காலத்தில இருந்து அவே எல்லாரையும் எனக்குத் தெரியும். சோலி சுரட்டுக்குப் போகாத அருமையான குடும்பம். உங்களுக்கு மட்டும் இது ரெண்டாவது கலியாணம் இல்ல. தன்ர வாழ்க்கையைச் சந்தோசமாக் கொண்டுபோக வேணும் எண்டுற ஆசை, அவனுக்கும் இருக்கும் தானேம்மா. சவீதா குடும்பம் வேற பக்கத்திலேயே இருக்கு. உங்களுக்கு அகத்தியன் சொன்னானோ தெரியாது, அவன் அண்டைக்கே உங்களைத்தான் கட்டப்போறன் எண்டு சவீதா குடும்பத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டானாம். அப்பிடிச் சொல்லுறவனாம்மா உங்கட பிள்ளைகளைப் பிரிச்சுப் பாப்பான்? ஒருநாளும் அப்பிடி நடக்காது. கண்டதையும் யோசிச்சது, பயந்தது, தனியா இருந்தது எல்லாம் போதும் யசோ. எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சாத்தான் ஒண்டைச் செய்வன் எண்டு நினைச்சா அது கடைசிவரைக்கும் நடக்காது. எப்பவும் புதுசு புதுசாக் கேள்வியும் பயமும் வந்துகொண்டேதான் இருக்கும். உள்ளுணர்வு சொல்லுறபடி நடக்கிறதுதான் பல விசயங்களுக்கு நல்லது. நீங்க குறிப்பக் கொண்டு வாங்கோ. நான் நாளைக்கு பார்மசிக்கே வந்து வாங்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

கலக்கம் முற்றிலுமாக அகன்றிராதபோதும் அதற்குமேல் அவளால் யோசிக்க முடியவில்லை. அவர் சொன்னதுபோல, யோசிக்க யோசிக்க மனம் இன்னுமே குழம்பிய குட்டையாகத்தான் மாறிற்று. கேள்விகள் புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருந்தன. அச்சங்களும் கூடிக்கொண்டேதான் போயின.

ஆனால், சவீதா குடும்பத்தினர் முன்னேயே அவன் தன்னைத்தான் மணக்கப் போவதாகச் சொன்னானாம் என்பது, ஏதோ ஒரு பெரிய நம்பிக்கையை அவளுக்குத் தந்திருந்தது.

இன்னும் வீட்டில் சொல்லவில்லையே என்கிற கலக்கம் இருந்தாலும் அடுத்தநாள் குறிப்பை எடுத்துக்கொண்டு வந்தாள்.

அங்கே சொன்ன பிறகு இங்கே சரிவராமல் போனால், வீட்டில் அவள் நிலை இன்னும் மோசமாகிவிடும். முதல் இங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அங்குச் சொல்வோம் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.

குறிப்பை வாங்குவதற்காகக் காலையிலேயே வந்திருந்தார் சுசீலா.

“குறிப்புப் பொருந்தினா சொல்லுங்கோ அக்கா. நான் முதல் பிள்ளைகளோட கதைக்க வேணும். அம்மாவும் அக்காவும் என்ன சொல்லுவீனம் எண்டு தெரியாது. அதால, இன்னும் எதுவும் உறுதியா முடிவாகேல்ல எண்டும் சொல்லுங்கோ.” என்று சொல்லிக் கொடுத்தாள்.

அதன்பிறகு, அவளுக்கு அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. பார்மசிக்கு கொழும்பிலிருந்து புது இருப்புகள் வந்து இறங்கியிருந்தன. முதலாளியும் கடைக்கு வந்திருந்தார். அவர் கணக்கு வழக்குகளைப் பார்க்க, அவளும் மகிளாவுமாகச் சேர்ந்து கடையையும் பார்த்து, வந்து இறங்கியவற்றைச் சரிபார்த்து எடுத்துவைக்க என்று நேரம் ஓடிற்று.

முதலாளி தன் வேலைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டதும், “யசோக்கா, சின்ன ரெஸ்ட் எடுக்காம இனி என்னால ஏலாது. ஒரு நிமிசம் இருங்கோ, தேத்தண்ணியும் சாப்பிட ஏதாவதும் வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, அருகில் இருக்கும் தேநீர்க் கடைக்கு ஓடினாள் மகிளா.

அந்த இடைவெளியில் கைப்பேசியை எடுத்துப்
பார்த்தாள். அகத்தியன் மூன்று முறை அழைத்திருந்தான். ஏனோ? யோசனையோடு அவனுக்குத் திருப்பி அழைத்தாள்.

அழைப்பை ஏற்றதுமே, “நான் உங்கள ஆகத் தொந்தரவு செய்றேனா?” என்றுதான் கேட்டான் அவன். குரலில் மெல்லிய இறுக்கம் தெரிந்தது.

“இல்லையே ஏன்?” புருவங்கள் சுருங்க வினவினாள்.

“இல்ல, முந்தநாள் நான் போட்ட மெசேஜுக்கு ரெண்டு மணித்திலாயத்துக்குப் பிறகுதான் பதில் வந்தது. நேற்று எடுத்து ஏதாவது சொல்லுவீங்க எண்டு எதிர்பாத்தனான். சத்தமே இல்ல. இண்டைக்கு மூண்டு தரம் எடுத்தும் நீங்க கதைக்கேல்ல. இதெல்லாம், தள்ளியே நில்லு எண்டு சொல்லுற மாதிரியே இருக்கு. அப்பிடித்தான் எண்டா நேராச் சொல்லுங்கோ.” என்றவனின் பேச்சில் அவளுக்குச் சினம் உண்டாயிற்று.

“முந்தநாள் நான் வீட்டை போகவே லேட். பிள்ளைக்கு வருத்தம். அவவைப் பாக்கோணும். நாள் முழுக்க அம்மா மூண்டு பிள்ளைகளை வச்சுப் பாக்கிறவா. அண்டைக்கு நாலுபேர். அவேயையும்(அவர்களையும்) பாத்து ரெண்டு வீட்டுக்குச் சமைக்க அவவால ஏலாது. கறி வச்சிருந்தாலும் ரொட்டியோ, புட்டோ, இடியப்பமோ ஏதோ ஒண்டு நான் போய்த்தான் செய்யவேணும், அடுத்தநாளுக்கு தேவையானதுகளையும் கவனிக்க வேணும். இதையெல்லாம் பாப்பேனா, இல்ல, ஃபோன எடுத்து வச்சுக்கொண்டு ஆர், எப்ப மெசேஜ் அனுப்புவீனம், பதில் சொல்லலாம் எண்டு பாத்துக்கொண்டு இருப்பேனா?” என்றாள் சூடான குரலில்.

“ஓ சொறி!” என்றான் இறங்கிய குரலில். “வேலையா இருந்திருப்பீங்க எண்டு நினைச்சனான்தான். எண்டாலும் இந்தளவுக்கு யோசிக்கேல்ல.”

ஆனால், அவள் சினம் குறையவில்லை. “இங்கயும் நான் ஒண்டும் சும்மா இருந்து சம்பளம் வாங்கேல்ல. நீங்க எடுக்கிற நேரமெல்லாம் கதைச்சுக்கொண்டு இருக்க.” என்றாள்.

“அதுதான் சொறி சொல்லிட்டேனே.”

காரணத்தைக் கேட்காமலே கோபப்பட்டுவிட்டு என்ன மன்னிப்பு? அவளுக்குக் கோபம் போகமாட்டேன் என்றது.

“யசோ.”

முதன் முறையாக அவள் பெயர் அவன் வாயிலிருந்து ஒலித்தது. தேகத்தில் ஒரு விதமாகச் சிலிர்ப்போட அப்படியே நின்றாள்.

“இன்னும் கோவமா?” அவன் குரல் தழைந்தே வந்தது.

“ஏன் எடுத்தனீங்க?”

“அடக்கடவுளே! இவ்வளவு கோவம் வருமா அமைதியா இருக்கிற யசோதினிக்கு?” அவன் குரலின் சிரிப்பு, அவளை ஆற்றுப்படுத்தும் மாயமறியாமல் அமைதியாகவே இருந்தாள் யசோ.

“யசோ?”

“ம்…” அவளையறியாமல் எதிர்வினையாற்றினாள்.

“முந்தநாள் தூரிக்கு எப்பிடி இருக்கு, சுகமாயிற்றா எண்டு அறியத்தான் நீங்க எப்ப பதில் போடுவீங்க எண்டு பாத்துக்கொண்டே இருந்தனான். நீங்க அவ்வளவு லேட்டா, சுருக்கமாப் பதில் அனுப்பவும், நான் அக்கறையாக் கேட்டத நீங்க நடிப்பா எடுத்திட்டீங்களோ எண்டு ஒரு மாதிரி ஆயிற்றுது. இதில, எனக்கு ஒண்டும் சொல்லாம குறிப்ப சுசீலாக்காட்டக் குடுத்திருக்கிறீங்க. ஏன் என்னட்டத் தரேல்ல, என்னோட கதைக்கேல்ல எண்டு அது வேற யோசினை. இண்டைக்கு நீங்க ஃபோனும் எடுக்காம இருக்கவும் உண்மையாவே எனக்கு ஒருமாதிரி ஆயிற்றுது. அதுதான்…” என்று தன்னை விளக்கினான்.

“சுசீலாக்காட்ட நானாக் குடுக்கேல்ல. அவாவோட இதைப் பற்றி நேற்றுக் கதைச்சனான். அவா இண்டைக்கு விடியவே குறிப்பு வாங்கிக்கொண்டு போக வந்திட்டா.”

“ஓ1”

“வேற ஏதும் கேள்வி இருக்கா?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அவன் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. மனமும் இலகுவான உணர்வு. அவள் கோபத்தைச் சுகமாக உள்வாங்கினான். மாலைக்காற்று முகம் வருடிப்போகும் அந்த இதத்துடனேயே, “கேள்வி எல்லாம் இல்ல. ஆனா ஒண்டு சொல்லோணும். நான் குறிப்புப் பாக்க வேண்டாம் எண்டு வீட்டில சொல்லிட்டன். எனக்கு இந்தக் கலியாணத்தில முழு விருப்பம். உங்களுக்கும் விருப்பம் எண்டால் அடுத்தது என்ன எண்டு பாப்பம். இதச் சொல்லத்தான் அப்போத எடுத்தனான். சொல்லுங்க, நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று வினவினான்.

“ஏன் பாக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க. நேற்று நீங்க என்னோட கதைக்கேக்க அப்பிடிச் சொல்ல இல்லையே.” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரித்தாள்.

“நீங்கதானே பொருந்தாட்டி என்ன செய்வீங்க எண்டு கேட்டீங்க? அதுதான், அது தெரியாமையே இருக்கிறது நல்லம் எண்டு நினைச்சன். சும்மாவே எந்தப் பக்கத்தாலயாவது தப்பி ஓடலாமா எண்டு நிக்கிறீங்க. இதில, தப்பித்தவறி பொருத்தம் இல்லை எண்டு சொல்லிட்டா கலியாணத்துக்குக் கடைசி வந்தாலும் ஓம் எண்டு சொல்ல மாட்டீங்க. அம்மா, அக்காவுக்கும் அப்பிடித்தான் இருக்கும். அதுதான் பாக்க வேண்டாம் எண்டு சொல்லீட்டன்.”

“பொருந்தாட்டி வேண்…” எனும்போதே அவசரமாக இடைமறித்தான் அவன்.

“தயவுசெய்து எதிர்மறையா ஒண்டும் சொல்லாதீங்க யசோ. எனக்கு எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்து, சின்னாக்கள் ரெண்டுபேரும் ஓம் எண்டு சொன்னாப் போதும். வேற ஒண்டும் வேண்டாம். இதில நான் உறுதியா இருக்கிறன். உங்களுக்கும் அந்த உறுதி இருக்கா எண்டு நீங்கதான் சொல்லோணும்.” என்று, மீண்டும் அவளைப் பதில் சொல்லத் தூண்டினான்.

“உங்கட அம்மாவும் அக்காவும் ஒண்டும் சொல்ல இல்லையா?”

“ஒரு பதில நேரடியாச் சொல்லாம என்ன எல்லாம் கேக்கிறீங்க.” என்றான் அவன் சிறிதாக அலுத்த குரலில்.

உதட்டைக் கடித்தாள் அவள்.

“அவேக்கு முதல் மனம் சரியில்லைதான். ஆனா, உங்களத் தவிர வேற ஆரையும் கட்டமாட்டன் எண்டு சொல்லிட்டன். அதால அவேயும் ஓம் எண்டு சொல்லிட்டினம். அவேக்கும் எங்களுக்கு ஒரு கலியாணம் நடந்து, நாங்க சந்தோசமா வாழ்ந்தாப் போதும் எண்டுறதுதான் வேணும். இப்ப நீங்க சொல்லுங்க.” என்றான் திரும்ப.

“நான் பிள்ளைகளோட கதைக்கோணும். அம்மா அக்காட்ட இன்னும் ஒண்டும் சொல்லேல்ல.”

“ஓ!” என்றவனின் சுருதி கொஞ்சமாய் இறங்கிற்று. “பிள்ளைகள் மறுக்காயினம். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவே ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிக்கும். அவே உங்கள மாதிரி இல்ல. இல்லாட்டியும் நான் அவேயோட கதைக்கிறன். உங்கட அம்மாவும் அக்காவும் வேண்டாம் எண்டு சொன்னா உங்கட முடிவு என்னவா இருக்கும்?” என்று கேட்கையில் அவன் குரலில் கூர்மை ஏறி இருந்தது.

என்ன முடிவெடுப்பாள் என்று அவளுக்கே தெரியவில்லையே!

“யசோ, எனக்குப் பதில் வேணும்.” அவன் குரலில் அழுத்தம் ஏறிற்று.

அவன் கேட்கும் அந்தப் பதில், அவர்களின் மொத்த எதிர்காலத்துக்குமானது. சொல்லிவிட்டால் காலத்துக்கும் மாறக் கூடாது. அந்தப் பயமே அவள் வாயைக் கட்டிப்போட்டது.

அதுவே அவன் கோபத்தைக் கிளறிவிட்டது. “எங்களுக்கு ஒண்டு வேணும் எண்டுற உறுதி எங்களுக்கே இருந்தாத்தான் யசோ அதுக்காகப் போராடுவம். இப்ப நான் உங்களிட்ட மல்லுக்கட்டுற மாதிரி. சோ, முதல் விசயம் எங்களுக்கு அது வேணுமா, வேண்டாமா எண்டுறதுதான். அதுக்குப் பிறகுதான் அதுக்கு மற்றவே என்ன சொல்லுவீனம் எண்டுறதெல்லாம். இப்ப எனக்கு உங்கட மௌனமே ஒரு பதிலச் சொல்லுது. அதோட, நானே எல்லாத்துக்கும் உங்களை வற்புறுத்துற ஃபீல் வருது. அது… எனக்கு விருப்பம் இல்ல. நான் வைக்கிறன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

உதட்டைப் பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தாள் யசோ. அவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்து அவனைக் கோபப்படுத்திவிட்டது புரிந்தது.

சரியாக அந்த நேரம் வந்து தேநீரை நீட்டினாள் மகிளா. அது அவசியமாக இருந்ததில் வாங்கிப் பருகினாள். அதன் பிறகான நேரம், இருக்க நிற்க முடியாமல் கடந்தாலும் அவன் சொன்னவைதான் ஓடிக்கொண்டே இருந்தன.

இந்தளவுக்குத் தயங்குகிறவள் சுசீலாவிடம் குறிப்பைக் கொடுத்திருக்கக் கூடாது! அதைக் கொடுத்து, அவன் மனத்தில் நம்பிக்கையை விதைத்துவிட்டு, பதிலே சொல்லாமல் நின்றால் கோபப்படாமல் என்ன செய்வான்?

அன்று மாலை, வேலை முடிந்து வீடு நோக்கிப் புறப்பட்டவள், பாதையை மாற்றி அவன் கடைக்கே விட்டாள்.

இவளைக் கண்டுவிட்டு, “வாங்கம்மா!” என்று அழைத்த அந்த ஐயா, “தம்பி!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

அன்று போலவே இன்றும் உள்ளிருந்து வந்தான் அவன். இன்னுமே கோபமாகத்தான் இருக்கிறானோ என்று அவன் முகத்தை ஆராய்ந்தாள் யசோ. அங்கிருந்து எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் தன் முகத்தை ஆராய்வது அகத்தியனுக்கு விளங்காமல் இல்லை. அவ்வளவு கேட்டும் பதில் சொல்லாமல் இருந்துவிட்டு இப்ப என்னவாம்? அந்த ஐயாவும் இருந்ததில் அங்கு வைத்து ஒன்றும் கதைக்காமல், “வாங்க!” என்று அன்று போலவே அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவன் தண்ணீர் கொதிக்க வைக்கப் போக, “இல்ல, நான் போகவேணும்.” என்றாள் அவசரமாக.

இன்றைக்கு அவனும் வற்புறுத்தவில்லை. அந்த மேசையிலேயே சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.

அவனாகக் கேட்டால் சொல்லலாம் என்றால் அவனோ அவளுக்கு மேலாக நீயே சொல்லு என்று நின்றான்.

வேறு வழியற்று, “அது… இல்ல எனக்குத் திடீரெண்டு எல்லாமே மாறுற மாதிரியும், வேக வேகமா நடக்கிற மாதிரியும் இருந்தது. அதோட, பிள்ளைகள் என்ன சொல்லுவீனமோ, முதல் அவேட்ட இத எப்பிடிச் சொல்லுறது எண்டு… எனக்குச் சொல்லத் தெரியேல்ல. என்னென்னவோ எல்லாம் மண்டைக்குள்ள ஓடுது. ஒரு மாதிரிப் பயமா இருக்கு. துணிஞ்சு இறங்கிப் பிழைச்சிட்டா என்ர பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டு, எனக்கு அத யோசிக்கவே நடுங்குது.” எனும்போது அவள் விழிகள் இலேசாகக் கலங்கிப் போயிற்று.

இத்தனை நாள்களில் இரண்டாவது முறையாக அவள் உடைந்து பார்க்கிறான். அவன் நெஞ்சிலும் ஏதோ ஒன்று அசைந்தது.

ஓரெட்டில் அவள் முன்னே வந்து நின்று, “இந்தக் கலியாணத்தில உங்களுக்கு விருப்பமா?” என்றான் அவள் விழிகளையே பார்த்து.

“விருப்பம்தான்.” பார்வையைத் தழைத்துக்கொண்டு முணுமுணுத்தாள்.

“எனக்கு என்னைப் பாத்துச் சொல்லோணும் யசோ.”

அவள் திணற, “யசோ!” என்றான்.

ஒவ்வொரு முறையும் அவன் அவள் பெயரைச் சொல்கையில் அவளுக்குள் என்னவோ நிகழ்ந்துகொண்டிருந்தது. மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மீண்டும் விழிகள் மெலிதாகக் கரிக்க, “விருப்பம்தான்.” என்றாள் கம்மிய குரலில்.

“உறுதியான முடிவா யசோ? இல்ல, நான் கோவமா ஃபோன கட் பண்ணினதால வந்த முடிவா? அல்லது, இன்னும் யோசிக்க வேணுமா? எது எண்டாலும் மறைக்காமச் சொல்லுங்க.” அவன் குரலில் ஒருவிதத் தீவிரமும் தீர்க்கமும்.

“இல்ல, அப்பிடி எனக்கு விருப்பமே இல்லாட்டிக் குறிப்பைக் கொண்டுவந்து தந்தே இருக்கமாட்டன். ஆனா… என்னதான் மற்றவையைப் பற்றி நாங்க யோசிக்கத் தேவையில்லை எண்டு நினைச்சாலும் ஊர் உலகம் என்ன கதைக்குமோ, எதையெல்லாம் கேக்கவேண்டி வருமோ எண்டு பயமா இருக்கு. பிள்ளைகளின்ர காதுக்கு ஏதும் பிழையாப் போயிற்றா, என்னைப்பற்றி என்ன நினைப்பீனம்? இதுக்குப் பேசாம இருக்கிற மாதிரியே இருந்திடலாமோ எண்டு என்னென்னவோ யோசனை... அதான்.”

பரிதவிப்பும் பயமும் குரலில் இழையோடச் சொன்னவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது அவனுக்கு.

“நீங்க சொன்ன விருப்பத்தை நம்பி உங்கட கைய நான் பிடிக்கலாமா?” என்றான் அவள் முகத்தையே பார்த்து.

அவள் விழிகள் திகைப்பில் அகன்றன.

“பிடிக்கலாமா?”

பதில் சொல்லாமல் கையை மட்டும் கொஞ்சமாக முன்னுக்கு நீட்டினாள். இரண்டு கைகளாலும் அவள் கரத்தைப் பற்றித் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு, “இண்டைக்குப் பிடிச்ச இந்தக் கையை எண்டைக்கும் விடமாட்டன். பிள்ளைகள நான் பிரிச்சுப் பாத்திட்டா பிள்ளைகளின்ர நிலை என்ன எண்டு கேட்டீங்களாம் எண்டு சுசீலாக்கா சொன்னா. உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாட்டி எங்களுக்கு இன்னொரு பிள்ளையே வேண்டாம். சரியா?” என்றான் உறுதியான குரலில்.

அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “இல்ல… அது…” என்று திணற, பற்றியிருந்த கையை அழுத்திக்கொடுத்து அவள் பேச்சை நிறுத்தினான் அவன்.

“எனக்கு விளங்குது யசோ. ரெண்டு பேருக்கும் இது ரெண்டாவது கலியாணம்தான் எண்டாலும் நீங்க ரெண்டு பிள்ளைகளுக்கு, அதுவும் பொம்பிளைப் பிள்ளைகளுக்கு அம்மா. உங்கட பயம் சரிதான் எண்டு எனக்குத் தெரியும். அதாலதான் சொல்லுறன், குறைஞ்ச பட்சமா உங்களுக்கு என்னில நம்பிக்கை வாறவரைக்குமாவது எங்களுக்கு இன்னொரு பிள்ளை வேண்டாம், சரியா?”

பதிலற்றுப் போனவளின் விழிகள், நீரால் நிறைந்தன.

“ப்ளீஸ் யசோ. இப்பிடிப் பலகீனமாகி உடையிர யசோவ எனக்குப் பாக்க விருப்பம் இல்ல. தயவுசெய்து அழாதீங்க.” எனவும் கன்னத்தில் உருண்டுவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.

“இந்தக் கடைதான் எங்கட வீட்டுக்கே சோறு போடுற கடை யசோ. எனக்குக் கோயிலுக்குச் சமன். இந்தக் கடையில நிண்டு சொல்லுறன், உங்கட பிள்ளைகள் இனி என்ர பிள்ளைகள். அவேக்கு நல்ல அப்பாவாக் கட்டாயம் இருப்பன். ஊர் உலகத்தைப் பற்றி யோசிக்காதீங்க. அவே எத்தின நாளைக்குக் கதைப்பீனம்? இல்ல, இதுக்கு முதல் உங்களப் பற்றிக் கதைச்சதே இல்லையா? கட்டின மனுசிக்கு என்ன கொடுமையைச் செய்தானோ ஆருக்குத் தெரியும்? இல்லாம, சும்மா ஒரு பொம்பிளை போலீஸ் வரைக்கும் போகுமா எண்டு என்ர காது கேக்கவே கதைச்சிருக்கினம் யசோ. அதா உண்மை? இல்லயெல்லா? அவே கதைக்கிறதுக்கெல்லாம் பதில் என்ன தெரியுமா? நானும் நீங்களுமா வாழப்போற அந்தச் சந்தோசமான வாழ்க்கை. நீங்க எதைப்பற்றியும் யோசிக்காம போங்க. வீட்டில இப்ப ஒண்டும் கதைக்க வேண்டாம். மிச்சத்தை நான் பாக்கிறன். பிள்ளைகளிட்டயும் ஒண்டும் கதைக்கவேண்டாம். சரியா?”

அவள் மந்திரத்துக்குக் கட்டுண்டவள் போன்று தலையைச் சரி என்று அசைத்தாள்.

“ஏதாவது சாப்பிடத் தரவா?” அவள் முகத்தில் தெரிந்த சோர்வைக் கவனித்துக் கேட்டான்.

“இல்ல, நேரமாகுது.”

“சரி வெளிக்கிடுங்க. முந்தநாள் மாதிரி லேட் ஆக வேண்டாம். வீட்டை போனதும் எனக்கொரு மெசேஜ் போட்டுவிடுங்க. வேற எதிர்பாக்கமாட்டன்.” எனும்போதே அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு.

அவள் முகத்திலும் அது தொற்றிக்கொண்டது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15



அடுத்த இரண்டு நாள்களும் எப்படியோ கடந்து போயின. அம்மா, அக்கா இருவரினதும் முகம் பார்க்கத் தயங்கினாள் யசோதினி. ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு. மனதறிந்து அவர்களுக்கு மறைக்கவோ, அவர்களை ஒதுக்கிவிட்டு எதையும் செய்யவோ நினைவில்லை என்றாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

நான் பார்க்கிறேன், யாரிடமும் எதுவும் கதைக்கவேண்டாம் என்றவன் வேறு சத்தமே இல்லாமல் இருந்தான். அழைத்துக் கேட்கவும் தயக்கமாய் இருந்தது. சம்மதிக்க அவ்வளவு தயக்கம் காட்டிவிட்டு, இப்போது இரண்டு நாள்கள் கூடப் பொறுக்க முடியவில்லையா என்று நினைத்துவிட மாட்டானா? இனி என்ன செய்வது, சுசீலா அக்காவைக் கேட்டுப் பார்ப்போமா என்று யோசித்தபடி வேலை முடிந்து வீடு வந்தவளை வரவேற்றது, அவர்கள் வீட்டு வாசலின் முன்னே நின்றிருந்த ஓட்டோ.

யாரோ வந்திருக்கிறார்கள். மெல்லிய படபடப்புடன் ஸ்கூட்டியை உள்ளே கொண்டுவந்து நிறுத்தும்போதே கஜேந்திரன், இந்திரா, சிந்தாமணி, சுசீலா என்று எல்லோரும் அமர்ந்திருப்பது தெரிந்தது.

“வாங்கோ!” வரவேற்பாகத் தலையசைத்தவள் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். தாய், தமக்கை இருவர் முகத்தை அவர்கள் அறியாமல் ஆராய்ந்தபோது, மெல்லிய குழப்பம் மட்டும்தான் தெரிந்தது. ஆக, விடயம் இன்னும் சொல்லப்படவில்லை.

“இப்பயாம்மா வேல முடிஞ்சது?” அவள் பதற்றமறிந்து, அவளை இயல்பாக்க எண்ணி வினவினார் சுசீலா.

“ஓம் அக்கா.” என்றவள், “தாமினி வர இல்லையோ?” என்று இயல்புபோல் காட்டி இந்திராவிடம் வினவினாள்.

“தூரி வீட்டை போறம் எண்டு சொன்னதுமே அவாதான் முதல் ஆளா வெளிக்கிட்டு வந்ததே. எல்லாரும் உங்கட வீட்டை இருந்து விளையாடினம்.” என்றாள் இந்திரா.

“ஓ!” அடுத்து என்ன பேச என்று தெரியாது நின்றாள்.

“ஏதும் குடிக்கிறது, சாப்பிடுறது எண்டால் சாப்பிட்டுப்போட்டு வாங்கோவன்மா. உங்க எல்லாரோடையும் கதைக்கத்தான் வந்தனாங்க.” என்று மெதுவாக ஆரம்பித்து வைத்தார் சிந்தாமணி.

“இல்ல, பரவாயில்ல அன்ட்ரி. இப்ப எனக்கு ஒண்டும் வேண்டாம்.” நெஞ்சு அடிக்கிற அடிக்கு எதுவும் வாய்க்குள் போகும் என்கிற நம்பிக்கை அவளுக்கில்லை.

அதற்குள், “ஊத்தின தேத்தண்ணி கிடக்கம்மா.” என்று, தேநீரை வார்த்துக்கொண்டு வந்து கொடுத்தார் கமலாம்பிகை.

அவள் இரண்டு வாய் பருக, எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, “என்னடா இது, புது ஆக்கள் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் எண்டு வந்து நிக்கினம், என்னவோ ஏதோ எண்டு யோசிக்காதீங்கோம்மா. எல்லாம் நல்ல விசயம் கதைக்கத்தான் வந்திருக்கிறம்.” என்று, நல்லமுறையில் ஆரம்பித்தார் சுசீலா.

“யசோ வேலை செய்ற பார்மசிக்குத்தான் நான் நெடுகவும் போறனான். அதால அவாவை எனக்கு நல்ல பழக்கம்.” என்றவர், அவளைப் பற்றித் தெரிந்து கொண்டது, இன்னொரு திருமணத்துக்கு ஊக்கியது என்று எல்லாவற்றையும் சொல்கையிலேயே நிசாந்தினியின் முகம் மாற ஆரம்பித்திருந்தது.
அதற்கே கை நடுங்கும் போலிருக்க, தான் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்திலேயே தேநீர்க் கோப்பையைத் தரையில் வைத்தாள் யசோ.

“இவேயையும்(இவர்களையும்) எனக்குச் சின்ன வயதில இருந்து தெரியும். நல்ல நம்பிக்கையான மனுசர். அகத்தியனும் அருமையான பிள்ளை. அவருக்கும் டிவோர்ஸ் ஆயிற்றுது.” என்றவர், கஜேந்திரனும் சங்கடப்படாத வகையில் சுருக்கமாக அகத்தியனின் விவாகரத்தைப் பற்றிச் சொன்னார்.

நிசாந்தினிக்கும் கமலாம்பிகைக்கும் அப்பட்டமான அதிர்ச்சி. தம் கட்டுப்பாட்டை மீறிக் கஜேந்திரனைப் பார்த்தனர்.

“அவா சொல்லுறது உண்மைதான். அது என்ர தங்கச்சிதான்.” இலேசாக முகம் கன்றச் சொன்னான் அவன்.

வேதனையோடு கணவனைப் பார்த்தாள் இந்திரா. முடிந்தவரையில் மேலோட்டமாகச் சொல்லும்படி சுசீலாவிடம் சொல்லித்தான் அழைத்து வந்தாள். கஜேந்திரனுக்குமே இதைப்பற்றிக் கதைக்கவேண்டி வரும் என்று சொல்லியிருந்தாள்.

வேறு வழியில்லை. நம் நெருங்கிய சொந்தங்களின் தப்புகளால் நாமும் அவமானப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை!

“அதுதான், அகத்தியனுக்கும் யசோக்கும் ஒரு கலியாணத்தைச் செய்து வச்சா நல்லாருக்குமே எண்டுதான் உங்களோட கதைக்க வந்தனாங்க.” நயமாகவே வந்த விடயத்தைச் சொன்னார் சுசீலா.

கமலாம்பிகையால் நம்பவே முடியவில்லை. யசோ இந்த எண்ணத்தையே விட்டுவிட்டாள் என்றல்லவா எண்ணி நிம்மதி கொண்டிருந்தார். ஒன்றரை வருடங்களுக்கு முதலே மறுத்த மூத்தவள், இதற்கு உடன்படமாட்டாள் என்பது தெரிந்திருந்ததால் அவராகப் பதில் சொல்லப் பயந்தார்.

“நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான். ஆனா, இவள் தனியா இருந்தா அது வேற. ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கினம். நடக்கிறது தெரியாம இருக்க அவே ஆகச் சின்னப் பிள்ளைகளும் இல்ல. விவரம் தெரிய ஆரம்பிச்சிட்டுது. இப்ப போய் இதெல்லாம் செய்யச் சரியா வராது. எங்களுக்கு அவேன்ர எதிர்காலம் முக்கியம்.” என்றாள் நிசாந்தினி.

“நீங்க சொல்லுறது உண்மைதானம்மா. ஆனா, நாங்க நினைக்கிறதை விட இந்தக் காலத்துப் பிள்ளைகள் கெட்டிக்காரர். பொறுமையா, அன்பா எடுத்துச் சொன்னா விளங்கிக் கொள்ளுவினம். அவே ரெண்டுபேருக்கும் எங்கட மகனைத் தெரியும். அகத்தியன் மாமா எண்டு அவனில நல்ல விருப்பமும். அதால பிள்ளைகள் மனம் பாதிக்காதம்மா. பாதிக்கிற அளவுக்கு நாங்க நடக்காம இருந்தா சரிதானே. எல்லாத்தையும் விட ஒரு குழந்தை கிடைக்காம ஏமாந்து போனவன். பிள்ளைகளின்ர அருமை அவனுக்குத் தெரியும். கட்டாயம் நல்ல தகப்பனா இருப்பான்.” என்று தன் மகனுக்காகப் பேசினார் சிந்தாமணி.

ஆக, இவளுக்கு அவர்களை ஏற்கனவே தெரியும். நல்ல பழக்கமும் இருக்கிறது. வந்ததும் தாமினி எங்கே என்று வேறு விசாரித்தாளே. அடக்கப்பட்ட கோபத்துடன் தங்கையை முறைத்தாள் நிசாந்தினி. யசோவுக்கு நெஞ்சு தடதடத்தது. எல்லோர் முன்னும் தமக்கையிடம் எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.

“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இதெல்லாம் சரிவரும் எண்டுற நம்பிக்கை இல்ல. தெரிஞ்ச பிள்ளைகள் எண்டு பாசமாப் பழகிறதுக்கும் தகப்பன்ர இடத்தில இருந்து பிள்ளைகளை வளக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்பிடிச் சொல்லுறதால உங்கட மகனைப் பிழையா நினைக்கிறோம் எண்டு அர்த்தம் இல்ல. எங்களுக்கு எல்லாத்தையும் விட சின்னாக்களின்ர வாழ்க்கை முக்கியம். யசோவுக்கே இதில விருப்பம் இருக்காது. அப்பிடியிருக்க நாங்க ஏன் இதைப்பற்றிக் கதைக்க?” என்று அந்தப் பேச்சை முடிக்க நினைத்தாள்.

நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டாலும், “அக்கா… எனக்கு இதில விருப்பம்தான். என்னைக் கேட்டு, நான் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் வந்திருக்கினம்.” என்று, தனக்காகப் பேச வந்தவர்களை விட்டுக்கொடுக்க மனமற்றுச் சொன்னாள் யசோதினி.

நிசாந்தினியால் இதை நம்பவே முடியவில்லை. சுர் என்று ஒரு கோபம் உச்சிக்கு ஏறியது. அதை அவர்கள் முன் காட்ட முடியாமல், “ஓ! நீயே முடிவெடுத்திட்டாய் எண்டா, நாங்க சொல்ல என்ன இருக்கு?” என்றவளை இடைமறித்தார் சுசீலா.

“அவாவக் குறையா நினைக்காதீங்கோம்மா. வேண்டவே வேண்டாம் எண்டு நிண்ட பிள்ளையைக் கதைச்சு கதைச்சு மாத்தினது நான்தான். அப்பவும் அக்கா, அம்மாவோட கதைச்ச பிறகுதான் எது எண்டாலும் முடிவாகும் எண்டுதான் சொன்னவா. அதாலதான் நாங்க இங்க வந்ததே. பொறுமையா, ஆறுதலா எல்லாருமா இருந்து கதைங்கோ. கையோட குறிப்பையும் கொண்டு வந்தனாங்க. அதையும் பாருங்கோ. அகத்தியன் டவுனுக்கதான் கடை வச்சிருக்கிறார். அங்க அவரைப்பற்றி விசாரிங்கோ. ஊருக்க இவேன்ர குடும்பத்தைப் பற்றி விசாரிங்கோ. அப்பிடி விசாரிச்சா உங்களுக்கு முடிவு எடுக்க ஈஸியா இருக்கும். அதுக்குப் பிறகு உங்கட முடிவைச் சொல்லுங்கோவன்.” என்றுவிட்டு மற்றவர்களோடு புறப்பட்டார்.

கலங்கி நின்றவள் கரம் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டுப் போனாள் இந்திரா.

அவர்கள் வந்த ஓட்டோ புறப்பட்டதும் கமலாம்பிகையிடம் வெடித்தாள் நிசாந்தினி.

“எவ்வளவு தைரியம் பாத்தீங்களாம்மா இவளுக்கு? எங்களிட்ட ஒரு வார்த்த சொல்லேல்ல. ஆனா, அங்க கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லியிருக்கிறாள். அப்ப, நாங்க எல்லாம் ஆரு இவளுக்கு?”

விழிகள் கலங்கத் தமக்கையைப் பார்த்தாள் யசோ. ஆயினும், அவர்கள் திருமணத்திற்குக் கேட்டது, முதலில் தான் மறுத்தது, பின் அவன் அழைத்துப் பேசியது, தான் தன் முடிவை மாற்றிக்கொண்டது என்று அனைத்தையும் சொன்னாள்.

நிசாந்தினிக்கு எரிகிற அடுப்பில் எண்ணெயை ஊற்றியது போலாயிற்று. “என்ன ஆளடி நீ? அவன்ர கடைக்கே தனியாப் போய்க் கதைக்கிற அளவுக்கு உனக்குத் துணிவு வந்திருக்கே! அதுசரி, அந்த வயதிலேயே ஆருக்கும் தெரியாம கலியாணம் கட்டிக்கொண்டு வந்தவள்தானே நீ!” என்றதும் நொருங்கியே போனாள் யசோ.

கமலாம்பிகைக்கும் வருத்தமாயிற்று. “பழசையெல்லாம் ஏனம்மா கதைக்கிறீங்க?” என்று கேட்டு, மூத்த மகளின் கோபத்தைக் குறைக்கப் பார்த்தார்.

“ஏன் கதைக்கக் கூடாது? நான் என்ன இல்லாததையா சொல்லுறன்? முதல், என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுதாம் இவளுக்கு? அவளுக்கு ஒரு பிரச்சினை எண்டால் மட்டும் நான் வேணும், மற்றும்படி நாய்க்கும் மதிக்கமாட்டாளாமா? இதையெல்லாம் அறிஞ்சா இவர் என்ன நினைப்பார்? நாளைக்கு ஒரு பிரச்சினை எண்டு வரேக்க, இவளைக் காட்டி என்னையும் ஏதும் சொல்லிட்டார் எண்டா என்னம்மா செய்வீங்க? ஆருக்காவது இதெல்லாம் தெரிய வந்து, என்ன இது எண்டு கேட்டா என்ன சொல்லுறது? என்ர தங்கச்சிக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தும் இன்னொரு கலியாண ஆசை வந்திட்டுது எண்டா? காறித் துப்பாதுகள்?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
யசோவால் அதற்குமேல் முடியவே இல்லை. செத்துவிட்டால் கூடப் பரவாயில்லை போலிருந்தது. அத்தனை அவமானம். இனியும் தமக்கை சொல்கிற எதையும் கேட்கிற துணிவற்று அங்கிருந்து போக முனைய, “எங்க போறாய்? எங்க போறதா இருந்தாலும் நான் கேக்கிற கேள்விக்குப் பதிலச் சொல்லிப்போட்டுப் போ. நீ எக்கேடோ கெட்டுப் போ. இனி எனக்கு உன்னைப்பற்றி அக்கறை இல்ல. ஆனா, உன்ர ரெண்டு பிள்ளைகளையும் என்ன செய்யப் போறாய்? ஏதும் அநாதை இல்லத்தில சேர்க்கப் போறியா? இல்ல, கையக் கழுவி விடப்போறியா? சொல்லு!” என்று அதட்டினாள்.

துடித்து நிமிர்ந்தாள் யசோ. அன்றைக்கு கமலாம்பிகை சொன்ன அதே வார்த்தைகள்! விழிகளை ஒருமுறை மூடித் திறந்து தன்னைச் சமன் செய்துகொண்டு, “என்ர பிள்ளைகள் எண்டைக்கும் என்னோடதான் இருப்பினம்.” என்றாள் அடைத்த குரலில்.

“உன்னோட வச்சிருந்து அவன் அதுகளைக் கொடுமை செய்றதைப் பாத்து ரசிக்கப் போறியா? இல்ல, பெத்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு நினைக்கிற அளவுக்கு, உனக்கு ஒரு கலியாணம் தேவையா இருக்கா?” என்றதும் அவமானத்தில் குறுகிப்போனாள்.

கமலாம்பிகைக்குமே பொறுக்க முடியவில்லை. “நிசா, நீ வரம்பு மீறிக் கதைக்கிறாயம்மா. போதும் நிப்பாட்டு” என்று அதட்டினார்.

யசோவுக்கு எல்லாம் விட்டுப்போன உணர்வு. “அவர் அப்பிடியெல்லாம் செய்ய மாட்டார். அந்த நம்பிக்கையை எனக்குத் தந்திருக்கிறார். என்ர பிள்ளைகள் சந்தோசமா வாழுவீனம்.” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

“எவ்வளவு உறுதியாச் சொல்லுறாள் பாத்தீங்களா? இவளுக்கு எப்பிடி அது தெரியுமாம்? அந்தளவுக்கு அவனோட பழக்கம் இருக்கா?” தமக்கையின் வார்த்தைகள் அவளைப் பின்னால் துரத்த, அவை கேட்டுவிடாத தூரத்துக்குக் கிட்டத்தட்ட ஓடினாள் யசோ.

பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். வாய்விட்டு அழவும் வழியில்லை. “ரெண்டுபேரும் எங்கயும் போறேல்ல. இங்கேயே இருங்கோ. அம்மா குளிச்சிட்டு ஓடி வாறன்.” என்றுவிட்டுக் கிணற்றடிக்கு ஓடினாள். தலைக்கு அள்ளி ஊற்றிய தண்ணீரோடு சேர்த்துக் கண்ணீரும் கரைந்தோடியது.

இங்கே கொதித்துக்கொண்டிருந்த நிசாந்தினியைச் சற்றே நிதானிக்கச் செய்து, “ஆனந்தனோட கதைங்கோம்மா. கதைச்சு என்ன செய்யலாம் எண்டு கேளுங்கோ.” என்று சொன்னார் கமலாம்பிகை.

“என்னெண்டு அம்மா சொல்லுவன்? என்ன நினைக்கிறாரோ தெரியாது.” அவளுக்கு அவனிடம் இதைப்பற்றிப் பேசுவதை நினைக்கவே ஒரு மாதிரி இருந்தது.

“அம்மாச்சி, சும்மா சும்மா யோசிக்காமக் கோவப்படுறேல்ல. தனக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகள் இருக்கு எண்டுறதும், நாளைக்கு ஒரு பிரச்சினை வந்தா அவேன்ர வாழ்க்கை பாதிக்கும் எண்டுறதும் யசோவுக்குத் தெரியாதா? ஆனாலும் இன்னொரு கலியாணத்துக்கு ரெடியாகி இருக்கிறா எண்டா, அவவின்ர மனதில என்ன எல்லாம் இருக்கோ ஆருக்குத் தெரியும்? சும்மா நாங்க வாய்க்கு வந்ததைக் கதைக்கக் கூடாது பிள்ளை. முதல் எனக்கும் கோபமாத்தான் இருந்தது. ஆனா இப்ப, அவவின்ர விருப்பப்படியே செய்து வைப்பம் எண்டுதான் நினைக்கிறன். நீங்களும் அப்பிடியே இருங்கோ!” என்று சொல்லிவிட்டு எழுந்தவர் சின்னவர்களைக் கவனிக்கச் சென்றார்.

அங்கே, இருட்டிய பொழுதில் தலைக்கு ஊற்றிவிட்டு வந்த மகளைக் கண்டு, அவருக்கும் நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது. ஏற்கனவே நொந்துபோய் இருப்பவளிடம் எதையும் கேட்கவோ, விசாரிக்கவோ போகாமல், அவள் வாழ்க்கையைக் கடவுள்தான் காத்தருள வேண்டும் என்று மட்டும் மனத்தில் வேண்டிக்கொண்டார்.

அதன்பிறகு இரவுச் சமையலைப் பார்த்து, பிள்ளைகளுக்கு உணவைக் கொடுத்து, அவர்களைக் கவனித்து, உறங்க வைக்கவே நேரம் போதுமாய் இருந்தது. வேண்டாம், பசியில்லை என்று சொன்ன யசோதினியைக் கமலாம்பிகை விடவில்லை.

“சண்டை, சச்சரவு, பிரச்சினை எல்லாம் எந்த வீட்டிலதான் இல்ல? அதுக்கெண்டு சாப்பிடாம இருக்கிறதா? நாளைக்கு வேலை செய்ய உடம்பில தெம்பு வேண்டாமா?” என்று கேட்டு, அவளைச் சாப்பிட வைத்தே படுக்கவிட்டார்.

பிள்ளைகளுக்கு நடுவில் பாயில் சரிந்தவளுக்கு கண்ணோரம் கசிந்துகொண்டே இருந்தது. தமக்கையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாகக் குத்திக்கொண்டே இருந்தன. நெஞ்சு புண்ணாக வலித்தது.

இதையெல்லாம் நினைக்கக் கூடாது என்று எண்ணியபடி வழிகளை மூடி உறங்க முயன்று பார்த்தாள். முடியவேயில்லை.

*****

இரவு நேரம் பத்தைக் கடந்திருந்தது. அன்னை, தமக்கை மூலம் யசோ வீட்டில் நடந்தவற்றை அறிந்த அகத்தியனுக்கு யசோவின் நினைவுதான். நிச்சயம் இவர்கள் புறப்பட்டு வந்தபிறகு, அங்கே ஒரு வாக்குவாதமோ, சண்டையோ நடந்திருக்கும். அவளும் காயப்பட்டிருப்பாள். இப்போது என்ன செய்கிறாளோ? அவளோடு கதைக்க மனம் உந்தியது. எடுப்பாளா, கதைக்கும் சூழ்நிலை உண்டா என்றெல்லாம் யோசித்துவிட்டு, “ஒரு பிரச்சினையும் இல்லையே.” என்று ஒரு குறுந்தகவலைத் தட்டிவிட்டான்.

சற்று நேரத்தில், “ம்.” என்று மட்டும் வந்தது பதில்.

“என்ன செய்றீங்க?”

“எல்லாரும் படுத்தாச்சு.”

“ஒரு ரெண்டு நிமிசம் கதைக்கேலுமா?”

அவளுக்கு அவனோடு கதைக்க முடியும் போலில்லை. அழுதுவிடுவோமோ என்று பயந்தாள்.

“இல்ல, நாளைக்குக் கதைப்பமா?”

“ரெண்டே ரெண்டு நிமிசம்தான். ஏலாதா?”

தலையைத் தூக்கி அன்னையையும் பிள்ளைகளையும் பார்த்தாள். அவர்கள் ஆழ்ந்து உறங்குவது தெரிந்தது. சத்தம் கொடுக்காமல் எழுந்து, மெதுவாக வெளியே வந்து அவனுக்கு அழைத்தாள்.

உடனேயே ஏற்று, “யசோ?” என்றான்.

அதுவே அவள் விழிகளை உடைப்பெடுக்க வைக்க, “ம்?” என்றாள்.

“என்ன?”

“இல்ல, ஒண்டும் இல்ல.” தழுதழுத்த குரலில் சொன்னாள்.

அவன் அதற்கே தவித்துப்போனான். “என்னம்மா? என்ன எண்டு சொன்னாத்தானே தெரியும்.” அவன் குரல் பரிதவித்தது.

இந்த ஒரு சின்ன பரிவுக்காகத்தானே இவ்வளவு நேரமாகத் தனக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தாள். வெடித்துக்கொண்டு அழுகை வந்தது. உதடு கடித்து அடக்க முயன்றாள்.

“யசோ?” என்றான் மீண்டும்.

“ம்.”

“மனம் நோகிற மாதிரி ஏதும் கதைச்சவையா?”

“ம்…” என்றாள் கன்னத்தில் இறங்கிய கண்ணீரோடு.

“ஓ!” என்றவனுக்கு அதை விடுத்துக் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்பதே அவளைச் சங்கடப்படுத்தும்.

“சரி, அதுக்கு ஏன் இப்பிடி உடைஞ்சுபோய் இருக்கிறீங்க? இதெல்லாம் நாங்க எதிர்பாத்ததுதானே. நீங்க கொஞ்சம் உங்கட அம்மா, அக்கான்ர இடத்தில இருந்து யோசிங்கோ. இதக் கொஞ்சமும் எதிர்பாத்திருக்க மாட்டினம். அந்த அதிர்ச்சி இருக்கும். உங்கட பிள்ளைகளைப் பற்றித்தான் உங்கட அக்கா கதைச்சவாவாம் எண்டு அம்மா சொன்னவா. அப்ப, பாசம் இல்லாம இல்லதானே? பாசம் இருக்கு. என்ன, உங்கள, உங்கட மனதை அவேக்கு விளங்குது இல்ல. அதால உங்களைப் பிழையா நினைக்கினம். நான் அண்டைக்குச் சொன்னதுதான், அவேக்கும் நாங்க எதிர்காலத்தில வாழுற வாழ்க்கை பதில் சொல்லும். நீங்க பிழையான எந்த முடிவையும் எடுக்கேல்ல எண்டு அப்ப தெரியவரும். அதால கவலைப்படாதீங்க. அவேயையும் குறை நினைக்காதீங்க. சரியா?” என்றான் கனிந்த குரலில்.

“ம்.” அவன் வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தன.

“இப்பவும் ம் தானா? ஏதாவது வாயத் திறந்து கதைங்கோவன். உங்கட அக்காக்கு முகமே சரியில்லயாம், கோவமாக் கதைச்சவாவாம் எண்டு அம்மாவும் அக்காவும் சொன்னதில இருந்து, உங்களுக்கு ஃபோன் பண்ணுவமா, வேண்டாமா எண்டு யோசிச்சு யோசிச்சே எனக்கு விசர் பிடிச்சிட்டுது. எப்பிடியும் இப்ப கதைச்சு முடிச்சுப் படுக்க வந்திருப்பீங்க எண்டுதான் மெசேஜ் போட்டனான்.” அவளை எண்ணித் தான் பட்ட பாட்டைச் சொன்னான் அவன்.

அது, தனக்காக யோசிக்க, கவலைப்பட அவன் இருக்கிறான் என்கிற தெம்பைத் தர, “தேங்க்ஸ்.” என்றாள் கரகரத்த குரலில்.

“என்னத்துக்கு?” காரணம் தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே வினவினான்.

“இல்ல, இவ்வளவு நேரமும் அக்கா கதைச்சதுகளை மறக்கவே ஏலாம இருந்தது. இப்ப உங்களோட கதைச்ச பிறகு பரவாயில்ல.” கம்மிய குரலாக வந்தாலும் கொஞ்சம் தெளிந்திருந்தது.

“அப்ப, முதலே எனக்கு எடுத்திருக்கலாம்தானே? நான் எடுக்கிற வரைக்கும் பாத்துக்கொண்டு இருப்பீங்களா? இனி எப்பவும் மனதுக்குப் பாரமா இருந்தாலோ, கவலையா இருந்தாலோ எனக்கு எடுங்க. எடுத்து என்ன எண்டு சொல்லுங்க. அப்பிடி, நீங்க மனம் விட்டுக் கதைக்கிற ஆளா நான் இருக்க ஆசைப்படுறன் யசோ. விளங்குதா?” வாஞ்சையுடன் சொன்னான்.

“ம்.”

“திரும்பவுமா?” என்றான் சன்னச் சிரிப்புடன்.

“இல்ல… விளங்குது.”

“இனி எனக்கு நீங்களா எடுப்பீங்கதானே?”

“ம்… அது எடுப்பன்.”

அவள் அவசரமாகத் தன்னைத் திருத்திக்கொண்டதில் அவன் மெலிதாக நகைத்தான். அந்தச் சத்தம் அவள்
காதிலும் விழுந்து, அவள் முகத்திலும் மெல்லிய முறுவலை மலர வைத்தது. மனதும் இலேசாகிற்று.

“அவ்வளவுதான் விசயம். எதையும் யோசிக்காம நிம்மதியாப் போய்ப் படுங்க. முதல் கலியாணம் எண்டாலே ஆயிரம் பிரச்சினைகள் வரும். இது எங்களுக்கு ரெண்டாவது. ஓராயிரம் பிரச்சினைகள் வருமா இருக்கும். இதுக்கே இப்பிடிச் சோர்ந்து போனா எப்பிடி? எல்லாத்தையும் ரெண்டுபேருமாச் சேந்து சமாளிக்கலாம், சரியா?” என்று, அவள் மனத்தை ஆற்றிவிட்டே அழைப்பைத் துண்டித்தான் அகத்தியன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 16


நிசாந்தினிக்கு இதையெல்லாம் எப்படிக் கணவனிடம் சொல்வது என்று தெரியவே இல்லை. சொல்லாமல் இருக்கவும் முடியாதே! அன்றிரவு ஹயர் முடிந்து வந்தவனிடம் பெரும் தயக்கத்துக்கு மத்தியில் பகிர்ந்துகொண்டாள்.

அவள் பயந்ததற்கு மாறாக, “எவ்வளவு பெரிய நல்ல விசயம் இது? உண்மையச் சொல்லப்போனா இத நாங்க பாத்துச் செய்து வச்சிருக்க வேணும் நிசா. ரெண்டு பிள்ளைகளோட கட்ட எவன் வருவான் எண்டு நாங்களாவே முடிவெடுத்து விட்டிருக்கக் கூடாது. இப்பவும் ஒண்டும் கெட்டுப் போகேல்ல. டவுனுக்க கடை எண்டா சிம்பிளா விசாரிக்கலாம்.” என்றான் அவன்.

நிசாந்தினிக்கு இவன் உண்மையாகத்தான் சொல்கிறானா என்கிற சந்தேகம் வந்தது. “என்ன சொல்லுறீங்க? உங்களுக்கு இதால ஒண்டும் இல்லையா? எனக்கு அயலட்டைச் சனம் என்ன கதைக்குமோ எண்டு இருக்கு.” என்றாள்.

“அயலட்டைச் சனம் எதைத்தான் கதைக்காம விட்டது? நான் அவாவை வேன்ல கூட்டிக்கொண்டு போனாலே ஆயிரம் சொல்லும். இத விட்டு வைக்குமா? அதுக்கெண்டு நாங்க பேசாம இருக்கேலாதெல்லா. நான் விசாரிச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்று முடித்துக்கொண்டான் அவன்.

உண்மையில் நிசாந்தினிக்கு அதற்குப் பிறகுதான் நிம்மதியாயிற்று. கணவனே பார்த்துக்கொள்கிறேன் என்றதில் அவள் மனத்தின் பாரம் அகன்றிருந்தது. ஆனாலும், யசோ மீதான கோபம் போவதாக இல்லை. அடுத்தநாள் காலையில் வேலைக்குப் புறப்பட்டு வந்தவளைக் கண்டுவிட்டு, “அம்மா, அந்த அகத்தியனைப் பற்றி நாங்க விசாரிக்கிறதா எண்டு கேளுங்க. இல்ல, அதையும் அவளே செய்திட்டாளாமா?” என்றாள்.

யசோவுக்குச் சுருக்கென்று வலித்தது. காட்டிக்கொள்ளாமல், “இல்ல விசாரிங்கோ.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

கூடவே, நேற்று அத்தனை மோசமாகக் கதைத்தவளின் இந்த மாற்றம் எப்படி என்கிற யோசனையும் ஓடிற்று.

அவள் அந்த யோசனையில் இருக்க, “அம்மா, ஏன் பெரியம்மா அகத்தியன் மாமாவைப் பற்றி விசாரிக்கப் போறாவாம்?” என்று, ஸ்கூட்டியின் பின்னிருந்து வினவினாள் தூரிகா.

இவளுக்கு ஒருமுறை திக் என்று இருந்தது.

“அது… அவரின்ர கடையில அரிசி, மா, சீனி எல்லாம் இருக்கெல்லோ. அவரிட்ட வாங்கலாமா, இல்ல, விலையோ எண்டு விசாரிக்கப் போறாவாம்.”

“அகத்தியன் மாமா விலையா எல்லாம் விக்கமாட்டார்.” உடனேயே அவனுக்காகப் பரிந்து வந்தாள் அவள் மகள்.

யசோவின் உதட்டோரம் முறுவல் அரும்பிற்று. கூடவே, ‘அவே ரெண்டுபேருக்கும் என்னைப் பிடிக்கும். அவே உங்கள மாதிரி இல்ல.’ என்று அவன் சொன்னதும் நினைவில் வந்து போக, “அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்? அவரிட்ட சரியான விலையாம் எண்டுதான் ஊருக்க கதை அடிபடுது.” என்று பேச்சுக் கொடுத்தாள்.

“அது அகத்தியன் மாமா நல்லவர். அவர் அப்பிடியெல்லாம் செய்யமாட்டார்.”

“ஓ! அப்ப உங்கட அகத்தியன் மாமா லாபமே பாக்காமத்தான் விக்கிறாரோ? பிறகு எங்கால அவருக்குச் சாப்பிடக் காசு வருதாம்?”

“அது… சாப்பிட மட்டும் எடுப்பார். அதைவிடக் கனக்க எடுக்கமாட்டார்.”

யசோவின் உதட்டோர முறுவல் சின்ன நகைப்பாய் மாறிற்று. “அப்பிடியா? அப்ப நான், தூரிகா சொன்னவா, அவர் விலையா விக்க மாட்டாராம், அவரை விசாரிக்க வேண்டாமாம் எண்டு சொல்லிவிடுறன், சரியா.” என்று சொன்னவள் மனத்தில் மெலிதான இதம் பரவிற்று.

காலையில் தமக்கையால் உண்டான காயம் கூட ஆறிய உணர்வு.

அன்று, பள்ளிக்கூடம் முடிந்து அவளை ஏற்றிச்செல்ல வந்தபோது, அவளுக்கு முதலே வந்து நின்றிருந்தான் அகத்தியன்.

அவன் பார்வை, சற்றுத் தடித்திருந்த அவள் கண்மடல்களில் தங்கி மீள, “தாமினியும் வருவா. தூரிய நான் கூட்டிக்கொண்டு போகட்டா?” என்று வினவினான்.

மறுக்க ஒன்றுமில்லைதான். ஆனால் உணவு? அவன் அவளைக் கூட்டிக்கொண்டு போனால் அவள் கொண்டுவந்தது வீணாகிவிடுமே. அதைச் சொன்னால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். என்ன செய்ய என்று அவள் யோசிக்க, “நாங்களும் உங்கட பார்மசிக்கே வாறம். அவவின்ர சாப்பாட்டைத் தாங்க. நாங்க மூண்டுபேரும் பங்கிட்டுச் சாப்பிடுறம்.” என்றவனின் உதட்டினில் மெல்லிய சிரிப்பு.

அவளைக் கண்டுகொண்டிருக்கிறான். என்னவோ, அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் போயிற்று. பிள்ளைகள் வருகிறார்களா என்று பார்ப்பதுபோல் பள்ளிக்கூட வாசலைப் பார்த்தாள்.

அகத்தியனும் அவளைக் கவனித்தாலும் அதற்குமேல் அங்கு வைத்து எதுவும் கதைக்கவில்லை.

தூரிகா வரும்போதே இவனைக் கண்டுவிட்டு, “அகத்தியன் மாமா!” என்று கத்திக்கொண்டு ஓடிவந்தாள்.

சின்னவர்கள் இருவரையும் பின்னால் ஏற்றிக்கொண்ட அவன் பைக், அவளின் ஸ்கூட்டியை பின்தொடர்ந்தது. ஏதோ ஒரு புதுவித உணர்வில் தத்தளித்தபடி ஸ்கூட்டியை செலுத்தினாள் யசோ.

தூரிகாவின் உணவை வாங்கிக்கொண்டு புறப்படுகையில், “தனிய எண்டுபோட்டுச் சாப்பிடாம இருக்கிறேல்ல. சாப்பிடோணும். பிறகு வரேக்க கேப்பன்.” என்று அவள் கண் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனான் அவன்.

எப்போதுமே, இப்படித் தனியாகச் சாப்பிடும் சூழ்நிலைகள் அமைந்தால் சரியாக உண்ணமாட்டாள். உண்ண முடிவதில்லை. உணவை ரசித்து உண்ட நாள்களெல்லாம் தொலைதூரக் கனவுகளாகத் தொலைந்தே போயிற்றே! ஆனால் இன்றைக்கு, அவன் சொன்னதற்காகவே சாப்பிட்டாள். அவளுக்குள் என்ன நிகழ்கிறது என்று சொல்ல முடியாத அளவில் மெல்லிய மாற்றங்கள் பலப்பல!

அன்று மாலை, தூரிகாவை விட வந்தவனின் கண்களில் அப்பட்டமான சிரிப்பு. காரணம் புரியாமல் பார்த்தாள் யசோதினி.

“தூரிக்குட்டி, உங்கட அகத்தியன் மாமாக்கு இவ்வளவு நாளும் ஒரு குடும்பம்தான். இனி, ரெண்டு குடும்பமாகப்போகுது. பொறுப்பும் கூடப்போகுது. காசுத் தேவையும் நிறைய வரப்போகுது. அதால கட்டுபடியாகிற லாபம் வைக்கத்தான் வேணுமாம் எண்டு உங்கட அம்மாட்டச் சொல்லிவிடுங்கோ, சரியா?” என்றவனின் பேச்சில் ஒருகணம் திகைத்தாலும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் யசோ.

இதில், “ஓம் அம்மா. நான் மாமாவைக் கேட்டனான். அவர் விலையா விக்கிறேல்லையாம்.” என்று தூரிகா வேறு விளக்கம் சொல்ல, அவளுக்கு முகமே சூடாயிற்று.

கண்களால் அவளிடம் சிரித்துவிட்டுப் போனான் அகத்தியன்.

“உன்னை ஆரம்மா இதையெல்லாம் போய் அவரிட்டக் கேக்கச் சொன்னது?” என்று அதட்ட முயன்றாள்.

“அப்பதானே அகத்தியன் மாமா விலையா விக்கேல்ல எண்டு பெரியம்மாட்டச் சொல்லலாம். அதுதான் கேட்டனான்.”

“சரிசரி, அத நானே உங்கட பெரியம்மாட்டச் சொல்லுறன். நீங்க போய்ப் படிக்கிற வழியப் பாருங்கோ!” பொய்யாக அதட்டி அவளை உள்ளே அனுப்பியவளுக்குக் கண்ணால் சிரித்துவிட்டுப் போனவனின் நினைவுதான்.

அங்கே, பைக்கில் சென்றுகொண்டிருந்த அகத்தியனின் முகத்திலும் இளம் முறுவல் மலர்ந்தே கிடந்தது. அதுவும், அவள் முகம் சூடானதும், அவன் பார்வையைத் தவிர்த்த விதமும் நெஞ்சை அள்ளியது. ‘அடேய்! எத்தின வயசடா உனக்கு? இப்ப போய்…’ பின் கழுத்தைத் தடவிக் கொடுத்தவனால் அந்தச் சுகமான உணர்வில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. திரும்ப திரும்ப அதையே நினைத்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

அடுத்த ஒரு பத்து நாள்கள் பெரிய சலசலப்புகள் எதுவுமற்று, யசோ வீட்டினர் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்தே கடந்தன.

நானாக எதையும் கேட்பதில்லை என்று இருந்தவளிடம், “என்னைப்பற்றி டவுனுக்க ரெண்டு மூண்டு பேர் வந்து விசாரிச்சவையாம் எண்டு கத வந்தது. வேல நடந்துகொண்டுதான் இருக்கு. வெய்ட் பண்ணுவம்.” என்று அகத்தியனும் சொல்லியிருந்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆனந்தனும் பெயருக்கு விசாரிக்காமல் தன் தகப்பனைக் கொண்டு, நம்பிக்கையான நண்பர்களைக் கொண்டு அவர்கள் வாழும் ஊரில், அவர்களின் சொந்த இடத்தில், டவுனில் என்று நன்றாகவே அலசி ஆராய்ந்தான்.

சவீதா என்கிற ஒரேயொரு கரும்புள்ளியைத் தவிர்த்து அவனுக்கு எல்லாமே திருப்திதான். நிசாந்தினிக்கு அந்தப் புள்ளி பெரிதாகத் தெரிந்தது. சும்மாவே இவள் இரண்டு பிள்ளைகளோடு இன்னொரு வாழ்க்கைக்குள் போகப்போகிறாள். அங்கே, ஏற்கனவே ஒருத்தி நெருஞ்சி முள்ளாகக் காலம் முழுக்க இருப்பாள் என்றால் எப்படி?

அதையே யசோதினியிடம் சொன்னாள்.

“அவாவை நான் பாத்திருக்கிறன் அக்கா. அவரும் இதையெல்லாம் என்னட்ட மறைக்கேல்ல. அதைவிட, என்னைத்தான் கட்டப்போறன் எண்டு அவர் நேராவே சொல்லிட்டார். அப்பிடியே அவா ஏதும் பிரச்சினைக்கு வந்தாலும் அகத்தியன் விடமாட்டார்.” என்ற தங்கையிடம் அதற்குமேல் நிசா எதுவும் சொல்லப் போகவில்லை.

காரணம், அமைதியாக இருந்தாலும் அவள் தன் முடிவில் மிகுந்த தெளிவாக இருக்கிறாள் என்று தெரிந்தது. அடுத்தது, அகத்தியனைப் பற்றிப் பேசுகையில் யசோவிடம் தென்படும் அந்தத் திடம். அது, அவள் அவனை முழுமையாக நம்புவதைச் சொல்லிற்று. கூடவே, இதை நாமே முன்னெடுத்துச் செய்திருக்க வேண்டும் என்று கணவனே சொன்னதிலிருந்து, அவளிடமும் மெல்லிய மாற்றம் உண்டாகியிருந்தது. அதைவிட, அகத்தியனைப் பற்றி ஆனந்தன் சொன்னவைகளும் முழுத் திருப்தியைத் தந்திருந்தன.

கமலாம்பிகை தன் பங்குக்கு இருவரினதும் குறிப்பைக் கொடுத்துப் பார்ப்பித்தார். நல்ல பொருத்தம் என்றும், குறிப்பாக இருவருக்குமே இரண்டாம் வாழ்க்கைதான் நிலைக்கும் என்றும் ஐயா சொல்லிவிட, அவர் சமாதானமாகியிருந்தார்.

அவர்களிடம் இருந்து சம்மதம் என்கிற வார்த்தையைப் பெற்றதும் எதற்கும் தாமதிக்கவில்லை அகத்தியன். அடுத்து வருகிற ஒரு நல்ல நாளிலேயே முகூர்த்தத்தைக் குறித்தான்.

அன்றே அவளுக்கு அழைத்து, “உங்களோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்றான்.

“பின்னேரம் வேல முடிஞ்ச பிறகு கடைக்கு வரவோ?” அவளுக்கும் அவனோடு கதைக்கவேண்டி இருந்ததில் கேட்டாள்.

“இல்ல வேண்டாம். பிறகு லேட்டா போறமாதிரி வந்திடும். இப்ப வரேலுமா?”

“இப்பயோ… ஏலாதே. மகிளா இல்ல. வேணுமெண்டால் பின்னேரம் ஒரு மணித்தியாலம் முந்தி வேலைய முடிச்சுக்கொண்டு வாறன்.” என்று சொன்னவள், சொன்னது போலவே அன்று மாலை அவன் கடைக்குச் சென்றாள். அது ஒரு சனிக்கிழமை என்பதில் தூரிகா வரவில்லை.

ஏற்கனவே வடையும் ரோல்சும் வாங்கி வைத்திருந்தான் அவன். இவள் வந்ததும் இருவருக்கும் தேநீர் ஊற்றினான்.

“கலியாணத்துக்குப் பிறகு என்ன ஐடியா வச்சிருக்கிறீங்க?” தேநீரும் சிற்றுண்டியும் உள்ளே செல்ல வினவினான்.

குறிப்பாக எதைப்பற்றிக் கேட்கிறான்? கேள்வியாக அவனைப் பார்த்தாள் யசோ.

“இல்ல, நாங்க எல்லாரும் எங்க இருக்கிறது எண்டு ஏதும் யோசிச்சீங்களா?”

அந்தக் கேள்வியே அதைப்பற்றி அவன் ஏதோ யோசித்திருக்கிறான் என்று சொல்ல, “உங்கட விருப்பம் என்ன?” என்று வினவினாள்.

அவள் அப்படித் தன்னை விளங்கிக்கொண்டதை மனம் இதமாய் உணர, “எனக்கு எண்டு காணி இருக்குதான். எண்டாலும் வீடு கட்டுற அளவுக்கு இப்ப கையிருப்பு இல்ல. லோனுக்கு மேல லோன் போடுறதை விட, கடை லோனை முடிச்சிட்டு வீடு கட்டலாம் எண்டு நினைச்சன். அந்த லோன் முடியிற வரைக்கும்… இல்ல ஒரு வீடு கட்டுற வரைக்கும் அங்க… உங்கட வீட்டிலேயே இருப்பமா?” என்று வினவினான்.

இருக்கலாம்தான். ஆனால், அது சின்ன வீடாயிற்றே.

அவள் யோசிப்பதைக் கண்டு, “அது, இப்ப நாங்க எல்லாரும் இருக்கிறது அக்காக்குச் சீதனமாக் குடுத்த வீடு. அங்க இருக்கலாம்தான். அத்தான் ஒண்டும் சொல்ல மாட்டார். ஆனா, அவரின்ர வீட்டாக்கள் அக்காவைப் பாக்க, பிறக்கப்போற பிள்ளையைப் பாக்க எண்டு அடிக்கடி வந்து போவினம். எனக்கு உங்களோட ஒரு நிம்மதியான வாழ்க்கை வேணும். அதுதான் யோசிக்கிறன்.” என்றான்.

அவன் இவ்வளவு விளக்கம் சொல்லவே தேவையில்லை என்பதுபோல் இடையிட்டு, “இல்ல இல்ல. இப்ப நாங்க இருக்கிறது ஒரு கொட்டில் வீடு. இருக்க ஒரு வீடு எண்டு கட்டினது. நிலம் சீமெந்துதான். சுவரும் அரைச்சுவர். மேல தகரம் அடிச்சிருக்கிறன். ஒரு அறை, ஒரு ஹோல், குசினி மட்டும்தான். பாத்ரூம் வெளில தனியா இருக்கு. கிணறு பொது.” என்றவளை இப்போது அவன் இடையிட்டான்.

“நான் ஒருத்தன் வந்தா அந்த வீடு காணாது எண்டு சொல்லுறீங்களா?”

“அச்சோ அப்பிடி இல்ல. அது கொட்டில் வீடு…” என்று மீண்டும் அவள் ஆரம்பிக்க, “கொட்டில் எண்டா என்ன? நீங்களும் பிள்ளைகளும் அங்கதானே இருக்கிறீங்க?” என்று கேட்டான் அவன்.

“நான் நினைச்சிருந்தா லோன் எடுத்து இன்னொரு அறையோட நல்ல வீடாக் கட்டியிருக்கலாம். இப்ப என்ன அவசரம் எண்டு பிள்ளைகளின்ர பேர்ல காசப் போட்டு வச்சிருக்கிறன். தப்பித்தவறி நானும் இல்லாமப் போயிட்டா அவேக்கு உதவுமே எண்டு…” என்றவளை மேலே சொல்லவிடாமல், மேசையில் இருந்த அவள் கரத்தைப் பற்றித் தடுத்தான் அகத்தியன்.

தன்னிச்சையாய் அவள் கையை இழுத்துக்கொள்ள முயல அவன் விடவில்லை.

“இதோட ரெண்டாவது தரம் என்னட்ட இப்பிடிச் சொல்லுறீங்க. இனிச் சொல்லாதீங்க, சரியா? மற்றும்படி நீங்க சொல்லுறது எனக்கு விளங்குது. இப்போதைக்கு நானும் அங்கயே வாறன். கொஞ்ச நாளைக்கு இருப்பம். எனக்கு அதால ஒரு குறையும் இல்ல. உங்கட அம்மா, அக்காக்கும் நான் நல்லவனா கெட்டவனா எண்டு பாக்க, நான் பக்கத்தில இருந்தா ஈஸியா இருக்கும்.” என்றதும் அவள் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று.

அதோடு, மெதுவாக மீண்டும் கையை உருவப் பார்த்தாள். அவன் விடுவதாக இல்லை. “இந்தக் கைய இனி விடமாட்டன் எண்டு சொல்லியிருக்கிறன்.” என்றான் அவளையே பார்த்து.

“அதுக்கெண்டு? இது கடை. ஆரும் வந்தாலும்.” முணுமுணுத்தபடி மீண்டும் கையை உருவப் பார்க்க, “இந்த அறைக்க தட்டாம ஆரும் வராயினம். ஆனாலும் பரவாயில்ல.” என்றுவிட்டுத் தானே விட்டான்.

“எனக்கு ரெண்டு விசயம் சொல்லோணும்.” மெல்லச் சொன்னாள்.

“சொல்லுங்கோ.”

“அது… கலியாணம் முடிஞ்சவரைக்கும் சிம்பிளா நடக்கட்டும். அக்கா… அக்காவேட்ட எதுவும் வாங்க விருப்பம் இல்ல. உங்களுக்கு எதுவும் வேணுமெண்டால் சொல்லுங்கோ. என்னட்ட இருக்கிற காசில தரப்பாக்கிறன். நகை… நகையும் கொஞ்சம் இருக்கு…”

அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி அவள் சொல்ல, “இப்ப நீங்க சீதனத்தைப் பற்றிக் கதைக்கிறீங்களா யசோ?” என்று அவள் முகத்தையே பார்த்து வினவினான் அவன்.

அவளுக்கு முகம் இலேசாகக் கன்றிற்று. “அது அப்பிடி எண்டில்லை. எனக்கு அக்கா ஏற்கனவே நிறையச் செய்திட்டா. திரும்பவும் அவாக்குச் சிரமம் குடுக்கக் கூடாது எண்டு… அதான்…”

“உண்மையாவே பெரிய செலவு ஒண்டும் வராது யசோ. எனக்கும் பிள்ளைகளுக்கு முன்னால எந்த ஆர்ப்பாட்டமும் செய்ய விருப்பம் இல்ல. அது தேவையும் இல்ல. கலியாணத்துக்கு வரபோறது எங்கட குடும்பங்கள் மட்டும்தான். மற்றும்படி சொந்தக்காரருக்குக் கூடச் சொல்லவேணாம் எண்டு சொல்லீட்டன். அதால அடிப்படைக் கலியாணச் செலவும் சாப்பாட்டுச் செலவும் மட்டும்தான் வரப்போகுது. அத நானே பாப்பன்.” என்றான் விளக்கமாக.

அப்போதுதான் அவளுக்கு நிம்மதியாயிற்று. அவள் நிமிர, “அடுத்தது என்ன?” என்றான்.

“அது… எந்தக் காலத்திலையும் வேலைய விடச்சொல்லி நீங்க சொல்லக் கூடாது. நான் வேல செய்வன்.” மெல்லிய தயக்கம் இருந்தாலும் சொன்னாள்.

“மூண்டாவதா பிள்ளை வந்தாலுமா?” என்றதும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அன்றைக்குப் போன்றே அவள் முகம் சூடாவதைப் பார்த்து ரசித்தான் அகத்தியன். அவனுக்குள் சில்லென்று ஒரு உணர்வு இனித்துக்கொண்டு பரவிற்று.

“அப்பிடி ஒண்டு நடந்தா எப்பிடி நான் வேலைக்கு வருவன்?” அவனைப் பாராமலேயே கேட்டாள். “ஆனா, பிள்ளை வளந்த பிறகு திரும்பவும் வருவன்.”

“ஓகே! எப்பிடியும் என்னைவிடப் பிள்ளைகளில் கவனமாவும் அக்கறையாவும் நீங்கதான் இருக்கப் போறீங்க. அதால, எதுவா இருந்தாலும் அது உங்கட முடிவாத்தான் இருக்கும். சரியா?” வாதாடப் போகாமல் அவள் முடிவுக்கே விட்டான்.

அதன் பிறகுதான் அவளுக்கு நிம்மதியாயிற்று.
 
Status
Not open for further replies.
Top Bottom